விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர் : கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு!!

தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த நான்கு பயணிகள் தாக்கப்பட்டதனால் பதற்ற நிலையில் ஏற்பட்டிருந்தது.

குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போர்வையில் சுங்க அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகள் மீது முறைப்பாடு செய்த சுங்க அதிகாரிகள், அவர்களை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விமான நிலைய தகவலுக்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில் சென்னை வந்த நான்கு பயணிகளை, துணை ஆணையர் சரவணன் தலைமையிலான சுங்கக் குழுவினர் விசாரணைக்காக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பயணிகளில் ஒருவரான சலீம், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் மொத்தமாக ஆடைகள் வாங்க சென்னைக்கு வரும் வர்த்தகர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடனான வாக்குவாதம் அதிகரித்ததால் இரு குழுக்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நால்வர் அடங்கிய குழுவினர் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி வீடியோ பதிவு செய்தனர்.

“நாங்கள் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். இங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகளால் நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம். இந்த வீடியோவை இலங்கை தூதரகத்திற்கு அனுப்புங்கள்” என்று இலங்கை பயணி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததால், அதிகாரிகள் பயணிகளை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பயணிகள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி, பொலிஸாரிடம் சுங்க அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையர்களிடம் மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (09.12.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த 63 வயதுடைய எம். விஜயரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் பார்வையிட்டதோடு. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு : அகற்றாவிடில் நடவடிக்கை!!

வவுனியா நகரில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அந்த தினத்தில் அகற்றப்படாது விடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வவுனியா மாவட்டசெயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு ஆகிய திணைக்களங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர். குறிப்பாக நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிரதான வீதிகளினூடாக பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன், போக்குவரத்து நெருக்கடிநிலையும் ஏற்ப்படுகின்றது.

இது தொடர்பாக வவுனியா நகரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தநிலையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல கொலைகள்… யாழில் ஆவா குழு தலைவராக இருந்த தமிழர் கனடாவில் கைது!!

யாழ்ப்பாண பகுதியில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை : பலருக்கு எதிராக வழக்குப் பதிவு!!

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குப் தாக்கலும் செய்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கமும் வவுனியாவில் அதிகரித்து வருகின்றது.

இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள என்பவற்றில் வவுனியா பொலிசார் இன்று (08.12) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.

அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 3 நாட்களாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் : தவிக்கும் குடும்பம்!!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் மனைவி இன்றையதினம் (08.12.2024) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வடமுனை, ஊத்துச்சேனையைச் சேர்ந்த 55 வயதுடைய சிவசுப்பிரமணியம் குருநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 05.12.2024 ஆம் திகதி, மட்டக்களப்பு – திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முச்சக்கரவண்டியை கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவரை கண்டவர்கள் தகவல் தருமாறும் பொலிஸில் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளனர்.

வவுனியா – சேமமடுவில் இடம்பெற்ற வாள்வெட்டு கொலை சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது!!

வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிசார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரத்திற்கு பிரியாவிடை : கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!!

கண்டி தேசிய வைத்தியசாலையில் 18 வருடங்களாக சேவையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரத்திற்கு, வைத்தியசாலை தரப்பினர் கண்கலங்கி பிரியாவிடை வழங்கியுள்ளனர். இந்த பிரியாவிடை நிகழ்வு நேற்றையதினம் (06.12.2024) கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன்போது, அங்கு குழுமியிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் CT ஸ்கேன் இயந்திரத்தின் மீது மலர்கள் வைத்து பிரியாவிடை வழங்கியதுடன், அங்கு உரையாற்றி வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் கண் கலங்கி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

18 வருடங்களாக, இலட்சக்கணக்கான நோயாளர்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய குறித்த CT ஸ்கேன் இயந்திரம், ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் தமது தொழில்சார் அறிவைப் பெறுவதற்கு உதவியுள்ளது.

2006ஆம் ஆண்டு கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஸ்கேன் இயந்திரம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டி தேசிய வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளது.

பல வருடங்களாக இயங்கிய இந்த இயந்திரத்தை தற்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மரியாதையுடனான பிரியாவிடை வழங்குவதற்கு தாம் தீர்மானித்ததாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு சிறந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றும்போது, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்த இயந்திரத்தின் சேவை அறிந்த, இங்கு பணியாற்றிய மற்றும் பணியாற்றும் அனைவருக்கும் வேதனையான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட ரயில் சேவை!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும்.

பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.

எனினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கம்பஹா சிறுமி கொலையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிசார் வௌியிட்டுள்ளனர்.

அந்தவகையில் டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.

அதன்படி முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆம் திகதி அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, ​​காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 5ஆம் திகதிவரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 ஆம் திகதி கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.

போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் , சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றையதினம்(6) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு : சோகத்தில் குடும்பம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த பெண் வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

மீண்டும் மிரட்டவுள்ள மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

இலங்கையில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று (07.12.2024) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (08) பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று (07) காலை 08.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இது டிசம்பர் 11 ஆம் திகதி இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலை அடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்படி கடற்பரப்புகளில் தற்காலிகமாக மிக பலத்த காற்றுடன் (மணிக்கு 60 கி.மீ.) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். தொடன்கொட, கெட்டகஹஹேன நேஹின்ன வீதியின் நேஹின்ன பிரதேசத்தில் நேற்று (06.12.2024) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெட்டகஹாஹேனவில் இருந்து நேஹின்ன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய நேஹின்ன மற்றும் நேபட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களின் சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் 300 பவுண் நகை கொள்ளையிட்டு கொழும்பில் தலைமறைவு : சிக்கிய நபர்!!

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த போது குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடினார். சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் கைதான பிரதான சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் வான் பகுதியில் மீன் பிடித்த நபர் சடலமாக மீட்பு!!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06.12.2024) மாலை இடம்பெற்றது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

இன்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் நபர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை தேடும்பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணிநேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் : மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்!!

அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

போகஹவாவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.