இலங்கையில் புற்றுநோயால் நாள் ஒன்றுக்கு 4 பேர் உயிரிழப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர், நாட்டில் ஆண்களிடையே பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்று முதலிடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு 2000 முதல் 3000 பேருக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

அவருடைய விளக்கத்தின்படி, வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் அதன் ஆரம்ப அறிகுறிகள் தென்படும். எனவே ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்தால், 90% வரை கட்டுப்படுத்த முடியும்.

இதன் முக்கிய காரணிகளாக புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாடு, மதுபானம், பாக்கு மற்றும் வைரஸ் தொற்றுகள் உள்ளன.

இன்றைய சூழலில், பாடசாலை மாணவர்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்து வருவதால், அவர்களுக்குள் வாய்ப்புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன என்று வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

 

வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளை வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும்.

நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

 

டிக்டொக் காதல் : 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது!!

குருநாகல் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன், டிக்டொக் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை காதல் உறவு கொள்ளச் செய்து, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கல்னேவ பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி டிக்டொக் சமூக ஊடகம் மூலம் சிறுமி மாணவனை அடையாளம் கண்டு, அவருடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியைப் பார்க்க கல்னேவ காவல் பிரிவில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு அந்த மாணவர் வந்துள்ளார்.

குருநாகலிலிருந்து கல்னேவவுக்கு வந்த மாணவன், தனது வீட்டுக்கு திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால், சிறுமியின் தாயாரின் வேண்டுகோளின் பேரில் அன்றிரவு வீட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும் சிறுமியின் வாக்குமூலங்கள் கூறுகின்றன.

அன்று இரவு, சந்தேகத்திற்குரிய மாணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் வாக்குமூலங்களில், அவர் வீட்டில் தனியாக இருந்தபோது மாணவன் பலமுறை அவரிடம் வந்ததாகவும், இதைப் பற்றி சிறுமி யாரிடமும் சொல்லவில்லை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட ‘மயக்கம்’ காரணமாக, சிறுமியின் தாயார் தம்புத்தேகமவில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற பிறகு, சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர் தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தம்புத்தேகம மருத்துவமனை பொலிசார் மூலம் கல்னேவ பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடற்கரையில் நடந்த கொலை : பொலிஸார் சந்தேகம்!!

குருநாகல் – உஸ்வெட்டகேயிய – மோர்கன்வத்த கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தவர் அயோசாந்த போபயாரச்சி (40) என்றும், அவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் போதைப்பொருள் வலைப்பின்னலில் செயல்படுபவர் என்றும், மூன்று மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து நாட்டிற்கு வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கந்தானை பகுதியில் அவர் கொண்டு சென்ற ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த நபர் விடுவிக்கப்பட்டார், போதைப்பொருள் மற்றும் அதை எடுத்துச் சென்ற நபர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துபாயில் உள்ள பாதாள உலக பிரமுகரான துபாய் களன என்பவரால் இந்த கொலை நடத்தப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த கொலைக்கு பின்னால் போதைப்பொருள் கடத்தல் உள்ளது என்றும், இந்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் செல்லும் புலம்பெயர் தமிழர்களே அவதானம் : யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம்(21) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் இப் பெண், மோசடியாக பணம் பெற்றுள்ளார்.

தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் கூறி போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து யாழிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

பெண்ணுக்கு பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் புலம்பெயர் தமிழர், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன் பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் மோசடி பெண்ணை கைது செய்டஹ் பொலிஸார் , பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் , யாழ்ப்பாணம் வரும் புலமபெயர் தமிழர்கள் , தாம் கஸ்ரப்பட்டு சம்பாதித்த பணத்தை இவ்வாறான மோசடி செய்யும் நபர்களிடம் கொடுத்து ஏமாறாதீர்கள் என சமூக ஆர்வர்கள் கூறியுள்ளனர்.

மீண்டும் மனிதர்களிடையே பரவும் புதிய வகை கோவிட் 19 வைரஸ் வெளியான அதிர்ச்சி தகவல்!!

புதிய வகை வௌவால் கோவிட் 19 வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வில், வௌவால் கோவிட் 19 வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.

புதிய வகை கோவிட் 19 வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்,” என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீன ஆய்வகம்

இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன. கோவிட் 19 வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுகிறது. இது தவிர கோவிட் 19 வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென தீப்பற்றிய பயணிகள் பேருந்து – ஒருவர் பலி!!

அனுராதபுரத்தில் இன்று காலை ஒரு பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாங்கொடையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து தீக்கிரையாகியுள்ளது. பேரூந்தும் முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

மித்தெனிய கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!!

மித்தெனியவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு ஆறு வயது சிறுமி மற்றும் ஒன்பது வயது சிறுவன் உட்பட மூன்று நபர்களின் மரணம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது, ​​குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இரண்டு கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை ஒரு பொலிஸ் அதிகாரியுடையது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் விளைவாக தங்காலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு மித்தேனிய கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகனும் மகளும் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்ததோடு, ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த திட்டம் : கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிப்பு!!

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று (22.0.2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன.

புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அக்குழுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றுக்கெதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும், அவற்றுக்கு சுமார் 1400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் வவுனியா மாவட்ட சாரணர்கள்!!

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரோபர்ட் பேடன் பவல் பிரபுவின் 168வது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சாரண சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர்கள் வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் நிகழ்வு இன்று (22.02.2025) காலை 9 மணியளவில் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.

இதன்படி வவுனியா புகையிரத நிலையம், தாண்டிக்குளம் புகையிரத நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், புளியங்குளம் புகையிரத நிலையம், செட்டிக்குளம் புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங்களை இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் அழகுபடுத்தும் செயற்பாடுகளில் வவுனியா சாரணர்கள் ஈடுபட்டனர்.

இத்திட்டம் தேசிய சாரணர் தலைமையகத்தின் கருத்தாக்கம் மற்றும் “Clean SriLanka” உடன் இணைந்து செயற்படும் தேசிய வேலைத்திட்டமாகும்.

இதன் பிரதான நிகழ்வு வவுனியா பிரதான புகையிரத நிலையத்தில் இடம்பெற்றமையுடன் புகையிரத நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளிலுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், ஏனைய கழிவுகளை அகற்றி புகையிரத நிலையத்தினை துய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.

கொட்டாஞ்சேனையில் தமிழர் சுட்டுக்கொலை : கொலையாளிகள் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!!

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழும்போது பலரை ஆட்டிப்படைத்த கனேமுல்ல சஞ்சீவ : அநாதரவாக அடக்கம்!!

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக் குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவ, உடல் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி மற்றும் சக நண்பர்கள் உடலை அடக்கம் செய்திருந்தனர்.

கடந்த 19 ஆம் திகதி , கொழும்பு -புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவ சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலானபோது சடலத்தை யாரும் பொறுபேற்க முனவரவில்லை என நேற்றைதினம் (20) பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவரது சகோதரி சடலத்தை பொறுப்பேற்க முன்வந்ததாக கூறப்பட்டிருந்த்து .

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையின் உட்கட்டமைபை விருத்தி செய்ய நடவடிக்கை!!

அரசாங்கத்தின் க்கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் படையினரின் பங்கேற்புடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் பாடசாலையின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இன்று (21.02) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா பம்பைமடு பகுதியில் இருந்து வருகை தந்த இராணுவத்தினர், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து பாடசாலையின் சூழல், குடிநீர் விநியோகம், மலசல கூடம், மைதானம் என்பவற்றை சுத்தம் செய்து திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பாடசாலையில் அபாயமாக இருந்த மரங்களும் அகற்றப்பட்டன.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் இந்த மாத ஆரம்பத்தில் பாடசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர், அவர் விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

வவுனியா -மன்னார் வீதியில் விபத்து : பெண் படுகாயம்!!

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் ஏற முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக கொழும்பு நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து பதாதை!!

கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து வவுனியா மேல் நீதி மன்றம் முன்பாக பதாதை காட்சிப்படுத்தப்பட்டது.

நேற்று (20.02) காட்சிப்படுத்தப்பட்ட குறித்த பதாதையானது அகில இலங்கை நீதிமன்ற ஊழியர் சங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கௌரவ நீதிபதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? என அப் பதாதையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!!

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச் சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு நேற்று (20.01) வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது சுவிஸ்குமாரிடமிருந்து பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.

மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜன் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.