வவுனியா குளத்தில் கழிவுகள் நிறைந்த நீரில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்!!

வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது,

அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர்.

வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர்.

இறுதிச் சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய தம்பதி விபத்தில் பலி!!

மாத்தளையில் சம்பவித்த விபத்தில் தம்பதி ஒன்று உயிரிழந்ததுடன், 3 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

பல்லேபொல, நாரங்கமுவ, மடவல உல்பத பகுதியில், குழு ஒன்றை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

மாத்தளை, உக்குவெல பகுதியை சேர்ந்த 75 வயதான முகமது இப்ராஹிம் ரிஷாப்தீன் மற்றும் 65 வயதான அவரது மனைவி ரஷீனா உம்மா ஆகியோரே உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவரின் உறவினரான 3 வயது குழந்தை மற்றும் முச்சக்கர வண்டியின் 35 வயது சாரதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மில்லவான பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குடும்பம் மீண்டும் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பல்லேபொல, நாரங்கம பகுதியில் உள்ள பாறையிலிருந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் இன்று(9) 24 கரட் தங்க விலை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 212,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 159,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,563 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,375 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 19,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைபேசிகளுக்கு தடை!!

எதிர்காலத்தில் இலங்கையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதோடு அதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு இந்த புதிய வேலைத்திட்டம் இடையூறு ஏற்படுத்தாது எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சட்டவிரோதமான தகவல் தொடர்பு சாதனங்களை முறையான தரம் இன்றி கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

நாட்டின் நுகர்வோருக்கு இதுபோன்ற உபகரணங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். இதற்காக இம்மாத இறுதியில் தானியங்கி முறையை அமுல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இந்த அமைப்பில், தற்போது பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள் தடுக்கப்படவில்லை மற்றும் வெளிநாட்டவர்கள் பாவிக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

யாழில் மாட்டால் பறிபோன இளைஞனின் உயிர்!!

யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான் ஒருவரின் மகனே உயிரிழந்துள்ளார்.

யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்து இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் பாணுக்குள் இருந்த லைட்டர் : வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் நேற்று (08.01) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு இன்று காலை சென்றுள்ளார்.

இதன்போது, தந்தை தனது இரண்டு மகன்களுக்கும் பேக்கரியில் இருந்து இரண்டு மீன் பாண்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு மகன் மீன் பாணை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருப்பதை கண்டு தனது தந்தையிடம் அதனை காண்பித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை முறைப்பாடு வழங்குவதற்காக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள், குறித்த போக்கரி பாணந்துறை மாநகர சபைக்குட்பட்டது எனவும் இது தொடர்பில் பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் முறைப்பாடு வழங்குமாறும் தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!!

இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம்(6) காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது.

இந்நிலையில் 33 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் , அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி : 2 பேர் பலி, மூவர் வைத்தியசாலையில்!!

மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து காட்டிய 82 வயது மூதாட்டி!!

தேசியளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை 82 வயதான கிட்டம்மாள் எடுத்துக்காட்டியுள்ளார்.

தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்ட இவர் வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். இதன் விளைவாக டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.

பளு தூக்கும் போட்டியில் மூதாட்டி தங்கம் வென்றமைகக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்!!

திருகோணமலை – சேருநுவர, தங்கநகர் பகுதியில் மீன்களை ஏற்றிவந்த லொறி ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (08.01.2025) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, வாகன சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், வேறு எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (08.01.2025) காலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு : பரபரப்பு சம்பவம்!!

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை – கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து, பதுளை நோக்கி செல்லும் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்ததாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. உயிரிழந்த இளைஞன் பற்றிய விபரம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கிளிநொச்சியில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல்!!

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் மதகுரு ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகாம்பிகைகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று (07.01) மீளாய்வு நடவடிக்கைக்காக குறித்த மதகுரு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.

முருகன் வீதி கனகாம்பிகைகுளம் பகுதியை சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் என்ற மதகுருவே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் கணவன்.. தற்கொலை செய்வது போல நடிக்க முயன்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல நடிக்க முயற்சித்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் கட்டியுள்ளார்.

புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 04ஆம் திகதி, குறித்த பெண் தன் கணவருக்கு வீடியோ கால் செய்து விட்டு, தனது அறையில் உள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதித்த 2 குழந்தைகளை கொலை செய்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பணிபுரியும் பெண்களிடம் புதுச்சேரிக்கு செல்ல இருப்பதால் அதிகாலையில் வீட்டிற்கு வேலைக்கு வரும்படி கூறிய நிலையில் அதில் ஒரு பெண் சீக்கிரம் வந்துவிட்டார்.

அவர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் கதவு திறக்காததால் அந்த பெண் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

அதன்பிறகு சிறுமி பிரியங்கா மற்றும் மற்றொரு குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்ததையும் கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லை. இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இரவு தன்னுடைய தம்பிக்கு அனுப்குமார் ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். மேலும் கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது குழந்தையின் மருத்துவ செலவு உட்பட பல்வேறு காரணங்களால் கடன் தொகை அதிகரித்திருக்கலாம் எனவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.