பாடசாலை செல்வதாக கூறி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி!!

பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது.

பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன் வந்து விட்டதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் தந்தை கொழும்பில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் மற்றுமொரு ஆபத்து!!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின் படி, 2025 ஜனவரியில் 4,900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் மொத்தமாக 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,

2025 இம்மாதம் 1 திகதி முதல் 3 திகதி வரை, 419 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையான டெங்கு நோயுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 3,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் ஆண்டிற்கான மொத்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 49,873 ஆக உயர்வடைந்திருந்தது.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் 24 டெங்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் டெங்கு நோயாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் 15.6 சதவீதமானோர் பதிவாகியுள்ளதுடன் 839 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 13.4%, 719 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பின் பகுப்பாய்வில், கண்டி (347), காலி (334), மட்டக்களப்பு (317), இரத்தினபுரி (293), யாழ்ப்பாணம் (217), மாத்தறை (211), மாத்தளை (147),

கேகாலை (144), களுத்துறை (143), திருகோணமலை (124), ஹம்பாந்தோட்டை (122), பதுளை (107), குருநாகல் (105), மற்றும் மொனராகலை (101) ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

2025 ஜனவரி 1 முதல் பெப்ரவரி 3 வரை நாட்டில் பதிவான மொத்த வழக்குகளில் மாகாண ரீதியாக, நோக்கும் போது 44.7% டெங்கு நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தென் மாகாணத்தில் 12.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதிப்குதியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கண்காணிப்பு அமைப்பு அதிக ஆபத்துள்ள 16 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலை!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது இன்று (05) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங், அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதேநேரம், அமெரிக்காவில் தங்க நிலவரம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக உள்ளது.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதட்டத்தைத் தணிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான (Xi Jinping) பேச்சுவார்த்தை இந்த வாரம் இடம்பெறாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலையானது 3,000 அமெரிக்க டொலர்களாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5 வீதமாக உயர்ந்து 32.26 அமெரிக்க டொலராகவும், பிளாட்டினம் 0.8 வீதமாக அதிகரித்து 970.95 அமெரிக்க டொலராகவும் உள்ளது.

இந்த வில‍ை உயர்வுக்கு அமைவாக இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 854,392 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 30,140 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 241,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 27,630 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 221,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 211,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை!!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன.

அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அர்ச்சுனா ஒரு மனநோயாளி.. வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரும் தயாசிறி!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இலங்கை பொலிஸார், நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கடுமையாக உரையாற்றியிருந்தார்.

இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டனர்.

இதன்போது, எழுந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும்,

சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.

அர்ச்சுனா, எம்.பிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது சபையில் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

கடுமையாக கூச்சலிட்ட அர்ச்சுனா எம்.பி : சபையில் அமளி துமளி!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரை சபைக்குள் கடுமையான குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசிய வார்த்தைகள் சில, நாடாளுமன்றம், இலங்கை பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார்.

மேலும், அர்ச்சுனா எம்.பி பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய திருமதி உலக அழகிக்கு பெரும் வரவேற்பு!!

அமெரிக்காவில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா, இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

இஷாதி அமந்தா இன்று (04) தோஹாவிலிருந்து கத்தார் விமான சேவையின் QR – 658 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் அவரை வரவேற்க ,தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேனநாயக்க,

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சுபாஷினி பெரேரா மற்றும் அதன் உதவிப் பணிப்பாளர் சுரேஷனி பிலபிட்டிய ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

விண்வெளியில் அதிக நேரம் ‘SpaceWalk’ சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!!

கடந்த ஆண்டு ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.

ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ‘SpaceWalk’ செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

மிகுந்த பாதுகாப்புடன் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் ‘Space Walk’ செய்தனர். 9வது முறையாக Space Walk செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் Space Walk செய்துள்ளார்.

இது வில்லியம்ஸுக்கு ஒன்பதாவது விண்வெளி நடை மற்றும் புட்ச் வில்மோரின் 5 ஆவது ஐந்தாவது விண்வெளி நடையாகும். சுனிதா வில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்!!

மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்புருபிட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், ஆசிரியை தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் இரத்தக் கறை படிந்த இரும்புச் சுத்தியல் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டன. மேலும் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்தபோது ஒரு ஓடையின் அருகே இரத்தத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தலையணை உறையும் கண்டெடுக்கப்பட்டது.

கத்தி மற்றும் இரும்பு பூச்சாடியால் தாக்கப்பட்டு ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணம் நிகழ்ந்த இடத்தில் மயக்கமடைந்திருந்த தாய் உடனடியாக கம்புருபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தனது நீரிழிவு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு இரத்தக்கறை படிந்த கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவை தாயாரால் எழுதப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு கடிதம் பொலிஸாருக்கும் மற்றொன்று மகனுக்கும் எழுதப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த கடிதத்தில், மகள் பல ஆண்டுகளாக சொத்து கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது மகள் தன்னை கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்றபோது இவ்வாறு கொலை செய்யப்பட்டதாகவும் தாய் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாய் எழுதிய கடிதங்கள் தனது மகனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆசிரியையின் தந்தை சிறிது காலத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார், மேலும் அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

குறித்த குடும்பத்திற்குள் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு : மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தால் பரபரப்பு!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியபோது பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும் , தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ச்சுனாவுக்கெதிராக இக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து,

பொலிஸார் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதேமேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேரூந்தின் மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து பலி!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிப்பலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் மரநடுகை!!

வவுனியா சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மர நடுகை இன்று (04.02.2025) இடம்பெற்றது.

வவுனியாவின் முன்னணி தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் மைதானத்தின் எல்லையோரங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன்தரு மற்றும் நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன், சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி ஹேரத்,

பிரதி அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், சாரணர் குழுக்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

வவுனியாவில் 77வது சுதந்திர தினத்திற்கு ஆதரவாக வாகனப் பேரணி!!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பேரணியானது, கண்டி வீதி ஊடாக சென்று பஜார் வீதியினை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து கண்டி வீதி ஊடாக சென்று வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது.

குறித்த பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்திலும் தேசியக்கொடி கட்டப்பட்டு, மூவின மக்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றதுடன், நாடோடிகளும், விசேட தேவைக்குட்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

வவுனியா நகர் முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள்!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும் , மணிக்கூட்டு கோபுரம் , வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.