யாழில் கரையொதுங்கிய மிதவைப்படகு : பிரதேசவாசிகள் சந்தேகம்!!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது.

மிதவை படகில் புத்த சம்ய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதேசவாசிகள் மிதவை படகை சென்று ஆவலுடன் பார்வையிடுவதாக கூறப்படுகின்றது.

 

வவுனியாவில் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக்கு மத்தியிலும் வவுனியா கந்தசாமி ஆலயம், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், தாஸ்கோட்டம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட வவுனியாவில் பல ஆலயங்களில் பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வீடுகள், கடைகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

சூரிய பகவானை தைத் திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும்.

இன்று நடைபெற்ற தை திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் களைகட்டிய தைப்பொங்கல் : மட்பாண்டங்களின் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!!

வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (14.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பட்டாசு , தோரணங்கள் , கரும்பு என்பவற்றின் விற்பனையும் அதிகளவில் காணப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!!

இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத் தேர்வை மே 2025 இல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.

 

கொழும்பில் தற்கொலை செய்த 16 வயது சிறுமி : வெளியான தகவல்!!

கொழும்பில் பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இரவு 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொரளை பொலிஸார், சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த சிறுமி சிறிது காலமாக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடல் தற்போது தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பெண்களுக்கு தொல்லை கொடுத்த மூவர் : சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை!!

நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மூவரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் குறித்த பெண் பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் வெளியானதையடுத்து, மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, நாடாளுமன்றத்தின் 15 ஊழியர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சபாநாயகர், குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது!!

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை (10.01) இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டுள்ளன.

குறித்த சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் பட்டாசு கொளுத்திய இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி!!

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் நேற்று இரவு ஏற்பட்ட நிலையில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமி மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமி அந்த மாடியில் உள்ள பெல்கனியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை கண்டறிய பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு இலங்கை தமிழர்கள் சட்டவிரோத படகு மூலம் வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தனுஷ்கோடி பொலிஸ் அதிகாரிகளுக்கு சில இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை சேர்ந்த 2 நபர்கள் ஈரோடு பகுதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து சட்டவிரோதமான முறையில் கள்ள படகு மூலம் இலங்கை செல்ல உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனுஷ்கோடி பொலிஸார் இன்றையதினம் (10-01-2025) அதிகாலை முதல் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஜோடியை பிடித்த விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த டிரோஷன் மற்றும் சஹானா என தெரியவந்தது.

குறித்த ஜோடி ஏற்கனவே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் எனவும், மீண்டும் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் கடல் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் எதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டனர். ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டார்களா மேலும் இவர்கள் மீது வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பொலிஸார் தீவிர விசாரணையை நடாத்தி வருகின்றனர்.

பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை உயிரிழப்பு : மருத்துவமனைமீது குற்றச்சாட்டு!!

ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை ஹோமாகம ஆதார மருத்துவமனையின் முன்கூட்டிய குழந்தைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் கவனக்குறைவாக தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இறந்தவர் யுகன் உதயங்கா என்ற பன்னிரண்டு நாள் குழந்தையாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 27 ஆம் திகதி காசல் மகளிர் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என்பதால், மேலதிக சிகிச்சைக்காக அதே நாளில் ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் திகதி அதிகாலையில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவென, குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, ​​குழந்தை பால் வாந்தி எடுத்த நிலையில், குளிர்ச்சியாகவும், எதிர்வினையாற்றாமலும் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து , சந்தேகப்பட்ட தாய், வார்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க தேடியும், எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்ததில், அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது ​​ , நுரையீரலுக்குள் பால் சென்றதே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் (09) ஹோமாகம ஆதார மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதில் குழந்தையின் நுரையீரலில் தாய்ப்பால் சிக்கியதாலேயே குழந்தை இறந்தது தெரியவந்தது.

மருத்துவமனை மீது குற்றம் சாட்டும் பெற்றோர் , மேலும் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயார் ஹோமாகம தலைமையக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளரான சிறப்பு மருத்துவர் எரங்க ராஜபக்ஷ,

இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 13 பேர் காயம்!!

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகி அதன் முன் பகுதி ஒரு பாறையிலிருந்து சரிந்து நின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து இன்று காலை 6:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ!!

அமெரிக்கா(USA)-லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மாநில மருத்துவ பரிசோதகர் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், இந்த காட்டுத்தீயானது வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுதீயானது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகின்றது.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. காற்றின்வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ குறையாமல் அதிகரித்து வருகின்றது.

இதில் பாடசாலைகள், ஹாலிவுட் நடிகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த காட்டுத்தீயில் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது.

எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளதுடன்,

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மற்றொருபுறம் உலங்குவானூர்திகள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை இரத்து செய்து உள்ளார். லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா காட்டுதீ மிக பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பிலான அறிவிப்பு!!

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீடு 64 மையங்களில் புதன்கிழமை (8) தொடங்கியது என்று அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திதி நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் 244,092 பேரும், தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இரும்புக் கம்பியால் எலுமிச்சை பழம் பறித்த இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து.

இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு கம்பி தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி துடிதுடித்து பலியானார்.

மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லை.

குடியிருப்பு பகுதிகளின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க கோரி ஏற்கனவே மின்சார வாரியத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்துறை அலட்சியப்போக்கால் இளம் பெண் பலியானதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாழ்வாக குடியிருப்பு பகுதியில் செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போலீசார் கூறியதால் பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சக ஊழியர்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை சக ஊழியர் ஒருவர் வெறித்தனமாக கத்தியால் குத்திய நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயன்ற சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் எரவாடா பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான தனியார் கால் சென்டர் ஒன்றில் சுப்தா ஷகர்(28) எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கிளம்பிய போது னார். அப்போது சக ஊழியரான கிருஷ்ணா சத்யநாராயண் கனோஜா(30) அங்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நிதி தொடர்பான தகராறு ஏற்பட்ட போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணா, சுப்தா ஷகர் காதரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட சுப்தாவை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “நடந்த சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கனோஜா கத்தியை காட்டி, ஷகர் காதரை மிரட்டிய நிலையில் பல முறை குத்தி உள்ளார்.

அதிக ரத்த இழப்பால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வலியோடு தரையில் விழுந்து கிடந்தார். பின்னர் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். கனோஜா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்றனர்.