வவுனியாவில் இருந்து பயணித்த பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்!!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று (06.01.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது!!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இவரை தெரியுமா? பொதுமக்களின் உதவிகோரும் பொலிஸார்!!

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் 16 வயதான இரத்நாயக்க முதியன்சேலாகே கவீஷா தெவ்மணி எனும் சிறுமியே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ல பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 071-8591528 அல்லது 055-2295466 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு நபரொருவர் தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

இதனையடுத்து அவர் அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்க, “இப்போது உங்களது நகைகளை தரமுடியாது ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம் என கூறியுள்ளனர்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டபோது நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளனர்.

அதனையடுத்து, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் நிறுவனத்துக்குச் சென்ற நபர் தான் அடகுவைத்த ஆபரணங்களை கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நகைகளை பெறச் சென்ற நபரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தன்னிடம் மாத்திரமின்றி, இன்னும் பலரிடம் இதேபோன்று அத்துமீறி நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் , வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை இன்னும் சில நாட்கள் நிறுவனத்தில் வைத்திருந்தால் செலுத்தவேண்டிய வட்டிப் பணத்தொகை அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே நிறுவனத்தினர் நகைகளை திருப்பிக் கொடுக்க மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்!!

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) சற்று குறைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,541 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,430 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 219,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 201,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 192,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் – மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை!!

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவராகும். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம பொதுச் சந்தையில் மீன் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு முன்னால் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மலர்சாலையில் இருந்து அவரது சடலம் வத்தேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது,

​​குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக வத்தேகம நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து மாணவி பலி : 3 பெண்கள் அதிரடி கைது : வகுப்பாசிரியை சிறையில் அடைப்பு!!

 

பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34).

திண்டிவனம் தாலுகா ஆபீசில் இசேவை மைய ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களின் மூத்த மகள் லியா லட்சுமி (3), செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்தார். நேற்று முன்தினம் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து லியா லட்சுமி பலியானார்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடலை நேற்று காலை 8.15 மணி முதல் 9.30 மணி வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான 3 பேர்குழுவினர் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் மாணவியின் உடல், அவரது பெரியப்பா ஞானவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதில் பள்ளி தாளாளர் எமில்டா மற்றும் பள்ளி முதல்வர் டோமினிக் மேரி ஆகியோர் உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆசிரியை ஏஞ்சலை, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மாணவியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவியின் வீட்டிற்கு அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின்,

முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் தாயிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.

அப்போது அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினரும் நேற்று அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது விபரீதம்.. 7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த பாத்திமா, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த பாத்திமாவை மீட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!

தனது முகநூல் பதிவிற்கு ‘இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்,

தனது முகநூல் பதிவின் கீழ் வெளியான அவதூறான கருத்துகளுக்கு எதிராக எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு பிரபலமான நபரின் இரட்டை வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும் சிலர் என் மௌனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இது போன்ற அவமானங்களை நான் அனுபவிக்கிறேன் என்று பலர் என் மௌனத்தை தவறாக நினைக்கிறார்கள்.

அவரது பதவியேற்பு சலுகைகளை நான் மறுத்து விட்டேன். பழிவாங்கும் விதமாக எனது சமீபத்திய பதவியேற்பு விழாக்களில் அவர் தானாக முன்வந்து, என் பெயரை இழிவான தொனியில் குறிப்பிட்டார்.

ஒரு நபர் தெளிவான நோக்கத்துடன் பெண்களுக்கு எதிரான பாலியல் நிறக் கருத்துக்களை நாடினால் அது குற்றம் என்பதை நான் கண்டேன்.

நான் இத்தகைய அவமானங்களை அவமதிப்பு மற்றும் பரிதாபத்துடன் புறக்கணிக்க முனைகிறேன் ஆனால் நான் எதிர்வினையாற்ற மாட்டேன் என்று அர்த்தமல்ல. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது உகந்தது அல்ல” என்றார்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளைஞன் பரிதாபமாக பலி : தென்னிலங்கையில் ஏற்பட்ட துயரம்!!

காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்ற வெளிநாட்டவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தூக்கியெறியப்பட்ட இளைஞன் எதிரில் வந்த பேருந்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதர பட்டுவத்த, தொடந்துவ பகுதியை சேர்ந்த 25 வயதான சந்தீப் லக்ஷனா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இளைஞன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டவர் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் ஹிக்கடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவும் HMPV வைரஸ் : இந்தியாவில் முதல் தொற்று உறுதி!!

சீனாவில் (India) கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனித மெட்டா நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவின் (India) கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. எனினும், குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.

மின்சாரம் தாக்கி 14 வயது பாடசாலை மாணவி பலி!!

ஹசலக்க – தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹசலக்க பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மாணவி தனது தாயாரிடம் கைப்பேசியை பெற்றுக்கொண்டு தனது படுக்கையறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டு தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் அறைக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மாணவி இரும்புக் கைப்பிடி கொண்ட கட்டிலின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு அலறியுள்ளார். உடனே தந்தை எதிரே இருந்த மின்விளக்கை அணைத்துவிட்டு மாணவியை ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடா நகரம் ஒன்றிலிருந்து திடீரென வெளியேறும் இலங்கைத் தமிழர்கள் உட்பட குடியேறிகள்.!!

கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரொறன்ரோவில் குடியேறி 5 ஆண்டுகளில் பின்னர் இலங்கை தமிழர்கள் உட்பட குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான வெள்யிட்ட தகவலில், ரொறன்ரோ, மொன்றியால் மற்றும் வாங்கூவார் பகுதிகளில் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுச் செலவு அதிகரிப்பு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் ரொறன்ரோவை விட்டு வேறும் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிகள் வேறு இடங்கள் நோக்கி நகர்வதற்கான பிரதான ஏதுவாக வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் விலைகள் கருதப்படுகின்றது.

20 வயது online வியாபாரி உயிரைமாய்ப்பு : இளைஞனுக்கு நடந்தது என்ன?

அலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது 20 ) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞன் விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார்.

சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி online ஊடாக புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை இந்த online வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர் பங்கேற்று வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!!

இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காததால்,

இலங்கையர்கள் வெளி நாட்டிற்கு வேலைக்காக செல்வதில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழிப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடம் இருந்து கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் குவியும் எனவும்,

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்புபவர்கள் காரணமாகப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டிற்கு வேலை தேடும் இலங்கையர்கள் எவ்வித சிரமமும் இன்றி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல விரும்பும் இலங்கையர்களின் கடவுச்சீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,

இந்த நாட்டில் கிடைக்கும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு மாற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்த போதிலும்,

இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எழுப்பப்பட்டதை உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.