வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நேற்று (16.01) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் (15.01) வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வயலில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அறுவடை மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெல் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது.
நேற்றயதினம் (16.01) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு தலைமையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நெற் கதிர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோரால் பெறப்பட்டு அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வணடிலில் வவுனியா பசார் வீதி ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்பின மாவட்ட செயலகத்தில் நெற்கதிர்களை படங்கில் இட்டு பாரம்பரிய முறைப்படி அதனை சூடடித்து பெறப்பட்ட புதிய நெல்லை பாராம்பரிய முறைப்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி புத்தரிசியில் பொங்கல் இடம்பெற்று சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ். நகர்ப்பகுதியில் இன்று (16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல்,
மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ். நகர் பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்று விட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக வீதியை கூட்டுதல்,
குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் குறித்த குழுக்கள் வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யும் குழுக்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மோசடி கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
மேலும் அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை சேர்ந்த முதியவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின்டி சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம்,
தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்றுள்ளனர்.
அதன் மூலம் கணக்கின் செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை. இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது. உளுந்து செய்கையானது வடக்கில் வவுனியாவில் அதிகமாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
உளுந்துக்கான கேள்வியானது அதிகமாக இருக்கின்றது. உளுந்துச் செய்கைக்கான நிலங்கள் இருந்தும் இன்றும் எமது நாடு உளுந்தினை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
அதற்கு உளுந்து செய்கையில் ஈடுபடும் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்காமையும் ஒரு காரணமாகும்.
பொதுவாக மாரி காலங்களில் தமது மேட்டு நிலங்களிலும், சேனை நிலங்களிலும் உளுந்து செய்கை வவுனியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபோக காலங்களில் வயல்களிலும் சிறியளவில் மேட்டு நிலங்களிலும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியாவில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது.
இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிற் செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
2024-2025 கால போகத்தில் தீபாவளிக்கு முன்னர் விதைத்தவர்கள் அதிக மஞ்சள் நோய் தாக்கத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள். தீபாவளிக்கு பின்னர் விதைத்தவர்களுக்கு மஞ்சள் நோய் தாக்கம் குறைவாக ஏற்பட்டுள்ளது.
பூக்கின்ற காலத்தில் இந்த மஞ்சள் நோய் தாக்கம் ஏற்படுவதால் புதிய காய்கள் உருவாகி வருவது பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலின் அளவு குறைவாகவுள்ளது.
மஞ்சள் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரனிடம் கேட்ட போது, மஞ்சள் நோய் என்பது வைரஸ் நோய். பூச்சிகள் காவி பரப்புகின்றது. இதை ஆரம்பத்தில் இருந்து கட்டுப்படுத்த வேண்டும்.
திரவ பசளைகளை இலைகள் மூலம் வழங்குவதன் மூலம் பயிரை வீரியமடையச் செய்யலாம். பயிர் வீரியமாக இருக்கும் போது பூச்சி, நோய் தாக்கம் குறைவாக இருக்கும்.
அத்துடன் உளுந்தை விதைப்பதற்கு முன்னர் சணல், சோளம் போன்றவற்றை எல்லைப் பயிர்களாக இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் நட்ட பின் நடுவில் உளுந்தை விதைப்பதன் மூலம் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
இவைதவிர, விதைப் பரிகரணம் செய்வதன் மூலம் ஆரம்ப காலத்தில் ஏற்படும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வெயில் காலமாக இருந்தால் மஞ்சள் நோய் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
இதனால் நாம் உளுந்தை விதைக்கும் போது 10 கிலோ உளுந்துடன் ஒரு கிலோ சணலை கலந்து விதைத்தால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் பயிருக்கான வெப்பம் குறைக்கப்படும்.இதன் மூலம் மஞ்சள் ஆவதை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் அதில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக பிறரிடம் கடன் வாங்கயும், தம்மிடம் இருந்த நகைகளை அடைவு வைத்தும்,
நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றும் உளுந்து செய்கையை மேற்கொண்ட போதும் நோய் தாக்கத்தால் விளைச்சலின் அளவு குறைவடைய, மறுபுறம் அறுவடை செய்யும் உளுந்தை கூட நியாய விலையில் விற்க முடியாது தடுமாறுகின்றனர்.
உளுந்து வியாபாரிகள், இடைத்தரகர்கள் என உளுந்தை 300 – 400 ரூபாய்க்குள் கொள்வனவு செய்து வருவதுடன், அந்த உளுந்திலும் பல சாட்டுப் போக்குளைச் சொல்லி விலைகளை குறைத்து கொள்வனவு செய்கின்றனர்.
கடைகளில் 600- 800 ரூபாய் வரை உளுந்தின் விலை இருக்கின்ற போதும் செய்கையாளர்களுக்கு அதில் அரைவாசி பணம் கூட கிடைக்காத நிலை தொடர்கிறது.
உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை பத்திரமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.
விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும்.காற்று புகாவ்ண்ணம் 300 கேச் பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும். அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.
அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது என பிரதி விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நோய் தாக்கம், விலை கிடைக்காமை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து செய்கையாளர்களின் வாழ்க்கையுடன் இயற்கையும் விளையாடி வருகிறது.
வவுனியாவில் உளுந்து அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வருகின்ற மழையும் உளுந்து செய்கையாளர்களை பாதித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட உளுந்து செய்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்க அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்வரும் காலங்களிலும் மக்களை உளுந்து செய்கையில் ஈடுபட தூண்ட முடியும்.
அல்லது எமது நாட்டில் வளம் இருந்தும் நாம் உளுந்துக்கும் அயல் நாடுகளிடம் தொடர்ந்தும் கையேந்தும் நிலைக்கு செல்லும் அபாயத்தை தடுக்க முடியாது என்பதே உண்மை.
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று காலை அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சோற்று பொதியினை கொள்வனவு செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் பல்லியை அவதானித்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனையின் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரிடமும் நோயாளி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை பொது சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் தகவல் வெளியிட அவர் மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொது சுகாதார ஆய்வாளர் நுவான் கெகுலந்தரவும் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (14.01) மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில்இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி இரண்டு மாதங்களான இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
கேகாலை -தெரணியகல பகுதியில் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிதமையால் 18 வயது யுவதி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி அதேபகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞன் ஒருவருடன் காதல் உறவிலிருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்குக் குறித்த யுவதியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தமையினால் குறித்த இளைஞர் தமது நண்பருடன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தியுள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, கைதுசெய்யப்பட்ட யுவதியின் காதலன் எனக் கூறப்படும் இளைஞர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மற்றைய இளைஞர் 17 வயதுடையவர் என்பதால் அவரை நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கு இலக்கம்,
தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200,000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்று (14-01-2025) 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை திருடியுள்ளனர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (15.01.2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலை ஒன்றிலிருந்து சம்பவதினமான நேற்றிரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னாள் போராளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி சந்தேகநபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்பு பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (16.01) வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இரண்டாம் இணைப்பு : மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது.
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன.
அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதோடு ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் எதுவித தரச்சான்றுகளும் வழங்கப்படாத நிலையிலேயே அவற்றின் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 27,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 222,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அந்த அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது.
டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.