500 ரூபாவுக்காக பல்கலை மாணவியின் நிர்வாண படத்தை பகிர்ந்த மாணவன்!!

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் அபராதம் விதித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவருக்கு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்கப்பட்டது.

சந்தேக நபர் மீது ஆபாச புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பல்கலைக்கழக மாணவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதங்களில், பிரதிவாதி விரைவில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று கூறினார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட புகைப்படத்தை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியதாகவும், சந்தேக நபரோ அல்லது புகார்தாரரோ குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்யப்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான செயல், குற்றம் சாட்டப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வருடத்திலேயே செய்த குற்றமாகும்.

வைத்தியசாலையில் நடந்த துயர சம்பவம் : பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!!

திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, ​​அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது.

பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது.

அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை!!

179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு, பேருவளை கடல் எல்லையில் மீன்பிடி படகில் ஹெரோயின் கடத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், மூவர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் நீதியரசர் ஆதித்யா படபெந்தி மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹெராயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து சந்தேகநபர்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிலோ கணக்கிலான தங்கத்துடன் சிக்கிய நபர்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்த 2 பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை வாகன உதிரி பாகங்களில் மறைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகப் பாதை வழியாக வெளியேற முயற்சித்த 2 பயணிகள் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் எனவும் மற்றவர் கண்டி ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும், வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் நேற்று காலை 8.30 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் இருந்த 6 கிலோகிராம் 700 கிராம் எடையுள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகன தாங்கி அமைப்புகளுக்குள் 21 தங்க பிஸ்கட்டுகளையும் வாகன குளிரூட்டும் அமைப்புடன் தொடர்புடைய நீர் பம்ப் பாகங்களுக்குள் உருக்கி அந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட பல தங்கக் கட்டிகளையும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரண்டு பயணிகளும் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த தங்கமும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.

வவுனியாவில் கிறிஸ்டி குகராஜாவின் 26வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்ரி குகராஜாவின்(குகன்) 26 வது நினைவுதினம் வவுனியாவில் இன்று (15.05.2025) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு அன்னாரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு : சங்கு, தமிழரசு உடன்பாடு!!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சிஅமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15.05.2025) இடம்பெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை.

சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக் கொள்வோம். அத்துடன் சிலகட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது.

அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சிமன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த இணக்கப்பாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவிற்கு வருவார்கள் என எதிர்பார்கிறோம். என்றார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

வவுனியா ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாமையுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப்படையின் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக பலி!!

மங்களகம பொலிஸ் பிரிவில் அம்பாறை – கண்டி வீதியில், லொறி ஒன்று சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து நேற்று புதன்கிழமை (14.05) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

மஹாஓயாவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற லொறி ஒன்று, அதே திசையில் பயணித்த சைக்கிளில் சென்ற ஒருவர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் சென்றவர் செனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மஹாஓயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, லொறியின் சாரதி காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகையில் இடம்பிடித்த இரண்டு இலங்கையர்கள்!!

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இரண்டு இலங்கையர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 ​பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாமவராக வைல்ட் குக் புக் (Wild Cookbook) எனும் பெயரில் யூடியூப்பில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சரித் என் சில்வா இடம்பிடித்துள்ளார்.

கொவிட் தொற்றுக் காலத்தில் திறந்த வெளியில் சமைப்பதை internet sensation ஆக மாற்றியிருந்தார். இன்றைய நிலையில் பத்து மில்லியன் யூடியூப் பின்பற்றுனர்கள் மற்றும் 2.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்பற்றுனர்கள் அவரின் ரசிகர்களாக உள்ளனர்.

அவர் ஒரு படைப்பாளியாக மாத்திரமன்றி, கொழும்பில் WILDISH எனும் பெயரில் உணவகமொன்றை ஆரம்பித்ததன் மூலம் வர்த்தகராகவும் மாறியுள்ளார்.

இரண்டாமவரான யானிக அமரசேகர சியகுணே என்பவர் இலங்கையின் முதலாவது ஒன்லைன் திருமண பதிவேடான(online wedding registry) சில்வர் ஐல் (Silver Isle) தளத்தை உருவாக்கியவர் ஆவார்.

திருமணப் பரிசுகள் தொடக்கம் விடுமுறையைக் கழிப்பது வரை வாழ்வின் முக்கிய கட்டங்களை மகிழ்வுடன் கழிப்பதற்கான ஏற்பாடுகளை புதியவழிமுறைகளில் அவர் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்.

அத்துடன் தற்போதைக்கு எல்.பி. பினான்ஸ் நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர்களில் ஒருவராகவும் செயற்படுகின்றார். இவர்கள் இருவரும் ஆசியாவின் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட திறமைசாலிகளாக போர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் 13000 லீட்டர் எரிபொருள் மாயம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்த பெருமளவு எரிபொருள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14.05) கொலன்னாவிலிருந்து ஹட்டன் வழியாக வெளிமடை நோக்கி பயணிக்கும்போதே பௌசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பௌசரில் 33,000 லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் கசிந்து வெளியேறி வீணாகியுள்ளதுடன் எரிபொருள் குறித்த பகுதியில் பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பௌசரில் இருந்து கசிந்த எரிபொருளை பெருந்திரளான பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் உடனடியாக சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மேலும் கசிவைத் தடுக்க எஞ்சிய எரிபொருளை மற்றைய பெளசர்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும் 20 ஆயிரம் எரிபொருள் மாத்திரம் எஞ்சியதாகவும் ஏனையவை கசிவின்போது பொதுமக்கள் சேகரித்துக்கொண்டதாகவும் சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிபொருள் கசிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள நீரோடையில் எரிபொருள் கலந்ததால் அந்த நீரை பயன்படுத்தும் பிரதேச மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளை அந்த நீர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நொறுக்குத் தீனியால் அடிபாடு : 14 வயது சிறுவனை கொலை செய்த 12 சிறுவன்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 14 வயது சிறுவனை 12 சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். குறித்த இரு சிறுவர்களும் ஒரே பாடசாலையில் 8 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததால் நெருக்கமாக பழகியுள்ளனர்.

விளையாடிக் கொண்டிருந்த போது 5 ரூபாய் மதிப்பிலான நொறுக்குத் தீனியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியை எடுத்து வந்து, எட்டாம் வகுப்பு மாணவரை கண்மூடித்தனமாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், ஆறாம் வகுப்பு மாணவரை கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெசாக் நிகழ்வை கண்டுகளிக்கச் சென்ற காதலர்களுக்கு நேர்ந்த துயரம்!!

மாத்தறை – தங்காலை கரையோர வீதியில் நேற்று முன்தினம் (13.05) இரவு இடம்பெற்ற விபத்தில் காதலர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்துச் செல்ல முயன்ற போது, மோட்டார் சைக்கிளானது வீதியில் சறுக்கிச் சென்று பஸ்ஸுக்கு அடியில் சிக்கி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த காதலர்கள் இருவர் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய காதலியும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய காதலனுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெசாக் அலங்காரங்களை கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 15 வயது சிறுமி கர்ப்பம் : சந்தேகநபர் கைது!!

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!!

நாட்டில் மரக்கறி வகைகளின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மரக்கறி விலைகள் உயர்வடைந்ததாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி வகைகள் அழிவடைந்ததனால் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், அதனால் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

ஆர். ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பில், எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று(15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரிய ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சமர்ப்பிப்புக்களை பரிசீலித்த நீதிபதி, ஜூலை 21ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தான் பணிபுரிந்த பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்தார். இது தொடர்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனடிப்படையில், வெலிக்கடை பொலிஸில் பணியாற்றிய ஒரு துணை ஆய்வாளர் உட்பட மூன்று அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் ஏற்பட்ட கோர விபத்து : பெண்கள் உட்பட சிலரின் நிலைமை கவலைக்கிடம்!!

நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற வான் ஒன்று றம்பொடை பகுதியில் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தனர்.

அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வான் ஓட்டுநர் உட்பட 4 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கொத்மலை மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் கம்பளை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காயமடைந்த நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கண்டி பொது மருத்துவமனைக்கும், ஒரு குழந்தை பேராதனை மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு ராஜாங்கனை பகுதியிலிருந்து பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 11ஆம் திகதி கொத்மலை – இறம்பொட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு அண்மித்த பிரதேசத்தில் நேற்றையதினம் மற்றுமொரு விபத்து சம்பவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.