நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர். 77 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு முழுவதும் சிறைக்கைதிகள் இன்று (04.02.2025) விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ரங்கன பேரேரா , பிரதான சிறைச்சாலை பிரதானி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.02.2025) இடம்பெற்றிருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார். இதன் பாேது மாவட்ட செயலக உத்தியாேகத்தர்களால் தமிழ், சிங்கள மாெழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை தாெடர்ந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மதத்தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியாேகத்தர்கள் கலாசார ஆடைகளுடன் நிகழ்வில் கலந்து காெண்டிருந்தனர்.
கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சம்பவத்தில் மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பொல்வத்த கொல்லாகே நவோத் கிம்ஹான் எனும் இளைஞரே மாயமாகியுள்ளார்.
சம்பவத்தில் மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். காணாமல்போன இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591691 அல்லது 071 – 8594360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அதேபோல, தங்க பாபா உள்ளிட்ட சாமியாரும் வைரலாகி வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகாகும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.
அதாவது இந்த இளைஞர் முதலீடு இல்லாமல், மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல் துலக்குவதற்காக Neem datun என்ற வேப்பங்குச்சியை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் மகா கும்பமேளாவிற்கு பணம் சம்பாதிப்பதற்காக வந்தேன். ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளேன். இந்த யோசனையை எனக்கு எனது காதலி தான் கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து துன்புறுத்தி, இழிவான வார்த்தைகளால் திட்டி, கழிப்பறை இருக்கையை நக்க கட்டாயப்படுத்தியதாக ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தில் பொலிசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆனால் மிஹிரின் தாயார்,
தனது மகனின் மரணம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திற்கும் கேரள காவல்துறைத் தலைவருக்கும் கடிதம் எழுதியதாகக் கூறியுள்ளார்.
ஜனவரி 15 ஆம் திகதி கொச்சி நகரின் திரிபுனிதாரா பகுதியில் உள்ள அவர்களது குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதேயான மிஹிர் தற்கொலை செய்து கொண்டார்.
சிறுவன் மிஹிரின் மரணத்தை அடுத்து மிஹிர் ஏன் இவ்வளவு கடுமையான முடிவை எடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள நானும் என் கணவரும் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினோம் என குறிப்பிட்டுள்ள ராஜ்னா,
அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்களுடனான உரையாடல்கள் மூலமாகவும், சமூக ஊடகச் செய்திகளைப் படிப்பதன் மூலமாகவும், அவர் அனுபவித்த கொடூரமான யதார்த்தத்தை நாங்கள் அறிந்து அதிர்ச்சியுற்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மிஹிர் பள்ளியிலும் பள்ளி பேருந்திலும் ஒரு மாணவர் குழுவால் கொடூரமான ராகிங், கொடுமைப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளானார் என்று ராஜ்னா வெளிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் சேகரித்த சான்றுகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த தாயார், மிஹிரை மிக மோசமாக தாக்கியுள்ளனர்,
இழிவான வார்த்தைகளால் திட்டியுள்ளர், நினைத்துப் பார்க்க முடியாத அவமானத்தைத் தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ராஜ்னா பதிவு செய்துள்ளார்.
மரணத்திற்கு பிறகும், அவர்கள் கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் வைரவ புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, விசேட பொலிஸ் குழு வவுனியா, வைரவ புளியங்குளம், புகையிரத வீதி ஒன்றில் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த சிறிய வெற்றிலை கடை ஒன்றினை சுற்றி வளைத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த 140 கிராம் மாபா, ஒரு கிலோ மாபா கலந்த பாக்கு உள்ளிட்ட போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, பிறப்பு வீதத்தில் குறைவு போன்ற காரணங்களால் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், கட்டிடக்கலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள், பயிர் உற்பத்தி மற்றும் கடற்றொழில் போன்ற துறைகளில் இத்தாலியில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சீசனல் அல்லாத வேலை விசா(Non-seasonal work visa) சீசனல் வேலை விசா(Seasonal Work Visa), பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa), சுயதொழில் விசா (Self-Employment Visa) மற்றும் ‘EU Blue Card’ போன்ற விசா வகைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, இத்தாலியில் உள்ள வேலை வழங்குநரின் அனுமதியை பெற்று இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பித்து விசாவினை பெற்றுக் கொள்ள முடியும்.
நாட்டில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவயில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்ள புதனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ஒரே கோட்டில் தெரியும் ஓர் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர, இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சனி, வீனஸ், வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை, அவற்றின் மங்கலான தன்மை காரணமாக தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய நிகழ்வு, குறைந்தது ஒரு மாதத்திற்கு இரவு வானத்தில் தெரியும் என்று வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி இறுதிக்குள், புதனும் வானில் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பெப்ரவரி 25 ஆம் திகதி, புதன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் மாலை 7 மணிக்குப் பிறகு ஒரே கோட்டில் தென்படும் என்று விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.
தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக இராமநாதன் அர்ச்சுனா சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் சார்பாக ஆஜரான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி மாயாதுன்னே கொரியா மற்றும் நீதிபதி மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு,
மனுதாரர் கோரியபடி அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதை பரிசீலிக்க மனுவை மே 14 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது.
இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும் குவோ வாரண்டோ ரிட் வகையிலான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பாக சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர், துஷாரி ஜெயவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரானார்.
அர்ச்சுனா சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.
அரசியலமைப்பின் பிரிவு 91(1)(e) பொது ஒப்பந்தங்களில் ஏதேனும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கிறது என்று மனுதாரர் கூறினார்.
அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றினார் என்றும், பின்னர் பேராதனை போதனா மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டார் என்றும் மனுதாரர் மேலும் கூறினார்.
செப்டம்பர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முந்தைய திகதியில் அர்ச்சுனாவின் பேஸ்புக் சுயவிவரம், அப்போதைய சுகாதார அமைச்சக செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக மனுதாரர் கூறினார்.
எனவே, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(d) மற்றும் 91(1)(e) ஆகியவற்றின் கீழ் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று மனுதாரர் கூறினார்.
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
இரத்தினபுரி – வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருக பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி மீட்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பன்னில, நிரி எல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான ஓர் காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
நாளாந்தம் மாலை வேளையில் அந்த பெண்ணின் கணவர் கலபட சந்தியில் உள்ள வியாபர நிலையங்களுக்கு சென்று வருவார். கடந்த 30 ஆம் திகதி வழமையை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த கணவர், நீராட தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரது மனைவியை காணவில்லை என்று அத்தோட்ட காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.
வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வெவள்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள், அயலவர்களின் உதவியுடன் வீட்டு சுற்று வட்டாரத்தில் தேடி பார்த்த போது, வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள கருக பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
குறித்த பெண்ணின் சடலத்தை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைகளில் குறித்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட வெவள்வத்த பொலிஸார் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றிய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க நகையை பறித்து கொள்வதற்காக குறித்த நபர் கொலை செய்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இறக்குவானை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
சந்தேக நபர் இறக்குவானை பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஓர் குற்றவாளி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று நேற்று (01.02.2025) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதில அரசாங்க அதிபர் திரு.தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துடன் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் பிரதிநிதிகள், வவுனியா தெற்கு உதவிக் கல்விப்பணிப்பாளர், வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி இணைப்பாளர்கள் உள்ளிட்ட வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகும் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று இந்நிகழ்வு (01.02) இடம்பெற்றது.
முன்னதாக ஏ9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன், அவரது 27 வருட நீதித் துறை சேவையை பாராட்டி வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.
நீதித்துறையில் 27 வருடத்தை பூர்த்தி செய்த முதல் தமிழ நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசங்கத்தின் இழுத்தடிப்புகளாலும், கால தாமங்களாலும் அவர் ஓய்வு நிலைக்கு செல்கின்றார். இருப்பினும் அந்த பதவி நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன் போது கருத்து தெரிவித்தனர்.