பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை : விசாரணையில் வெளிவந்த தகவல்!!

இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.01.2025) அலபட பொலிஸ் எல்லைக்குட்பட்ட தெல்லபட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது, களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 29 வயதுடைய தெல்லபட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கொலையாளி சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து விட்டு ஓடிய போதும் அருகிலிருந்த வயலில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதனையடுத்து, கிராம மக்கள் அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 32 வயதுடைய குறித்த இளைஞன் மாணவியின் சக மாணவன் என்பதோடு அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற போது, மாணவியின் தாயார் வீட்டில் வேறு வேலை செய்துகொண்டிருந்ததாகவும் தந்தை வெளியில் சென்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் குதித்து காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில், குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் கல் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் சற்று முன்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் அப்பகுதியில் நடைபெற்ற ஆலயத் தீர்த்த திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில் குளத்துக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய நிலையில் பகல் காணாமல் போயிருந்தார்.

இவரை பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடிய நிலையில் நேற்று மாலை குறித்த சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மீட்கப்பட்ட சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கரம் : நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்!!

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற உலங்கு வானூர்தியுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : வீட்டில் உயிர் தப்பிய அதிசயம்!!

காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் முன் ஒரு நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா – அரசியலிலிருந்து விலக தீர்மானம்!!

தான் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிங்கள ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அரசியல் கலாசாரத்தின் மீது தனக்கு எந்த அனுதாபமும் இல்லை என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை எனவும் இது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா தெரிவாகி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அரசியல் மட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக அவ்வப்போது சம்பவங்களை அர்ச்சுனா மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும் தலைவலியாக அர்ச்சுனா ராமநாதன் செயற்படுவார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில், பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மரண வீட்டுக்கு சென்ற பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்!!

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும், ஹபரணை பிரேதச மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளான தெரிவித்த பொலிஸார் , தனியார் பேருந்து சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் மின்வாசிப்பாளர் போல கொள்ளை : பெண்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றிலுள் நேற்று (28) காலை பெண் ஒருவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காலை 10 மணியளவில் சென்ற இனந்தெரியாத ஒருவர் சில வீடுகளுக்கு சென்று மின்வாசிப்பாளர் போலவும்,

முகவரி ஒன்றினை விசாரிப்பது போன்று விசாரித்துவிட்டு, இறுதியாக பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கையர்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற பலர் தப்பியோடியுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்களின் ஆதரவுடன் விவசாயத் துறையில் பணியாற்றுவதற்காக இஸ்ரேல் சென்றவர்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு தப்பி ஓடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய துறைகளில் வேலை செய்ய முடியாமல் தங்கள் பணியிடங்களை விட்டு சென்று வேறு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசு விவசாயத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

எனினும் ஊழல் அரசியல்வாதிகள் பொருத்தமற்றவர்களை அதற்கு தெரிவு செய்து, வேலைவாய்ப்பு துறையை சீரழித்துள்ளதாக கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்புகள் இன்றி, சரியான நபருக்கு சரியான பதவியை வழங்குவதே தற்போதைய அரசாங்க கொள்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலியல் விவசாயத்துறையில் அதிகளவான வேலைவாய்ப்புகள் இலங்கையர்களுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவ்வாறு வேலைகளுக்கு செல்வோர் பொறுப்புடன் செயற்படுவதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டாம் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 15 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!!

சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவில் வசித்து வருபவர் 45 வயது பால்ராஜ். இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி.

இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர் செய்து வந்த வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலவில்லை. அதே நேரத்தில் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்பா என்னை மன்னிச்சிடுங்க.. கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இருப்பினும், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று ஜோயல், ஞாயிறுக்கிழமை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, தனது சகோதரர் பீட்டர் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவரது சடலத்தின் அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது. தனது மரணத்திற்கு காரணம் எனது மனைவியின் கொடுமையே என குறிப்பிட்டு இருந்தது.

இந்த கடிதத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களாக குடும்பத்தகராறு இருப்பதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில், “அப்பா, மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னை துன்புறுத்துகிறாள்.

அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் உயிரிழந்து கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்தவர் 3 மாதங்களுக்கு முன்பு வேலை இழந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்ததாக கூறுகின்றனர்.

இதுகுறித்து ஜோயல் “எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும், பெண்ணை கைது செய்ய வேண்டும், என் சகோதரனைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது” எனக் கூறினார்.

இன்ஸ்டாவால் விபரீதம் : இளைஞன் மீது ஆசையால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் . இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமானவர். இதில் ஸ்வேதா திருமணமாகி சமீபத்தில் மனைவியை பிரிந்தவர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை நான் மட்டும்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு நான் செய்து தீவிர விசாரணை நடத்தியதில் விஜய் முதலில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு பின்வாங்கினார்.

இதன் காரணமாகத்தான் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இயேசுவின் சிலுவையில் இருந்து கசிந்த நீர் : ஆச்சர்யத்தில் மக்கள்!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று(28) நீர் கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சர்யத்திகுள்ளாக்கியுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிசார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதோடு மட்டுமன்றி புகைப்படங்களையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தேவாலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

 

அந்தாட்டிக்காவின் வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர்!!

அந்தாட்டிக்காவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றுள்ளார்.

4,892 மீற்றர் உயரம் கொண்ட குறித்த மலையில் ஏறி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இதேவேளை, 2018ஆம் ஆண்டில், உலகின் மிக உயரமான மலைத் தொடரான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞன் : தகராறில் பறிபோன உயிர்!!

அவிசாவளை வித்தியாலயம் மாவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நண்பர்கள் தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சூரியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் வேலை வாய்ப்பு காரணமாக இரண்டு மாத காலமாக குறித்த விடுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞனுக்கும் விடுதியில் தங்கியிருந்த ஏனைய நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தாகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.