லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில் நேற்றிரவு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலில் இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து கொண்டிருப்பதால், சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐ.சி.சி, கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயம் என்று தெரிவித்துள்ளது.
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய மர்ம நபர்கள் இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி கத்தியால் பலரை தாக்கி உள்ளனர்.
அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியது.
லண்டனில் இதைப் போன்று தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதால், சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், திட்டமிட்டது போலவே ஜூன் 1ம் திகதி ஆரம்பமான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஐ.சி.சி, ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு அடுத்து பெண்கள் உலகக் கோப்பை வருகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
லண்டனில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

















