கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் : விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்!!

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த விசாரணைகள் நடைபெற்றுள்ளது.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக சிறுமி தவறான முடிவெடுத்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இறந்த சிறுமியின் தாயாரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.

இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி : விலையில் ஏற்படும் மாற்றம்!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைந்ததுள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 255,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 234,000 ரூபாவாகவும், 18 கரட் தங்க பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்!!

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்களுக்கும், நிரந்தர குடியிருப்பு இல்லாத ஒருவருக்கும் இடையே தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக 38 வயதுடைய நபரை இளைஞர்கள் தடிகளால் அடித்து உதைத்து கொலை செய்தனர். இந்தக் கொலை நேற்று முன்தினம் இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொரளை, வனாத்தமுல்ல பகுதியை சேர்ந்த 19 முதல் 22 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த நபரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தது.

எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!!

மேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதோடு இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தலவாக்கலையில் கார் குடைசாய்ந்து விபத்து!!

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (14.05 மாலை அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்பு ஒன்றில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காரை செலுத்திச் சென்ற சட்டதரணி காயமின்றி உயிர் தப்பியுள்ளார். காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 வயதில் அசிட் வீச்சில் பார்வையிழந்த மாணவி : 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்!!

3 வயதில் ஆசிட் தாக்குதலால் பார்வையிழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய மாநிலமான அரியானா, ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் கஃபி (17). இவர் 2011-ம் ஆண்டில் தனக்கு 3 வயதாக இருக்கும் போது ஆசிட் தாக்குதலால் பார்வையிழந்தார்.

அப்போது இருந்தே இவர் பல சிரமங்களை கண்டுள்ளார். ஆனால், தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இவர் சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வந்தார். அங்கு ஆடியோ புக்குகள் மூலமாக பயிற்றுவிக்கப்பட்டது.

இவருக்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும் கூறுகிறார். இதற்காக இவர் ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக தேர்வை எழுதிவிட்டு சீட்டிற்காக காத்திருக்கிறார்.

இது குறித்து மாணவி கூறுகையில், “என்னுடைய மூன்று வயதில் பக்கத்து வீட்டார் என் மீது அமிலத்தை ஊற்றினார். பின்னர், மருத்துவர்கள் எனது உயிரை காப்பாற்றினர். ஆனால், அவர்களால் என்னுடைய பார்வையை கொண்டு வர முடியவில்லை.

என்னை காயப்படுத்தியவர்கள் தற்போது சுதந்திரமாக இருக்கின்றனர். அவர்களை சட்டத்திற்கு முன்பு கொண்டு செல்லவில்லை” என்றார்.

இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் : இரு சகோதர்கள் உட்பட நால்வர் பரிதாபமாக பலி!!

நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற இரு சகோதர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய உதயகுமார் ஸ்ரீதரன்,

19 வயதுடைய ஸ்ரீகாந்த் சரண் ராஜ், 18 வயதுடைய ஸ்ரீகாந்த் அஜித் குமார் மற்றும் 27 வயதுடைய யூசுப் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ள டீச்சர் அம்மா!!

இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, சர்ச்சைக்குரிய ஆசிரியை ஹயேசிகா பெர்னாண்டோ தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.

அவரை கைது செய்வதற்காக, மூன்று பொலிஸ்; குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தனியார் கல்வி நிலையத்தில், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்களிடையே ‘டீச்சர் அம்மா என்று அறியப்பட்ட ஹயேசிகா பெர்னாண்டோ, கடந்த வாரம் நீர்கொழும்பில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையி;ல் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டீச்சர் அம்மா, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருகிறார்.

கட்டான பொலிஸார் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், குறித்த ஆசிரியை அந்த இளைஞரின் இடுப்பில் உதைத்ததாகவும், பின்னர் அவரது கணவரும் மேலாளரும் அந்த இளைஞரை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

தனது ஊழியர்களில் ஒருவரான இளம் பெண் ஒருவருக்கு, கணினி செயல்பாடுகளில் பயிற்சி அளிக்க குறித்த இளைஞர் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்தநிலையில் குறித்த இளைஞர், இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் காரணமாகவே, சம்பந்தப்பட்ட இளைஞர், சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும்; இருவரால் இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஆசிரியை தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தமது தொலைபேசியில் இருந்து அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பில் கோர விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி!!

கொழும்பு, பிலியந்தலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துக்கள் தொடர்பாக காரை ஓட்டி வந்த கணக்காளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்த பெண், வேலை முடிந்து வீதியின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக கடக்கும் போது, ​​கார் வெலட மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த பெண்ணை சந்தேகநபரான சாரதியே பிலியந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார். சந்தேகநபரின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது மகளைக் கொன்று தந்தைஎடுத்த விபரீத முடிவு!!

கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50) ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி செல்வி (45).

இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

இந்நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய மகள் சந்தியா வீட்டில் சமையல் செய்து தனது தந்தை மூலம் தாயார் மற்றும் அக்காளுக்கு அனுப்பி வந்துள்ளார்.

நேற்று மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் செல்வியும், ரஞ்சனியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சந்தியா கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், ரவி தூக்கில் தொங்கியவாறும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவி தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!!

யாழ்ப்பாணம் (Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம் (13.05.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

 

மகியங்கனை அருகே விபத்திற்குள்ளான சொகுசுப் பேருந்து!!

மகியங்கனை அருகே இன்று(14) அதிகாலை சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் குறித்த சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகியங்கனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மீண்டுமொரு விபத்து நீராடச் சென்ற சிறுமிகள் பலி!!

குருநாகல் பகுதியிலுள்ள கல்கமுவ பலுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (13.05) மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், ஏரியில் நீராடச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்களின் சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமண நிகழ்வில் புகையால் 7 வயதுச் சிறுமி மூச்சுத்திணறி பலி!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள்.

அப்போது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்த 7 வயது சிறுமி வாஹினி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வாஹினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் இந்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான தருணத்திலும் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் கண்களை தானமாக கொடுக்க முடிவு செய்தனர்.

இது குறித்து சிறுமியின் தந்தை எங்கள் மகள் இப்போது இல்லை என்றாலும் அவளுடைய கண்கள் வேறு ஒருவருக்கு பார்வை தரும் என்பதை நினைத்தாலே மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

போட்டி ஓட்டத்தில் முச்சக்கரவண்டிகள் கவிழ்ந்து ஆறு பேர் காயம்!!

கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது, ​​இரண்டு முச்சக்கர வண்டிகளும் மோதிக் கொண்டு வீதியில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

பொலன்னறுவை, மனம்பிடிய நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றதாக மனம்பிடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டிகளில் பயணித்த மூன்று வயது சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெசாக் கொண்டாடுவதற்காக பொலன்னறுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹசலக மற்றும் திம்புலாகல பகுதிகளைச் சேர்ந்த குழுவினரே விபத்துக்குள்ளானதாக மனம்பிட்டிய பொலிஸார் கூறுகின்றனர்.

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி : பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!!

இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுகள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை கருத்து தெரிவிக்கையில், “எனது மகள் 2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்.

எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு 5 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை. கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று,

இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.

எனவே இவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி குறைவாக காணப்படுகிறது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.