வவுனியா மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்று திறம்பட செயற்பட்ட நீர்ப்பாசனப் பொறியியலர் ஒருவரை வவுனியா மாவட்ட நீர்பாசனத் திணைக்கள உயர் அதிகாரி இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்தும், அவ் இடமாற்றத்தினை உடனடியாக இரத்துச் செய்து மறுபடியும் அவ் அதிகாரியை நியமிக்குமாறும் கோரி இன்று(28.06.2016) காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் அவர்களிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளர்.
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாவற்குளம், முகத்தான்குளம், செட்டிகுளம், இராசேந்திரகுளம், ஆகிய பகுதிகளின் கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பினர் கலந்து கொண்டனர்.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துத்தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்து இன்று(28.06.2016) காலை வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக ஒன்றிணைந்த மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பேரணி நடைபெற்றது.
இப் பேரணியில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுடதுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமாரிடம் மனு ஒன்றினையும் கையளித்தனர்.
இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா மற்றும் வவுனியா மாவட்ட கமக்கார அமைப்பக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி வீசப்படுவதுடன் இது இவர்களின் உயிருக்கு பாரதுரமான அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.
இதனால், முச்சக்கர வண்டியில் பயணிப்போரின் வசதி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் அதற்கான கட்டமைப்புக்களை பொருத்துமாறு இலங்கைக்கு அதிகளவில் முச்சக்கரவண்டியினை இறக்குமதிசெய்யும் நிறுவனத்திற்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது மேலும் தெரிவித்துள்ளது.
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு பிரதீபனின் வன்னி பட்டறையால் “கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிறந்த வழி காட்டல்” எனும் தொனிப் பொருளிலில் 20000 பெறுமதியான பட் ,கரபந்து, உதைபந்து என விளையாட்டு பொருட்களும், 2009.02.01 இல் புதுக்குடியிருப்பில் செல் வீச்சில் தந்தையை இழந்து இந்த வருடம் நடைபெறும் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுப்பார் என அதிபரால் சிபாரிசு செய்யப்பட்ட மாணவி ப.தரணிகா என்ற ஆண்டு 5 இல் கல்வி கற்று வரும் மாணவிக்கு துவிச்சக்கரவண்டியும் நேற்று (27.06.2016) பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் கு.விமலேந்திரன், விளையாட்டு பொறுப்பாசிரியர் கு.கோபிநாத், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), வன்னி பட்டறை அமைப்பின் லது, ரிச்சி ஆகியோருடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாலைதீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்தார்.
மாலைதீவில் முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது நஷீத். இவர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் புரட்சியால், 2012-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி இழந்தார்.
பின்னர், பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில், அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து, அந்நாட்டு உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில், 13 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்தார்.
தண்டனை பெற்ற முகமது நஷீத், தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
நான்கு நாட்களாக சென்னை மாநகரமே மிகப் பெரிய பதற்ற நிலையில் இருக்கிறது. காரணம், எல்லோருக்கும் தெரியும்.
காலை நேரம், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் ஊழியர் ஒருவர், இளைஞன் ஒருவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
வெட்டியவன் தப்பி ஓடிவிட்டான். போலீசார் அவனைத் தேடி வருகின்றனர். பிடிக்கலாம் அல்லது எத்தனையோ பிடிபடாக் குற்றவாளிகள் வரிசையில் அவனும் போய்ச் சேரலாம்.
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படும் சென்னையில் ஒரு ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது என்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உண்மையில் மிக அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதில் இந்திய அளவில் தமிழகம்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
2014-ம் ஆண்டு தேசியக் குற்றவியல் ஆவண நடுவத்தின் (National Crime Records Bureau) அறிக்கையின்படி, தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தோராயமாக 20 சதவிகிதம் நடைபெறுகிறது.
இதில் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாவது 19 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள்தான்.
சுவாதியின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், சென்னையில் வெளியே செல்லும் அனைத்துப் பெண்களிடமுமே ஓர் அச்ச உணர்வைப் பார்க்க முடிகிறது.
சுவாதியின் படுகொலை, ஏதோ ஒரு பதற்ற நிலைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று இருக்கிறது.
ஆனால், சுவாதியின் படுகொலையைவிட சுவாதி தொடர்பாகப் பரப்பி விடப்படும் செய்திகள் பெண்களுக்கு அதிக பயத்தைக் கொடுக்கிறது.
ஒரு கொலையை கிசுகிசுவாக மாற்றிப் புலனாய்வுச் செய்திகளைப் பரப்புவதை நம்மால் இரண்டு மூன்று நாட்களாகப் பார்க்க முடிகிறது.
சுவாதியின் முகப்புத்தகத்தை ஆராய்ந்தால் அதில் ஆண் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்களாம். இது ஒரு கண்டுபிடிப்பு.
எல்லாப் பெண்களின் முகப்புத்தகத்திலும் ஆண் நண்பர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இது மிகவும் எளிதாகப் புரியும் லொஜிக்.
அதையும் தாண்டி இன்னொரு செய்தி இருந்தது. அவர் பகிர்ந்த படங்கள் மற்றும் அவரது நிலைத்தகவல்கள் (status) பற்றிய செய்தி.
அவர் ‘அலைபாயுதே’ மற்றும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து இருந்தாராம். காதல் பற்றிய நிறையச் செய்திகளும் இருந்தனவாம்.
சுவாதியின் கொலைக்கான காரணம் தெரிவதற்கு முன்னரே எவ்வளவு கற்பனைகள்… எவ்வளவு செய்திகள்? அப்பப்பா! ஒரு பெண்ணாக எங்களுக்கு இருக்கும் பயமெல்லாம் எங்களை யாரேனும் கொன்று விடுவார்களோ என்பதல்ல.
அதையும் தாண்டி கொன்றுவிட்டால் அதை எப்படிப்பட்ட செய்தியாக பரவும் என்பதுதான். எந்தச் செய்தி ஆகினும் அதில் ஒரு கிசுகிசுவைத் தேடும் பாலியல் வறட்சி கொண்ட சமூகமாக நாம் இருக்கிறோம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேறு எதையோ சில சமூக விரோதிகள் சாதிக்க நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.
மேலும், இந்தக் கொலையை ஆணவப் படுகொலைகளுடன் எப்படி ஒப்பிட முடியும் என்று தெரியவில்லை.
சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 81 பேரையும் தமிழக மக்கள் மெளனமாகவே கடந்துசென்றார்கள். 81 பேர் பற்றிய விரிவான செய்திகள் எங்கும் வெளியிடப் படவில்லை.
அதை ஒரு குழு ஆய்வு செய்து வெளியிட்டபோதுதான் அது வெளியே வந்தது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அதையும் தமிழகம் வெகு எளிதாகவே கடந்துசென்றது.
கடந்த மூன்று வருடங்களில் நடந்த 81 ஆணவப் படுகொலைகளில் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள். எனவே, பிரச்னை இந்தச் சமூகத்தில்தான் உள்ளது.
இந்தச் சமூகம் பெண்களை ஒரு உடைமையாகக் கருதும் சமூகம். உலக மயமாக்கல் பெண்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறது என்று சிலர் கூவுகிறார்கள்.
ஆனால், உலக மயமாக்கல் உடைமை மனப்பான்மையை மிகத் தீவிரமடையச் செய்து இருக்கிறது. இந்தச் சமூகம் முழுக்க முழுக்க ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சமூகம்.
பொதுவுடைமைச் சமூகத்தில், தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகமாக, சொத்துடைமைச் சமூகமாக மாறியது முதல் இன்றுவரை பெண்களின் உடல் மீதான ஆண்களின் உடைமை மனப்பான்மை ஊறி இருக்கிறது.
அதைக் கல்வி, சிறிதளவும் மாற்றவில்லை. கல்வித் தரத்தின் லட்சணம் அப்படி. பாலியல் கல்வி பற்றி இன்றும் விவாதித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.
15 வயதில் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கல்வியைக் கொடுக்காமல், மதிப்பெண் எடுக்கும் மெஷினாக அவனை இந்தச் சமூகம் மாற்றிவைத்து இருக்கிறது.
இது தவிர படங்களில் இடம்பெறும் காட்சிகள், பெண்களின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.
ஆண்கள், பெண்களின் மீதான வன்முறையை நிகழ்த்தும் காட்சிகள் அனைத்தும் படங்களில் ஒரு ஹீரோயிசமாக காட்டப் படுகின்றன.
தொடர்ந்து ஆண்களுக்கான பெண்களின் மீதான வன்மத்தை ஊக்குவிப்பதாகப் பாடல்கள் வருகின்றன. பெண்கள் ஏமாற்றுவார்கள் என்று பெண்களின் மீதான வக்கிரத்தை ஏற்றி வருகின்றன.
அது ஆண்களிடம் மேலும் மேலும் வன்மத்தைத் தக்கவைக்கச் செய்கிறது. படம் எடுப்பவர்கள் காசு பார்த்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் இந்தச் சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
இவை எல்லாவற்றின் வெளிப்பாடுதான் இன்று சுவாதி என்ற பெண்ணின் கொலைக்குள் காதல் கதையைத் தேடும், அவரது நடத்தை மீதான விமர்சனங்களை வைக்கும் ஆட்களைக் கொண்ட இந்தச் சமூகம்.
இது, மேலும் மேலும் பெண்களின் மீதான ஓர் இறுக்கத்தைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது.
இது இறுக்கிக்கொண்டேதான் போகும். இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் கொல்லப்பட்ட பெண் சுவாதி. கண்டிப்பாக சுவாதியின் கொலைக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால், சுவாதியின் கொலையைப் பயன்படுத்திக்கொண்டு சமூக அமைதியைக் குலைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
“இது சாதி, அரசியல், மதம் சம்பந்தப்பட்ட கொலை அல்ல… எங்களது குழந்தை குறித்து எங்களுக்கு நன்கு தெரியும். தயவுசெய்து சுவாதி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று சுவாதியின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணாக எங்களது கோரிக்கை எல்லாம் குற்றவாளி குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் மட்டும் வெளிப்படுத்துங்கள். ஏற்கெனவே தங்கள் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பத்துக்கு மேலும் வலியைச் சேர்க்காதீர்கள்.
இந்தச் சமூகத்தில் இன்னொரு சுவாதி உருவாகாமல் இருக்க, வதந்திகளைப் பரப்பாமல் உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியலையும், வாழ்வின் அறத்தையும் சொல்லிக் கொடுங்கள்.
தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியில் இருந்து வவுனியா ஸ்ரேசன் வீதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் வைத்து விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சார நீர்இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவுடன் வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள், அலுவல உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிடியா பாம் பழைய குடியேற்ற கிராம மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக ஆற்று நீரை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கான குடிநீர் வசதியினை செய்து தருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
குறித்த கிராம கிராம மக்களால் பல அரசியல் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாரும் அங்கு செல்லாத நிலையில் அண்மையில் அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த அவர் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்
அத்துடன் தாம் மல்வத்து ஓயா ஆற்றை அண்டியவாறாக பல தசாப்தங்களுக்கும் மேலாக குடியிருப்பதாகவும் இதுவரை காலமும் தாம் குடிப்பதற்கு ஆற்று நீரையே பயன்படுத்துவதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த கிராம மக்களுக்கு முதற்கட்டமாக தாம் ஒரு மாத காலத்துக்குள் குழாய்க்கிணறு ஒன்றை தனது சொந்த செலவில் அமைத்து தருவதாக மஸ்தான் எம்.பி தெரிவித்தார்.
மேலும் தாம் அரசியலுக்கு வரும் முன்னரே இவ்வாறான உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும் தமது விஸ்தரிக்கப்பட்ட சமூக சேவையினை மக்களுக்கு வழங்கவே தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சார நீர் இறைக்கும் இயந்திரம், விசை தெளிகருவி, தெளிகருவி, சிமேந்து, பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அவர்களின் அலுவலத்தில் 25.06.2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்க பணிமனையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தயானந்தன் மற்றும் இணைப்பாளர் க.சிறிமதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பொசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கணனியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள். ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.
யாழ்ப்பாணம் – வேலணை, 5ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியினை எடுக்க முற்பட்ட யுவதி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து நேற்று (27.06) உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 20 வயதுடைய சோமசேகரம் கோசலா என்ற யுவதியே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றிய விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார். பிரேதபரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெங்கலச் செட்டிகுளம் சந்திக்கு அருகாமையில் நாளை மறுதினம் (30.06.2016) காலை 9.00 மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட உள்ளது.
இச்சிலை திறப்புவிழாவிற்கு இந்துமத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் வருகை தரவுள்ளார்.
இவ் ஏற்பாட்டினை வெங்கலச் செட்டிகுளம் இந்து கலாச்சார பேரவை ஒழுங்கு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இப்பகுதியில் நேற்று சிரமதானப் பணி நடைபெற்றது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருக்கிறார்.
நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்று பிரிட்டன் முடீவு செய்ய வேண்டும்.
ஐரோப்பிய அண்டை நாடுகளோடு வலிமையான சாத்தியமான பொருளாதார பிணைப்பை பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று கேமரன் பேசினார்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் திட்டமிட்ட 9 இலங்கை தமிழர்களை தமிழக க்யூ பிரிவு காவல்துறையினர் திருச்செந்தூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
சுற்றுலா வீசாவில் தமிழகம் வந்து அங்கிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கத்தையே இவர்கள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 9 பேரும் திருச்செந்தூரில் வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குறித்த 9 பேரையும் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள காவல்துறையினர், மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என்று தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கன்னியாகுமரி கரைப்பகுதியில் படகு ஒன்று மீட்கப்பட்டமையும் அது அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச்செல்வற்காக தயார்செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன.
சுவாதி மரணத்துக்கு பிறகாவது இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
இதனை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
இதுபோன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமன்றி மகனுக்கும் சொல்லித்தர வேண்டும் என கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியானதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி கடந்த 23ம் திகதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று வினுப்பிரியா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறையினரிடம் புகார் அளித்தும் வினுப்பிரியாவின் மற்றொரு ஆபாசப்படம் பேஸ்புக்கில் நேற்று வெளியாகியுள்ளது. இதனை கண்ட வினுப்பிரியா அவமானத்தால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
வினுப்பிரியாவின் புகாரை காவல்துறையினர் சரியாக விசாரிக்காததே அவரின் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள வினுப்பிரியாவின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது தந்தை, 10 நாட்களுக்கு முன்பே வினுப்பிரியாவின் பேஸ்புக் பக்கத்தை முடக்க கூறினோம். ஆனால் அவர் இறந்த பிறகு பேஸ்புக் பக்கத்தை முடக்கி உள்ளனர் என கூறியுள்ளார்.