லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை காரில் இருந்தவர்களை காரை நிறுத்தாமல் படுவேகமாக சென்றதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் காரை துரத்திச்சென்ற நிலையில் கார் எதிரே வந்த கார் மீது(FORD FOCUS) மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.
காரில் பயணித்த 4 இளைஞர்களில், பின் சீட்டில் இருந்த 2 இளைஞர்கள் காரை விட்டு இறங்கி ஓடித் தப்பிவிட்டதாகவும் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சாரதியை மட்டுமே பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காரில் சென்ற இலங்கைதமிழர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நாட்டில், பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கம்பஹாவில் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எண்டேரமுல்ல, பாதிலியாத்துடுய பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல வீடுகளில் கொள்ளையிட்ட இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபருக்கு 21 வயது எனவும் பெண் சந்தேக நபருக்கு 20 வயது எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் களனி பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த போது அவர்களின் மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, மகளின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து, அவரை மிரட்டி, கயிற்றால் கட்டி வைத்தது விட்டு வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் திருட்டு இடம்பெற்ற சில மணித்தியாலங்களுக்கு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடம் திருடப்பட்ட பல தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,”தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம். தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தோட்ட நிறுவனங்கள் ஊடாகவும், சதொச ஊடாகவும் தேங்காய்களை விநியோகித்துக் கொண்டே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நாம் இதனை முகாமை செய்து கொண்டு பயணிக்கின்றோம் என்பது உண்மை. சில துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் அவற்றுக்கான முழுமையான முயற்சியுடன் தலையிட்டு வருகிறது. இவை பருவ கால பிரச்சினைகளாகும். அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.
இதேவேளை, அரிசி விலை தொடர்பில் எவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதில்லை என்பதில் அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது.
நாட்டரிசியை விட சிவப்பு அரிசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
ஆனால் நாட்டரிசி பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 70 மெட்ரிக் தொன் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில் அதனை விட அதிகமாகவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
இம்முறை 7 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு படிப்படியாக தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.
பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளது. இதுவே பணவீக்க வீழ்ச்சியாகும்.
இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு எவரேனும் மோசடிகளில் ஈடுபட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தளம், மாதம்பே பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் ஆண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல் போன நிலையில் நேற்றையதினம்(28.01.2025) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்றையதினம் காணாமல் போயுள்ளார். இது குறித்து அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்றையதினம், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (29) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 825,292 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 29,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 232,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 26,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 213,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 203,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா நேற்று 27.01.2025 (திங்கட்கிழமை) புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.முகுந்தன் அவர்களது தலைமையில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.
மேற்படி பொங்கல் விழாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஏஐ மாதிரிகள் ஆபத்தான “ரெட் லைனை” கடப்பதாகவும், தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ளும் (self-replication) திறனை பெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலத்தில் AI (செயற்கை நுண்ணறிவு) பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இரு வெவ்வேறு சூழ்நிலைகளைக் கொடுத்து, அதற்கு இந்த ஏஐ மாதிரிகள் எப்படி இயங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதற்கமைய, சமீபத்தில் நடத்திய ஆய்வின் முக்கியமான தகவல்களில், சில AI உருவாக்கங்கள் மனித தலையீடு இல்லாமல் தங்களை வடிவமைத்துக்கொள்கின்றன.
அதிலும் எந்தவொரு பிழையும் இல்லாமல் இவை தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொள்கின்றது. தன்னை அணைக்க (shutdown) செய்யும் முயற்சிகளிலிருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் திறனை அவை பெற்றுள்ளன.
இது ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு வடிவமைத்துக்கொள்ளும் போது, அதனை தடுக்கும் மென்பொருட்களை நீக்குவது, ரீபூட் செய்வது, அல்லது காணாமல் போன கோப்புகளை கணினியில் தேடுவது போன்ற நடவடிக்கைகளும் இதில் இடம்பெறுகின்றன.
ஆய்வாளர்கள் இதை ஏஐ அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து புதிய சிக்கல்களை எழுப்பும் முக்கியமான மைல்கல்லாகக் கருதுகின்றனர். “இது ஒரு ஆபத்தான தொடக்கமாக இருக்கலாம்,” என வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் பயன்படுத்தும், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மகிந்த விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ கருத்துரைத்துள்ளார். இதன்போது தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாகவும் அந்த சபை கூறியுள்ளது.
இதன்படி, கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
சிறுவர்கள் மீதான கடுமையான, தவறான நடத்தை சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தவறான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலகட்டத்தில், வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.
தவறான நடத்தை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், தவறான செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் தவறான புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு இவ்வாறு விற்பனையாகியுள்ளது.
புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் நேற்றையதினம் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பக்த அடியவர் ஒருவரே மாம்பழத்தினை ஏலத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம, கனேகொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 23 கிலோ நிறையுடைய திமிங்கில வாந்தி (அம்பர்) கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தலங்கம, தலவத்துகொட பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் தம்பதியினருக்கு டுபாய் மற்றும் இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்து அவர்களிடம் 5 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற முயன்ற இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 7100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தொலைபேசி அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக மிகுந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்த தொழிலதிபர் தம்பதி, பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, மிரட்டல் விடுத்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை ஆராய்ந்த போது அவை உள்ளூர் தொலைபேசி எண்ணை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் நீண்ட விசாரணையின் போது, பன்னல பகுதியில் இருந்து அழைப்புகளை மேற்கொண்ட சந்தேக நபர் அதே பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.