வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!!

செட்டிகுளம் – அரசடிக்குளம் பகுதியில் மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிவதீசன் வயது 43 என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தன

கணவன் வேலைக்காக வெளிநாடு சென்றதால் இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காதல் திருமணம் செய்த பின்னர், வேலைக்காக கணவன் தன்னை விட்டு விட்டு வெளிநாடு புறப்பட்டு சென்றதால் புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனவர் முருகன். இவருடைய இளைய மகள் 23 வயது முத்தரசி.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான லட்சுமணணை என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு லட்சுமணன் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இதனையடுத்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு தர்மபுரியில் உள்ள லட்சுமணனின் குலதெய்வ கோவிலில் முத்தரசியை அவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சுனாமி குடியிருப்பில் முத்தரசியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமணனுக்கு, குவைத் நாட்டில் வேலை பார்ப்பதற்காக அழைப்பு வந்ததாக தெரிகிறது.

இதனால் லட்சுமணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும் இதற்காக பாஸ்போர்ட், விசா எடுத்த அவர் குவைத் நாட்டில் வேலை செய்ய போகும் கம்பெனியின் கிளை அலுவலகம் உள்ள மும்பைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக காதல் கணவரை பிரிந்து இருந்த முத்தரசி, அவரை அவ்வப்போது தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல வேண்டாம் என கூறிவந்தார். முத்தரசியின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தந்தை முருகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மாடி பகுதியில் உள்ள கீற்று கொட்டகைக்கு சென்ற முத்தரசி நீண்ட நேரம் ஆகியும் கீழே இறங்கி வரவேயில்லை.

பின்னர் மாடியில் சென்று பார்த்தபோது அங்கு முத்தரசி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் முத்தரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள முத்தரசியின் கணவர் லட்சுமணனும் ஊர் திரும்பி வருகிறார். கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

காதலி உட்பட 5 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்த இளைஞன்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பேருமலை பகுதியில் வசித்து வருபவர் 23 வயது அபான். இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்

அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை கைது தீவிர விசாரணை நடத்தினர் அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார்.

மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவர் கூறிய இடங்களுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். படுகாயங்களுடன் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் யானை பேருமலை பகுதியை சேர்ந்தவர் ரஹிம்.

இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபான் (வயது 23), இளைய மகன் அப்சான் (வயது 13). ரஹிம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிற்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். கொரோனாவுக்குபின் அபான் கேரளா திரும்பிவிட்டார். ரஹிம் மட்டும் அரபு நாட்டில் தொழில் செய்து வந்தார்.

அபானின் பாட்டி சல்மாபீவி (வயது 88). இவர் பாங்கோட்டிலும் , அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதா. இவர்கள் இருவரும் சுள்ளாளத்திலும் வசித்து வந்தனர். இதில் அபானின் காதலி பசானா.

இவர் கல்லூரி படித்து வந்தார். அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.

குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தொழில் தொடங்கவும் அபான் தனது பாட்டி சல்மாபீவி, சித்தப்பா லத்தீப் இடம் பண உதவி கேட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததற்கும் அபானின் தாயார் உள்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், குடும்பத்தில் பெரும் பிரச்சினை வெடித்தது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, தொழில் தொடங்க உறவினர்கள் பணம் தராதது ஆத்திமடைந்த அபான் புதிதாக வாங்கிய சுத்தியலை எடுத்துக்கொண்டு நேற்று மாலை பைக்கில் பாங்கோட்டில் உள்ள பாட்டி சல்மாபீவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த பாட்டி சல்மாபீவியை சுத்தியலால் அடித்த அபான் அவரை கொடூரமாக கொலை செய்தார். ஆத்திரம் அடங்காத அபான் பைக்கில் சுள்ளாளத் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்று சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாவையும் சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர், காதலி பசானாவின் வீட்டிற்கு சென்ற அபான் அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தார். தனது வீட்டில் இருந்த தாயார் ஷெமி, தம்பி அப்சானை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

பின்னர், மாடியில் உள்ள அறைக்கு சென்ற அபான் அங்கு இருந்த தனது காதலி பசானாவையும் சுத்தியலால் தாக்கினார். இந்த கொடூர தாக்குதலலில் அப்சான், பசானா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தாயார் ஷெமி படுகாயமடைந்தார். அவரும் உயிரிழந்துவிட்டதாக நினைத்த அபான் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளார். பின்னர், அபான் தானும் தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த அவர் ஆட்டோவில் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாக கூறியுள்ளார்.

அபான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அபானின் தாயார் ஷெமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேவேளை, பாட்டி, சித்தி, சித்தப்பா, தம்பி, காதலி என 5 பேரை அபான் சுத்தியலால் அடித்துக்கொலை செய்துள்ளார். விஷம் குடித்த அபானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் : நீதிகோரி தந்தை முறைப்பாடு!!

யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் தந்தை , தனது மகளின் உடலில் தீ பற்றியமை தொடர்பில் சந்தேகம் உள்ளதாக , கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல, மாறாக ஒரு சந்தேகத்திற்குரிய கொலை என்பதை வலுவாகக் காட்டுகின்றன.

இத்தகைய குற்றத்தின் கடுமையான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என , மகளை பறிகொடுத்த தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் கடந்த 17ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த 33 வயதான ஆறு மாத கர்ப்பிணியே உயிரிழந்தவர் ஆவார்,

கடந்த 14ஆம் திகதி படுக்கையறையில் இருந்த நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியதாக கூறப்பட்டு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.

எனினும், பெண்ணின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக பெண்ணுக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிய இணைய நிதி மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஒன்லைன் மோசடி மூலம் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து ரூ. 05 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் புற்றுநோய் நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிகிச்சைக்கான நன்கொடைகளை சேகரிப்பதற்கு உதவுவதாகக் கூறி, அவர்களின் வங்கிக் கணக்குகள் உட்பட தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் நோயாளிகளின் விவரங்களைப் பயன்படுத்தி போலி தேசிய அடையாள அட்டைகளை (NIC) உருவாக்கி, முன்னைய எண் தொலைந்துவிட்டதாகக் கூறி, புதிய சிம் கார்டுகளையும் பெற்றுள்ளனர்.

புற்றுநோய் நோயாளிகளின் அதே எண்களைக் கொண்ட சிம் கார்டுகளைப் பெற்ற பிறகு, அவர்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி ரூ.5 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மோசடி தொடர்பாக ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள், இதுபோன்ற ஒன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இளைஞனின் கையை முறித்த விவகாரம் : பொலிஸாரை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!!

நெல்லியடி – மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை தாக்கி கையை முறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நான்காம் திகதி விசாரணைக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்முக்கு சொந்தமான கேபிள் வயர்கள் அறுக்கட்டமை தொடர்பில் மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் நெல்லியடிப் பொலிஸாரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தன்னை, பொலிஸ் காவலில் தாக்கி கையை முறித்தார்கள் என பாதிக்கப்பட்ட இளைஞன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததோடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.

இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கும் குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் அழைப்புக் கட்டளை அனுப்பியுள்ளது.

ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : புலனாய்வுப் பிரிவின் முக்கிய தகவல்!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்வேறு மக்கள் சந்திப்புகளின் போது பொதுமக்கள் மத்தியில் கலந்து கொள்வது, அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அரச புலனாய்வு பிரிவு கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, நாட்டில் தற்போது காணப்படும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதுடன், அவற்றுக்கு பின்னால் வேறு சக்திகள் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் சந்தேகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், புலனாய்வு பிரிவு இந்த குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ளவர்களை தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு மிக அருகிலேயே சென்று, நேரடியாக அவர்களுடன் கலந்துரையாடும் தன்மை கடந்த நாட்களில் கண்கூடாகக் காணப்பட்டது.

ஆனால், இந்த அணுகுமுறை ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்று சிலர் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ள போதிலும், பல தரப்பினரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை முன்வைத்துள்ளனர்.

இதனால், , ஜனாதிபதி மக்களுடன் நேரடியாக கலந்துகொள்வதை குறைக்க வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் : யாழ் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையில் 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வு!!

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் வரும் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சூரியன் மறைந்த பின்னர் இலங்கைக்கும் இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து கிரகங்களையும் ஒரே பொதுவான பாதையில் இதன்போது பார்க்க முடியும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து மேலும் நால்வர் இந்தியாவில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று (25.02.2025) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.

கடலில் தத்தளித்தவர்களை தமிழக கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : செவ்வந்தியின் தாயும், தம்பியும் கைது!!

கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு சந்தேக நபரும் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

முல்லைத்தீவில் குரங்கால் உயிரிழந்த 3 பிள்ளைகளின் தாய்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்.

பயணித்துக் கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதில் தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார். மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 16 வருடங்களாக மகனை தேடிவந்த தாய் உயிரிழப்பு : தொடரும் சோகம்!!

இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடிய தாயார், மகனை காணாமலே உயிரிழந்துள்ளமை பெரும் தூயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான நேற்று (24.02) தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார். இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.

இதேவேளை, உயிரிழந்த தாயார் , உறவுகளை தேடிய காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (24.02.2025) பிற்பகல் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கயஸ் வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியின் நடனத்தால் பிரிந்த காதலனின் உயிர்!!

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த குறித்த இளைஞன் ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது காதலி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உறவை முறித்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞன் மீண்டும் காதல் உறவை கட்டியெழுப்ப முயன்ற நிலையில் இளம் பெண் அதற்கு உடன்படவில்லை.

இதற்கிடையில், குறித்த இளைஞன் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்க்க சனிக்கிழமை (22) சென்றபோது, ​​தன்னுடைய காதலி இன்னொரு இளைஞனுடன் நடனமாடுவதைக் கண்டு மனமுடைந்து, மைதானத்திலிருந்து வீடு திரும்பிய இளைஞன் தனது அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.