தீவிரமடையும் உப்பு தட்டுப்பாடு : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் நுவரெலியாவில் உறைபனி!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு : நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளான மக்கள்!!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த பஸ் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக மரணம்!!

வவுனியா -புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07.02.2025) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நகைகள் கொள்ளை: சந்தேக நபர்கள் கைது!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து ஒரு தொகை நகைகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன் , 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்களை மிரட்டி பெருந்தொகை பணம் பெற்ற நபருக்கு நேர்ந்த கதி!!

இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவராகும். அவிசாவளை பகுதியில் மறைந்திருந்த வேளையில் அவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திய நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பணமோசடி தொடர்பான 5 பிடியாணைகளும், போதைப்பொருள் தொடர்பான இரண்டு பிடியாணைகளும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் தம்வசம் உள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

அதனை தவிர்ப்பதாக பணம் வழங்குமாறும் கோரியுள்ளார். இதற்கு பயந்த சில பெண்கள் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

புத்தளத்தில் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தநதை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம், கலடிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை காட்ட மறுத்த மனைவி ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் அடுத்த ஹெப்பகோடி காவல் எல்லைக்குட்பட்ட ராமையா லேஅவுட்டைச் சேர்ந்தவர் மோகன். ஹெப்பக்கொடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிகிறார். அவரது மனைவி கங்கா.

இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு 6 வயது மகள் உள்ளார். அந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறது.

கங்காவுக்கும் மோகனுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு நண்பருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மோகன் தனது மனைவி கங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி கங்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டபோது, ​​கங்கா கோபமடைந்து மோகனுடன் வாழ முடியாது என்று கூறி வெளியேறினார். தற்போது இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இருப்பினும், குழந்தையைப் பார்க்க மோகன் அடிக்கடி தனது மனைவி வீட்டிற்குச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், அவரது மனைவி அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​குழந்தையைக் காட்ட முடியாது என்று அவர் வாதிட்டார். இந்த வாக்குவாதம் அதிகரித்தபோது, ​​மோகன் கங்காவைக் கொல்லத் திட்டமிட்டார்.

அதன்படி, நேற்று காலை, கங்கா தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​ராமையா லேஅவுட் அருகே சாலையின் நடுவில் மோகன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கங்காவின் வயிற்றில் குத்தினார். அவர் 7 முறை குத்தியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த கங்கா, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹெப்பகோடி போலீசார், கங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், மோகன் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவரை கைது செய்த ஹெப்பகோடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு உணவு வழங்க சென்ற மகனுக்கு நேர்ந்த கதி!!!

செவனகல நெலும்வெவ பகுதியில் வசித்து வரும் இளைஞன் ஒருவர், தனது தாய்க்கு உணவளிக்க செல்லும் போது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகவீனமுற்றிருந்த தனது தாய்க்கு உணவு கொடுப்பதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இதன்போது, தாயின் வீட்டில், நாய்களிடமிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென சிவப்பு நிறமாக மாறிய நீர்நிலை!!

ஆர்ஜென்டினாவின் (Argentina) தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

நேற்றிலிருந்து குறித்த கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அப்பகுதியினர் கடும் அச்சத்தில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இரசாயன கலவைகள் ஏதேனும் கொட்டப்பட்டதாலோ அல்லது அருகிலுள்ள கிடங்கில் இருந்து இரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டதாலோ இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு நடவடிக்கைகள்

மேலும், குறித்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய கால்வாயிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூனஸ் தலைநகரின் மையத்திலிருந்து சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் உள்ள தோல் பதப்படுத்தும் மற்றும் ஆடை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி வழியாக செல்லும் இந்த கால்வாயில் பல உள்ளூர் நிறுவனங்கள் நச்சுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், தற்போது, குறித்த கால்வாயின் நீர் சிவப்பு நிறமாக மாறியிருந்தாலும், பிற நேரங்களில் அது மஞ்சள் நிறமாகவும், பருகினால் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும் அமில வாசனையுடனேயே காணப்படுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, கால்வாயின் இத்தகைய மாற்றம் இயற்கையானதா அல்லது ஏதேனும் இரசாயன மாற்றமா என அந்நாட்டு ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இலங்கை புதுப்பெண்ணிடம் தாலியை பறிமுதல் செய்த விவகாரம்: நியாயமற்றது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் தாலி உட்பட தங்க நகைகளை பறிமுதல் செய்தது நியாயமற்றது எனக் கூறி, அவரிடம் திருப்பி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண், சென்னையில் ஜெயகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் அவரது கணவர் பிரான்ஸ் சென்ற நிலையில் மனைவிக்கு விசா ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து தனுஷிகாவுக்கு விசா கிடைக்கவே, பிரான்ஸ் செல்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன்படி சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி, தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தனுஷிகாவின் கணவர் ஜெயகாந்த் நகைகளை திருப்பி அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என குறிப்பிட்டது.

அத்துடன் பெண்ணிடம் பறிமுதல் செய்த 216 கிராம் எடை கொண்ட தாலி உட்பட நகைகளை திருப்பி அளிக்குமாறு சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

இலங்கையில் GovPay வசதி அறிமுகம்!!

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07.02.2025) நடைபெற்றது.

வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரச சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

மேலும் இதனூடாக, ஜனாதிபதி நிதியச் சேவைகளை பிரதேச செயலகங்களுக்கு விரிவுபடுத்துதல் மற்றும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வசதிகளை அறிமுகப்படுத்துதல்,

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இராஜதந்திர பணிகள் மூலம் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெறுவதை சாத்தியமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டில் கைதான மூவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் வெளிநாட்டில் கைதான நிலையில் அவர்களை இன்று (07) இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.

வவுனியாவில் நடுவீதியில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை (6) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகா வித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர் முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகிய பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு அழகிகள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

அவர்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. டெர்பியில் இருந்து வந்த 24 வயதான எபனி மகின்டோஷ் (Ebony McIntosh) என்ற பெண் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பிரபலமான நபர் என்று இப்போது கூறப்படுகிறது.

தெற்காசியாவில் சுற்றுப்பயணம் செய்யும் கனவில் இருந்ததாகவும், அதை நனவாக்க கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதலில் இலங்கைக்கு வந்ததாகவும் அவரது தங்கை தனக்காக எழுதி வைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவரது பயணத்தின் நான்காவது நாளில், அதாவது பிப்ரவரி 1 சனிக்கிழமை, அவரும் மேலும் சில தங்குபவர்களும் வாந்தி, குமட்டல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிராக்கிள் கொழும்பு சிட்டியில் தங்கியிருந்த எபனி மற்றும் பெயரிடப்படாத ஜெர்மன் பெண் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, இந்த மரணங்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அருகிலுள்ள அறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி வாயு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எபனியின் சகோதரி இந்தியா, சமூக ஊடகங்கள் மூலம் தனது சகோதரிக்கு கண்ணியமான பிரியாவிடை அளித்து, “எனது எபனி, எனது அழகான சகோதரி, எனக்கு ஒரு பெரிய சகோதரியாக இருந்ததற்கு நன்றி. நீங்கள் எனக்கு கிடைக்கக்கூடிய சிறந்த சகோதரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 10,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட எபனி, தொடர்ந்து ஃபேஷன் மற்றும் பயண அனுபவங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டார்.

இந்தியா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வந்து அவரது உடலை மீண்டும் கொண்டு செல்ல உதவுவதற்காக GoFundMe நிதி திரட்டும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

இதுவரை 22,000 பவுண்டுகள் இலக்கில் 20,000 பவுண்டுகளுக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. நிதி திரட்டும் பக்கத்தில் இந்தியா இவ்வாறு எழுதியுள்ளார்: “ஜனவரி 28, செவ்வாயன்று, எபனி ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தெற்காசியா முழுவதும் பயணம் செய்யும் தனது கனவை நனவாக்கப் புறப்பட்டார்.

அவர் வழக்கமாகச் செய்வது போல், பல மாதங்களாக ஆராய்ச்சி செய்து, திட்டமிட்டு, வரும் மாதங்களுக்கான அட்டவணைகளைத் தயாரித்திருந்தார்.

” இலங்கை அதிகாரிகள் முழுமையான பிரேத பரிசோதனை முடியும் வரை எபனியின் உடலை விடுவிக்க முடியாது என்றும், அவரது மரணம் தொடர்பான உண்மைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

நாங்கள் விரைவில் எங்கள் அழகான எபனியுடன் இருக்க விரும்புகிறோம். வெளிநாட்டில் தனியாக இருப்பது பற்றி நினைக்கும்போது நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் அவளைப் பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாங்கள் எங்கள் தேவதூதரைப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்யும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த யுவதிகள் மரணம்டைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும்அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இதன்போது, தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மேலும், சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.