உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!!

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று உழவு இயந்திரம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிழந்துடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று முன்தினம் (17.02) கரை வலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உழவு இயந்திரம் அங்கிருந்த படகு ஒன்றினை இழுத்தெடுப்பதற்கு முற்பட்டதாகவும்,

இதன்போது குறித்த உழவு இயந்திரம் திடீரென தலை கீழாக கவிழ்ந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்திற்குள் சாரதியும், மற்றுமொரு நபரும் நசுங்கி காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவ்விருவரையும் உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும், உழவு இயந்திரத்தின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிழந்தவரின் சடலம் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பள்ளிவாசல்பாடு கிராமத்தைச் சேர்ந்த 40 வயதடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்தள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் மாமனாரை கொலை செய்த மருமகன்!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். குறி்த்த சம்பவமானது நேற்று (18.02) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மருமகன் மகளை தாக்கியதை கண்ட தந்தை அதை தட்டிக்கேட்டுள்ளார்

இதனையடுத்து மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

அம்பாந்தோட்டை மாவட்டம் மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத தரப்பினரால் நேற்றிரவு (18.02) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உந்துருளியை செலுத்திய 39 வயதான நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரின் மகனும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 வயதான மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானத்தால் பரபரப்பு : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்த2மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல ஜெட் பனிப்புயலைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய வானிலைக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

விமானத்தில் இருந்த 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 80 பேரில் 18 பேர் வரையில் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் உட்பட காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்ந்த காலநிலை காரணமாக, விமானம் கவிழ்ந்து நீண்ட தூரம் இழுத்து சென்ற நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான உராவுகளின் போதும் வெடித்து சிதறாமல் இருக்க முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைபேசியால் உயிரிழந்த அண்ணன், தங்கை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரைகுமார் – ஜீவிதா தம்பதியினர்.

இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் என 2 குழந்தைகள். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார். தங்கை கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த தங்கையை காப்பற்ற கிணற்றில் அண்ணனும் கிணற்றில் குதித்துவிட்டார்.

இதில் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இருவரின் சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தது காண்பவர் கண்களை கரைய வைத்தது. செல்போனுக்காக அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கிணற்றில் விழுந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வினோத சவால் : பட்டாம்பூச்சியை வைத்து விபரீத செயல் : 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதாவது, டேவி இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை ஊசி மூலம் தனது காலில் செலுத்தியதாக மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டேவி Septic shockக்கில் சிக்கியதால் அவரது உடல் செயலிழந்திருக்கிறது. இதனையடுத்து டேவி உயிரிழந்திருக்கிறார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒன்லைனில் வினோத சவாலை ஏற்றுக் கொண்டு சிறுவன் இதனை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், பொலிஸார் முழு பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

 

இந்த பெண்ணை பார்த்துள்ளீர்களா? மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!!

அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை கண்டுப்பிடிக்க பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் படி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன பெண்ணை அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான இப்பெண் இன்னும் வீடு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக, 0767824592, 0753251281 என்ற தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டது பாணின் விலை!!

பாண் ஒரு இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவால் குறைக்க பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்து நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சூட்சுமமான முறையில் திருட்டு : சிசிரிவியில் சிக்கிய வெளிநாட்டு தம்பதி!!

கணேமுல்லையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் காசாளரிடமிருந்து சூட்சுமமான முறையில் பணத்தை திருடிச் சென்றுள்ள வெளிநாட்டு தம்பதிகள் சிசிரிவி காட்சியில் சிக்கியுள்ளனர்.

குறித்த சிசிரிவி காட்சியில், வெளிநாட்டு தம்பதியினர், இலங்கை ரூபாய் தாள்கள் குறித்து வர்த்த நிலைய காசாளருடன் உரையாடுவதைக் காட்டுகிறது.

இதன்போது, சந்தேக நபர்கள், காசாளருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது, ​​பணப் பெட்டிக்குள் கையை நீட்டி, குறைந்த ரூபாய் தாள்களின் கீழ் 5000 தாள்களை இரகசியமாக அடுக்கி வைக்கின்றனர்.

பின்னர் காசாளருக்கு தெரியாமல் அவற்றைப் பையில் வைத்துக் கொள்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, கடையின் உரிமையாளர் அன்றைய கணக்குகளைச் செய்யும்போது கிட்டத்தட்ட ரூ.40,000 பணம் குறைவாக இருப்பதை கணிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சிசிரிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த வெளிநாட்டு தம்பதியின் இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,912.92 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 232,000 ரூபாவாக உள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 214,600 ரூபாவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் (14) 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 233,000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 215,00 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (18) சிறியளவு குறைவை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் நேர்ந்த துயரம் : கிணற்றில் விழுந்து மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் பலி!!

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது முல்லைத்தீவு, விஸ்வமடு ரெட்வனா பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே உயிரிழந்தனர்.

கிணற்றினுள் குழந்தை மிதந்து கிடப்பதை அவதானித்தவர்கள் குழந்தையை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இருப்பினும் குழந்தை உயிரிழந்தது. சம்பவத்தை அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் குழந்தையின் மாமனை மீட்டு முதலுதவி அளித்தபோதும் அவரும் உயிரிழந்துள்ளார்.

பின்னர் இரண்டு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் சிறார்களைத் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவெளியில் கடுமையான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், பணியாற்றுபவர்கள் இயன்றளவு நீரைப் பருக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளை அல்லது இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

கனடா மோகத்தால் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த கதி!!

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசா போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும்,

ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு செல்ல தயாராக இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொலைச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் உதவிகோரும் பொலிஸார்!!

அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 2024 நவம்பர் மாதம் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர் காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்பவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் – 071 8591484

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு – 091 2291095

வவுனியா – மன்னார் வீதியில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!!

வவுனியா, மன்னார் வீதியில் நேற்று (17.02) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரணடு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுவை அண்டிய பகுதியில் குறித்த மோட்டர் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அதில் பயணித்த மற்றைய நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே மரணமடைந்தவராவார். விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டார் என கடந்த 14ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.