திருகோணமலையில் வான் விபத்தில் ஒருவர் பலி!!

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றையதினம் (01.02.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி குறித்த வானின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இலங்கையின் இசாடி அமந்தா இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ட்சேகோ கேலே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். அதேநேரம் தாய்லாந்தின் ப்ளாய் பான்பெர்ம் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமண்டா மிஸஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றிருந்தார்.

குற்றச்சாட்டு

இதற்கிடையில், அமந்தா மற்றும் தேசிய அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடவுச்சீட்டுக்களை பெறுவதிலும், தனது ஆடைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருந்தால், இலங்கை பட்டத்தை வென்றிருக்க முடியும் என்று இசாடி அமந்தா தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமது முயற்சிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் உதவியதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் நேற்று(30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு விண்ணப்பித்துள்ளார்.

அதன் வழக்கு விசாரணை வரவுள்ளதால் விளக்கமறியலை நீடித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தென்னிலங்கையில் ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்ட மூவர் : அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!!

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேகநபர்களால் சுடப்பட்டதில், விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதுடன், மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் புதிய பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

யாழ்.கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!!

யாழ்ப்பாணம்  வடமராட்சி, கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில், வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் நேற்று (31) மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை : இரத்தக் கறையுடன் தாய் கைது!!

மகளை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரின் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை தாய் மற்றும் அவரது 36 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எழுதிய கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்ட நிலையில், அதில் இரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்

கைது செய்யப்பட்ட 76 வயதான தாய் மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்க்க முயற்சித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் இணைப்பு : மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த கொலையை தான் தான் செய்ததாக, பெண்ணின் தாயின் கையெழுத்தில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான சகோதரனுக்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அந்த கடிதம் எழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்க சென்ற 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை குளிக்கச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (01.02) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் கோர விபத்து : இருவர் பலி : 25 பேர் காயம்!!

ஹபரணை, கல்வாங்குவ பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை-ஹபரணை வீதியில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது பேருந்தில் 50 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூமியில் மோதப்போகும் சிறுகோள் : எச்சரிக்கை விடுத்துள்ள வானிலையாளர்கள்!!

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த சிறுகோள் 2024 லுசு4 என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 200 அடி விண்வெளிப் பாறையான இது, 2032 கிறிஸ்மஸிற்கு முன்னதாக பூமியுடன் மோதக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் மோதல், பூமியில் கணிசமான அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேடலினா ஸ்கை சேர்வே மையத்தை சேர்ந்த டேவிட் ரங்கின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுகோளான 2024 லுசு4 பூமிக்கு வரும் நிகழ்வை தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோள் 40-100 மீட்டர் அகலம் கொண்டதாக கருதப்படுகிறது. சிலவேளைகளில் அது இந்த அளவை விட பெரிதாகவும் அமையலாம் என்று அவர் கணித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அது 301 மைல் உயரத்தில் பூமியைத் தாண்டிச் செல்வதைக் காணமுடிவதாகவும் வானிலையாளர் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 2024 லுசு4 என்ற இந்தக் கோள், தற்போது பூமியிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல்கள் தொலைவில் விண்வெளியில் பயணித்து வருகிறது. அத்துடன், இது மணிக்கு 13.5 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபரில் இலங்கையில் மாபெரும் பண்டிகை : யாழில் வைத்து ஜனாதிபதி கூறிய செய்தி!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித் துறையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் இணைந்து முதலாவதாக ஆட்சிக்குக் கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடையது.

பல தசாப்தங்களாக நாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று தனித்தனியான அரசியல் நிலை காணப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் நாட்டு மக்களை தனித்தனியாக பிரித்து கையாண்டனர்.

அது எந்தளவு என்றால், ஒரு யுத்தமே நாட்டில் உருவாகும் அளவுக்கு பிரித்தாளும் கொள்கையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன. பிரித்தாளும் அரசாங்கங்கள் எப்போதும் இதுபோன்று பொதுவெளியில் மக்களை சந்திப்பதில்லை. இனி ஒருநாளும் பிரிந்து செயற்படாது நாங்கள் அனைவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.

தனித்தனி மதமாக இருந்து விழாக்களைக் கொண்டாடாமல் நாங்கள் இலங்கையர்களாக இணைந்து ஒரு விழாவை கொண்டாடுவோம். வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நான் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒரு விழாவை இணைந்து கொண்டாட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஒக்டோபர் மாதம் எங்களுடைய கலை, கலாசாரங்களை, பண்பாடுகளை சேர்த்து பாரம்பரியமாக ஒரு விழாவை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய ஜனாதிபதி அநுர:: சபையில் சலசலப்பு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் அவரது உரையை மறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

வடக்கு – கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்துதான் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மேலும் வடக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலை பிரச்சினை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிக நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, இடைமறித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார். இதன்போது, அர்ச்சுனாவின் உரை இடைமறிக்கப்பட்ட நிலையில், சபையில் சிறு நகையொலியுடன் சலசலப்பு ஏற்பட்டது.

வவுனியாவில் புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியாவில் ரயிலில் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (31) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 44 வயதுடைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

இரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலை சம்பவம் ஜனவரி 29, ஆம் திகதி அவரது வீட்டில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஓரு அதிகாரியாகப் பணிபுரிந்த சந்திமா, சம்பவம் நடந்த அன்று காலையில் தனது தாயாருடன் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, தாய் தற்காலிகமாக சமையலறையை விட்டு வெளியேறியபோது சந்தேக நபர் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து , சந்திமாவின் பின்னால் நெருங்கி, மீன் கத்தியால் அவள் தொண்டையை அறுத்து, கொன்றுள்ளார்.

சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் தெல்லபட பகுதியில் உள்ள மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் தங்கியிருந்து அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் ஹர்ஷனியின் வீட்டிற்கு வந்து போயுள்ளார்.

இந்நிலையில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கயான் என்ற ஆசிரியர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரத்தினபுரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் டியுசன் வகுப்புகளை நடத்தி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் விஷம் குடித்துவிட்டு, ஒரு வயலில் கிடந்த பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் , நீதிமன்ற உத்தரவின்படி சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த பெண்ணின் தந்தை, கே.குணரத்ன சந்தேக நபருடனான தனது உறவை தனது மகள் கைவிட்டதாக கூறுகிறார். சந்தேக நபர் தனது மகளிடம் உறவை மீண்டும் தொடங்க பல சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தார்.

எனினும் சந்தேக நபரின் நடத்தை சரியில்லை என்பதால் மகள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய காதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனதாலும்,

பாதிக்கப்பட்டவருக்கு வேறு உறவுகள் இருந்ததாக சந்தேகம் எழுந்ததாலும் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஊறவைத்த அரிசியை சாப்பிட்டதால் பள்ளி மாணவி மூச்சுத்திணறி பலி!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆதனூரில் வசித்து வருபவர் ராமசாமி . இவரது மகள் மாலதி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

முதலுதவி செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலதி அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம் என தெரிகிறது. அதே போலவே சம்பவ நாளிலும் சிறுமி வீட்டில் இருந்தபோது,

அதிகமாக அரிசியை ஊறவைத்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் வீட்டில் மூச்சுத்திணறி இருக்கிறார். இதனைக்கண்டு பயந்துபோன பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

எப்போதும் வென்றான் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை . இதனால் சிறுமியை அவசர ஊர்தியில் தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.

ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்டமாக உறவினர்கள் கூறும்போது, சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவார் எனத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலாமாண்டு மாணவனை திருமணம் செய்த பேராசிரியர்!!

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹரிங்காட்டாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MAKAUT) அமைந்துள்ளது. உளவியல் துறையில் பணிபுரியும் ஒரு பேராசிரியரும்,

அதே துறையின் முதலாமாண்டு மாணவரும் மணமகன் மற்றும் மணமகள் போல உடையணிந்து வகுப்பறையில் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொள்வதையும், மாணவர் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் பூசுவதையும் காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது,

மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகையில், “சம்பந்தப்பட்ட பேராசிரியர் இது உண்மையான திருமணம் அல்ல என்றும், இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.

இது வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எனவே, இந்த விஷயத்தை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

“விசாரணையின் முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியரையும் மாணவரையும் விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்.

உண்மையில், பேராசிரியரின் நடவடிக்கைகள் முற்றிலும் கல்விசார்ந்தவையா அல்லது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை தேவையா என்பது விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளனர்.