பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மரணம்!!

தென்னிலங்கையில் பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் பெந்தோட்டையில் உள்ள காமினி கல்லூரியில் படித்து வந்த 7 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவன் நீண்ட காலமாக இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பாடசாலை ஆசிரியைகளின் ஆடையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த ஆசிரியர்கள் சிலர் கவுன் அணிந்து வந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று பாடசாலை நாள் என்பதால், புடவை அணிந்து வரவேண்டிய நிலையில் அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலை அதிபர், அவர்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.

மதிப்பீட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் பரீட்சை ஆணையம் இருப்பதால், இதில் அதிபருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பாடசாலைக்கென ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைக் கட்டுப்படுத்த பொலிஸாரை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், பரீட்சை ஆணையாளர் நாயகம் பரீட்சை மையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரவிடம் வினவிய போது இன்று கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த இளைஞன்!!

கிளிநொச்சி  கரடிப் போக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று 917.01.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளை முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது.

பரிசுத் தொகையை வென்றதாக கூறி பணம் பறிப்பு

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம்.

பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம்.

இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அவர் அறிவுத்தியுள்ளார்.

அதேவேளை சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணைத்தளம் குறித்து சாருக தமுனுகல கூறுகையில் இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் பட்டம் விட்ட இளைஞனை தீண்டிய பாம்பு!!

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது விஷப் பாம்பொன்று தீண்டியுள்ளது.

அதன் பின்னர், இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழா!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நேற்று (16.01) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் (15.01) வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வயலில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் அறுவடை மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெல் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது.

நேற்றயதினம் (16.01) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு தலைமையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நெற் கதிர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோரால் பெறப்பட்டு அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வணடிலில் வவுனியா பசார் வீதி ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின மாவட்ட செயலகத்தில் நெற்கதிர்களை படங்கில் இட்டு பாரம்பரிய முறைப்படி அதனை சூடடித்து பெறப்பட்ட புதிய நெல்லை பாராம்பரிய முறைப்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி புத்தரிசியில் பொங்கல் இடம்பெற்று சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இரு பேருந்துகள் மோதி விபத்து : மாணவர்கள் உட்பட பலர் காயம்!!

தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் வித்தியாசமான போராட்டம்!!

யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ். நகர்ப்பகுதியில் இன்று (16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல்,

மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ். நகர் பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்று விட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக வீதியை கூட்டுதல்,

குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

42 வினாடிகளில் தீர்ந்துபோன ரயில் டிக்கெட் : 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை!!

இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் குறித்த குழுக்கள் வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யும் குழுக்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மோசடி கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை சேர்ந்த முதியவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின்டி சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம்,

தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்றுள்ளனர்.

அதன் மூலம் கணக்கின் செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உளுந்து செய்கையாளரை விரட்டும் நோய்த் தாக்கம்!!

தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை. இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது. உளுந்து செய்கையானது வடக்கில் வவுனியாவில்  அதிகமாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

உளுந்துக்கான கேள்வியானது அதிகமாக இருக்கின்றது. உளுந்துச் செய்கைக்கான நிலங்கள் இருந்தும் இன்றும் எமது நாடு உளுந்தினை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.

அதற்கு உளுந்து செய்கையில் ஈடுபடும் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்காமையும் ஒரு காரணமாகும்.

பொதுவாக மாரி காலங்களில் தமது மேட்டு நிலங்களிலும், சேனை நிலங்களிலும் உளுந்து செய்கை வவுனியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபோக காலங்களில் வயல்களிலும் சிறியளவில் மேட்டு நிலங்களிலும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியாவில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது.

இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிற் செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

2024-2025 கால போகத்தில் தீபாவளிக்கு முன்னர் விதைத்தவர்கள் அதிக மஞ்சள் நோய் தாக்கத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள். தீபாவளிக்கு பின்னர் விதைத்தவர்களுக்கு மஞ்சள் நோய் தாக்கம் குறைவாக ஏற்பட்டுள்ளது.

பூக்கின்ற காலத்தில் இந்த மஞ்சள் நோய் தாக்கம் ஏற்படுவதால் புதிய காய்கள் உருவாகி வருவது பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலின் அளவு குறைவாகவுள்ளது.

மஞ்சள் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரனிடம் கேட்ட போது, மஞ்சள் நோய் என்பது வைரஸ் நோய். பூச்சிகள் காவி பரப்புகின்றது. இதை ஆரம்பத்தில் இருந்து கட்டுப்படுத்த வேண்டும்.

திரவ பசளைகளை இலைகள் மூலம் வழங்குவதன் மூலம் பயிரை வீரியமடையச் செய்யலாம். பயிர் வீரியமாக இருக்கும் போது பூச்சி, நோய் தாக்கம் குறைவாக இருக்கும்.

அத்துடன் உளுந்தை விதைப்பதற்கு முன்னர் சணல், சோளம் போன்றவற்றை எல்லைப் பயிர்களாக இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் நட்ட பின் நடுவில் உளுந்தை விதைப்பதன் மூலம் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

இவைதவிர, விதைப் பரிகரணம் செய்வதன் மூலம் ஆரம்ப காலத்தில் ஏற்படும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வெயில் காலமாக இருந்தால் மஞ்சள் நோய் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

இதனால் நாம் உளுந்தை விதைக்கும் போது 10 கிலோ உளுந்துடன் ஒரு கிலோ சணலை கலந்து விதைத்தால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் பயிருக்கான வெப்பம் குறைக்கப்படும்.இதன் மூலம் மஞ்சள் ஆவதை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.

குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் அதில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக பிறரிடம் கடன் வாங்கயும், தம்மிடம் இருந்த நகைகளை அடைவு வைத்தும்,

நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றும் உளுந்து செய்கையை மேற்கொண்ட போதும் நோய் தாக்கத்தால் விளைச்சலின் அளவு குறைவடைய, மறுபுறம் அறுவடை செய்யும் உளுந்தை கூட நியாய விலையில் விற்க முடியாது தடுமாறுகின்றனர்.

உளுந்து வியாபாரிகள், இடைத்தரகர்கள் என உளுந்தை 300 – 400 ரூபாய்க்குள் கொள்வனவு செய்து வருவதுடன், அந்த உளுந்திலும் பல சாட்டுப் போக்குளைச் சொல்லி விலைகளை குறைத்து கொள்வனவு செய்கின்றனர்.

கடைகளில் 600- 800 ரூபாய் வரை உளுந்தின் விலை இருக்கின்ற போதும் செய்கையாளர்களுக்கு அதில் அரைவாசி பணம் கூட கிடைக்காத நிலை தொடர்கிறது.

உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை பத்திரமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.

விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும்.காற்று புகாவ்ண்ணம் 300 கேச் பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும். அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.

அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது என பிரதி விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நோய் தாக்கம், விலை கிடைக்காமை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து செய்கையாளர்களின் வாழ்க்கையுடன் இயற்கையும் விளையாடி வருகிறது.

வவுனியாவில் உளுந்து அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வருகின்ற மழையும் உளுந்து செய்கையாளர்களை பாதித்துள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட உளுந்து செய்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்க அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்வரும் காலங்களிலும் மக்களை உளுந்து செய்கையில் ஈடுபட தூண்ட முடியும்.

அல்லது எமது நாட்டில் வளம் இருந்தும் நாம் உளுந்துக்கும் அயல் நாடுகளிடம் தொடர்ந்தும் கையேந்தும் நிலைக்கு செல்லும் அபாயத்தை தடுக்க முடியாது என்பதே உண்மை.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி!!

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று காலை அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சோற்று பொதியினை கொள்வனவு செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் பல்லியை அவதானித்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனையின் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரிடமும் நோயாளி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை பொது சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் தகவல் வெளியிட அவர் மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொது சுகாதார ஆய்வாளர் நுவான் கெகுலந்தரவும் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் திருமணமான இரு மாதத்தில் இளைஞன் உயிர்மாய்ப்பு!!

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (14.01) மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில்இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி இரண்டு மாதங்களான இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

காதலுக்கு எதிர்ப்பு : யுவதியை கடத்திய இளைஞன்!!

கேகாலை -தெரணியகல பகுதியில் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிதமையால் 18 வயது யுவதி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி அதேபகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞன் ஒருவருடன் காதல் உறவிலிருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்குக் குறித்த யுவதியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தமையினால் குறித்த இளைஞர் தமது நண்பருடன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, கைதுசெய்யப்பட்ட யுவதியின் காதலன் எனக் கூறப்படும் இளைஞர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மற்றைய இளைஞர் 17 வயதுடையவர் என்பதால் அவரை நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.