அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல் : பொலிஸார் விசாரணை!!

யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சத்திர சிகிற்சை செய்யப்படவுள்ளதாக யாழ். போதானா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இராமநாதன் அர்ச்சுனா தனது சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார். இதன்போது, ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவிலும் இந்த பதிவாகி இருந்தது.

சம்பவம் தொடர்பில் காணொளி அடிப்படையாக வைத்து அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு!!

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டதாகவும், எனினும் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாங்கி இன்று (12.02) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய தாங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரை சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த தாங்கியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக இவ்வாறான தாங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வர்த்தகர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!!

கொழும்பின் புறநகர் பகுதியான மோதர பகுதியில் 6 நாட்களுக்கு முன்பு மீன் வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்கப் பொருட்களில் 16 தங்க வளையல்கள், 5 சங்கிலிகள், 14 மோதிரங்கள், 5 பென்டன்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் உட்பட அவை சுமார் 50 பவுண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் முதலாம் திகதி தொழிலதிபர் ஒரு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண்ணைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் வேலைக்கு அமர்த்தியதாக தொழிலதிபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் 7வது நாளிலிருந்து அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் தர்ஷனவின் நெறிப்படுத்தலின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரித்தானியாவில் திடீர் சுற்றிவளைப்புகள் – தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக கைது!!

பிரித்தானியாவில்(UK) சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு பாரிய சுமைதாங்கி விமானங்கள் மூலம் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பல்வேறு பகுதியிலுள்ள ஹோட்டல்கள், பெற்றோல் நிரப்பு நிலையங்கள், கார் பழுது பார்க்கும் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன்ன.

இதற்கமைய சுமார் 19 ஆயிரம் பேர் ஆவணங்கள் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் முதற்கட்டாக பெருந்தொகையான குடியேறிகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024 ஜூலை 5 முதல் 2025 ஜனவரி 31 வரை 5,074 கட்டாய நாடு கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இலங்கையில் குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்!!

குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்!!

நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த தும்புள்ள மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் நிம்சாரா அபிமான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுவன் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ​​வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்றதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் மீதான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறியினால் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-தாய் மற்றும் மகன் கைது!!

பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து அவருடைய உடைமைகளை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,

மனைவி ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறும் 15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொகவந்தலவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள்,

பாடசாலையில் பாவனைக்கு வைக்கப்படிருந்த எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், 15 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (12) ஹட்டன் நீதவான் முன்னிலைபடுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொகவந்தலாவை பாடசாலையொன்றின் பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள் எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன செவ்வாய்க்கிழமை (11) திருடப்பட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணையில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையிட்ட போதே குறித்த வீட்டில் திருடப்பட்ட மடிகணினி, தங்க ஆபரணங்கள், எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறும் 15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாறிவிட்ட ஜனாதிபதி அனுரவின் சட்டை பொத்தான் : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்தபோது, அவரது ஆடையின் பொத்தான் மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார, அந்த பொத்தான் சிக்கலை சரி செய்யும் வீடியோவும் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுர குமார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாடு பிப்ரவரி 11 முதல் 13 வரை துபாயில் நடைபெறுகிறது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரு விழாவில் தனது கால்சட்டையை உயர்த்திவிடும் புகைப்படம் அக்காலத்தில் இதே போன்று பரவியது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில்!!

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

குளிர்பானம் அருந்திய நிலையில், தனது மகள் திடீர் சுகவீனமுற்றது கண்டு சிறுமியின் தந்தையும் அதே போத்தலில் இருந்து சிறிது குளிர்பானம் அருந்தியுள்ளார். அதனையடுத்து அவரும் சுகவீனமுற்றுள்ளார்.

தற்போதைக்கு சிறுமியும் தந்தையும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சுகாதாரத்துறையினர், குறித்த குளிர்பான போத்தலை மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்றைய மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இன்றையதினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு : செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகலுக்குள் நுரைச்சோலை மின்நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அது சாத்தியமானால் இன்று மின்வெட்டு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமைக்கு கொண்டு வர முடியாவிட்டால், இன்றும் மின்வெட்டு விதிக்க வேண்டியிருக்கும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, இன்று மேற்கொள்ளப்படும் மின்வெட்டு குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்வெட்டு ஏற்பட்டால், அது பெரும்பாலும் பிற்பகலில் ஏற்படும் எனவும் எனவே மின்வெட்டு நேரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால், அதன் 3 ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.

நுரைச்சோலை முழுமையாக மின்சாரம் பெறும் வரை ஒவ்வொரு மண்டலத்திலும் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது!!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் கேரளா- கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிநடத்தலில்,

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸாநாயக்க (18129) ஆகியோர் தலைமையிலான பொலிசார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் கோர விபத்தின் போது மக்களின் கொடூரமான மனநிலை : ஹீரோவாக செயற்பட்ட இளைஞன்!!

குருநாகல் – தம்புள்ள பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தின் போது சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்த பேருந்து, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளின் பின்புறத்தில் மோதியது.

பேருந்தின் உள்ளே காயமடைந்தவர்கள் கதறி அழுது கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றாமல் தங்கள் தொலைபேசிகளில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

மக்களின் கோர மனநிலை

எனினும் காயமடைந்தவர்களை காப்பாற்ற எவரும் வரவில்லை. அம்புலன்ஸிற்கு அழைப்பை ஏற்படுத்தினோம் ஆனாலும் அரை மணி நேரமாகியும் வரவில்லை. ஒரு வாகனம் கூட நிற்கவில்லை.

மிக மோசமான சூழ்நிலையில், நான் ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஒரு குண்டர் போல வீதிக்கு நடுவே ஓடி சென்று, ஒரு லொறியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தேன்”

என நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோர பேருந்து விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் 28 பேர் படுகாயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வட்டாரங்கள்

காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்தில் இறந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் நடத்துனரும் ஒருவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளுடன் மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு அங்கு கூடியிருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் பிற பேருந்துகளின் பயணிகள், விபத்தில் சிக்கிய பேருந்துகளில் சிக்கிய காயமடைந்தவர்களை வெளியே எடுத்தனர்.

இருப்பினும், காயமடைந்தவர்களை மீட்பதற்கு பதிலாக, சிலர் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் அவர்கள் அழுவதையும் அலறுவதையும் காணொளிகளைப் பதிவு செய்வதைக் காண முடிந்தது.

கவன குறைவு

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வாகன ஓட்டுநர்களும் முன்வரவில்லை, விபத்து நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை அடைந்தன.

அந்த நேரத்தில், உள்ளூர்வாசி ஒருவர் இரும்பு கம்பியுடன் முன்வந்து வீதியில் குதித்து, ஒரு லொறியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, காயமடைந்தவர்களை அதில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.

இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விசாரணையில், அதிவேகத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு பற்றி தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும். இந்த தனித்துவமான தீவானது குறைந்த அலைகளின் போது 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

மேலும், இது இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஈர்க்க கூடிய இடமாக அமைந்துள்ளது.

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் சீகல் தீவு அமைந்துள்ளது. இதன் அற்புதமான அழகு மற்றும் தனித்தன்மை காரணமாக ‘மினி தாய்லாந்து’ என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது.

சீகல் தீவு தினமும் அரை மணி நேரம் மட்டுமே கடலில் இருந்து வெளிப்படுகிறது. இது இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடலின் அலை குறையும் போது, ​​ஒரு சிறிய அழகிய மணல் திட்டு தோன்றும். இதனை சீகல் தீவு என்று அழைக்கின்றனர்.

சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். ஏராளமான சீகல்கள் மற்றும் பிற பறவை இனங்கள் கூட்டமாக வருவதால் இந்த தீவு பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது.

சீகல் தீவை இன்னும் சிறப்புறச் செய்வது என்னவென்றால் அதன் அழகிய சுற்றுப்புறம். கடல் தொடர்ந்து அதன் மீது எழுவதால் குப்பைகள் எதுவும் இருக்காது. இங்கு வரும் பார்வையாளர்கள் மீன் பிடிக்கவும் செய்கின்றனர்.

இங்கு செல்லும் பயணிகள் சாலை அல்லது கொங்கன் இயில் வழியாக செல்லலலாம். மால்வானில் இருந்து, பார்வையாளர்கள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்ய வேண்டும்.

அங்கு உள்ளூர் மீனவர்கள் தீவிற்கு ரூ. 500-800 வரை கட்டணத்தில் சவாரி செய்கிறார்கள். இந்த தீவு, மும்பையிலிருந்து பயணிப்பவர்களுக்கு சுமார் 42.5 கிமீ தொலைவில் உள்ளது.

இதனை அருகிலுள்ள துறைமுகம் நவா ஷேவா ஆகும். அதேபோல அருகிலுள்ள விமான நிலையம் சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையம் ஆகும்.

குறைந்த அலைகளின் போது மட்டுமே சீகல் தீவை பார்க்க முடியும் என்பதால் செல்வதற்கான சரியான நேரத்தை சரிபார்த்து விட்டு செல்ல வேண்டும். சரியான நேரம் தினமும் மாறுபடும் என்பதால் பார்வையாளர்கள் தீவிற்கு செல்லும் முன் திட்டமிட வேண்டும்.

திருமண நிகழ்வில் திடீரென மரணமடைந்த இளம் பெண்!!

உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் முன்னதாக குறித்த பெண்ணின் தம்பி ஒருவரும் தனது12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.