இராமநாதன் அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி கார் ஒன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அர்ச்சனாவிற்குப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 

இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

வங்காள விரிகுடாவில் கடந்த 23ஆம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தாழமுக்கமானது முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது.

இதன் நகரும் வேகம் மிக மிக குறைவாகவே உள்ளதுடன், இன்று காலையிலிருந்து மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனிலை ரீதியாக தற்போது ஒரு வித அமைதி நிலவுகின்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகத்தை கணக்கிட்டால் இந்த அமைதி நிலையற்றது. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடையிடையே சற்று கன மழை கிடைக்கும்.

இந்த மழை இடைவெளி பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து கடலைச் சென்றடைவதற்கு வாய்ப்பான காலமாகக் காணப்படும். ஆனால் நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (30) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடரும். இன்று காலை நிலவரப்படி பல குளங்களின் நீர் கொள்ளளவு மிக உச்ச நிலையை எட்டியுள்ளது.

எனவே அக்குளங்களின் கீழுள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 06 பேரின் சடலங்கள் மீட்பு!!

மட்டக்களப்பு – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி – சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், இன்றையதினம் (28) மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.

இந்தநிலையில் , வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்டுள்ள சடலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் வெள்ளத்தில் எழுத்துச் செல்லப்பட்ட சொகுசுக் கார்!!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த வீதியில் உள்ள பாலியாறு – செப்பியாற்றிக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனமழையின் போது வீதியினூடாக சென்ற கார் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இயற்கையின் கோர தாண்டவத்தால் யாழில் 44 ஆயிரம் பேர் பாதிப்பு!!

யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117 குடும்பங்களைச் சேர்ந்த 44,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 131 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக, 68 பாதுகாப்பு நிலையங்களில் 1,700 குடும்பங்களைச் சேர்ந்த 6,031 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்!!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன், தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) மலேசியாவில் பெரிய நிறுவனங்களின் அதிபதி ஆவார். மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Bhd அவருக்குச் சொந்தம்.

அத்துடன் Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடக நிறுவனத்தை அவர் தோற்றுவித்தார்.

தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனந்த கிருஸ்ணன் என்பதுடன், ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள் உள்ளன.

கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) , யாழ்ப்பாணத்தை பூர்வீககொண்ட இவர் மலேசிய தலைநகரில் உள்ள பிரிக்பீல்டில் பிறந்தார்.

2011 இல் இவரது சொத்து 5.8 பில்லியன் டொலர் என மதிப்பிட்டிருந்த போர்ப்ஸ் சஞ்சிகை உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் இவரை இணைத்திருந்தது.

மகன் துறவற வாழ்க்கை

அதேதேவேளை ஆனந்த கிருஷ்ணனின் மகன் வென் அஜான் சிரிபான்யோ (Ven Ajahn Siripanyo) , 5 பில்லியன் டாலர் சொத்துக்களை உதறிவிட்டு துறவற வாழ்க்கையைத் தழுவியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து-மியான்மர் எல்லையில் வனத் துறவியாக வாழ்ந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

பல்வேறு நபர்களுக்கு மனைவியை விற்ற கணவன் : பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்!!

மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் வைத்தே, கணவன், மனைவியின் வாய், கழுத்து மற்றும் பல இடயங்களில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே காயமடைந்துள்ளார்.

மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருக்கும் கணவன் , மனைவியை பயமுறுத்தி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இது குறித்து மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பிரகாரம், முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இருவரும் கடந்த 26ஆம் திகதி பொலிஸூக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மறைத்து வைத்திருந்த பேப்பர் கட்டர் 21 வயதான மனைவியை வெட்டியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி, மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், 39 வயதுடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதோடு இளம் மனைவி சில காலமாக கணவனால் வெளிதரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இதற்கு முன்னரும் கணவனுக்கு எதிராக மனைவி முறைப்பாடு செய்திருந்ததாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மாவனல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடரும் அடைமழையால் வடக்கு கிழக்கில் மக்கள் கடும் சிரமம்!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் வடக்கு கிழக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கையில் தொடரும் பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 59 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர்பாய ஆரம்பித்துள்ளது.

அத்டன் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும் காரைதீவு பிரதேச செயலகத்தையும் இணைக்கின்ற மாவடிப்பள்ளி பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள இலங்கை கடற்படை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

குறித்த வீதியால் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்களென ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணித்து வருகின்றனர்.

அதோடு வயல் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் நெற் பயிர்கள் பாதிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

கழிவு நிர் வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பல கிராமபட புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்ததால் பலர் வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

6 மாணவர்களின் உயிரிழப்பால் பெரும் சோகத்தில் அம்பாறை மக்கள் : தேடும் பணி தொடர்கிறது!!

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காணாம்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.

மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

தஸ்ரிப், யாசீன் ஆகிய மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் (26) செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 13 பேருடன் சென்ற உழவு இயந்திரமே காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

6 மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதியும், உதவியாளரும் என 8 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காணாமல்போயிருந்த 8 பேரில் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையோரை தேடும் நடவடிக்கை தொடர்கின்றது. இந்நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு அம்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் : எங்கு தெரியுமா?

துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.

தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும். குறைந்தபட்ச விலையாக ரூ.10க்கு தேநீர் விற்கப்படும் அதே வேளையில், மும்பை தாஜ் ஹொட்டலில் இதன் விலை ரூ.650 ஆகும்.

இதை விட அதிக விலைக்கு ஒரு இடத்தில் தேநீர் விற்கப்படுகிறது. துபாயில் உள்ள ஹொட்டலில்தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு தேநீர் விற்பனையாகிறது. இந்திய வம்சாவளியான Sucheta Sharma ‘போஹோ கஃபே’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை துபாயில் நடத்தி வருகிறார்.

இங்குதான் Gold Karak என்ற பெயரில் தங்கத் தூள் தூவிய தேநீர், அருகில் 24 காரட் தங்க இலையில் வைத்த மஃபினுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலைதான் ஒரு லட்சம் ஆகும்.

இந்த தேநீர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Vlogger ஒருவர் இந்த உணவகத்தின் உள்ளே சென்று கோல்ட் தேநீர் உள்ளடங்கிய Home tour ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டதன் மூலம் வைரலாகியுள்ளது.

அவரது வீடியோவில் தங்கத் துகள்களை மேற்பரப்பில் தூவிய தேநீர் வெள்ளிக்கோப்பையில் வழங்கப்படுகிறது. அருகில் பிறை வடிவ பிரஞ்சு மஃபின் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

மின்னல் வேகத்தில் வந்த கார் : 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம்!!

சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களில் 5 பேர் சாலையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் காரை சுற்றி வளைத்த அப்பகுதியில் இருந்த மக்கள், உள்ளே இருந்த நபர்களைப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

உயிரை மாய்த்துக் கொண்ட ஏர் இந்தியாவின் பெண் விமானி : காதலன் கைது!!

ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றிய 25 வயதான ஸ்ருஷ்டி துலி, மும்பை வீட்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில், அவரது காதலன் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி, டெல்லியில் பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்து காதலித்து வந்தார்.

இருவரும் சேர்ந்து மும்பையில் வசித்து வந்த நிலையில், கடந்த 25ம் திகதி ஆதித்யா டெல்லி சென்றுள்ளார். அப்போது ஸ்ருஷ்டி உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக ஆதித்யாவிடம் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா வீடு திரும்பிய போது ஸ்ருஷ்டி டேட்டா கேபிளால் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். ஸ்ருஷ்டியின் உறவினரின் புகாரின் பேரில், போலீசார் ஆதித்யாவை கைது செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் வழக்கம் போல் மதிய உணவை சாப்பிட்டான். சிறுவன் திடீரென மூச்சு திணறி இறந்தான். வீரென் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்காக வீட்டில் செய்த பூரிகளை சிறுவன் கொண்டு வந்திருந்தான்.

மாணவன் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பூரி மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “மதியம் பள்ளியில் இருந்து எனக்கு போன் வந்தது.

எனது மகன் 3 பூரிகளை ஒரே நேரத்தில் சாப்பிட முயன்றதாகவும், மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறினர். உடனே மருத்துவமனைக்கு ஓடினேன்.

ஆனால் என் மகன் இறந்துவிட்டதாக கூறினார்கள். மகன் இறந்ததைக் கண்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தறிகெட்டு ஓடிய கார்… மரத்தில் மோதி தந்தை – மகன் உயிரிழப்பு!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவர் கடந்த 35 ஆண்டுகளாக சென்னை வியாசர்பாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது மனைவி மாலதி (50), மகன் விக்னேஷ் (30), மருமகள் ஜெயலட்சுமி (26) ஆகியோரை அழைத்துக் கொண்டு காரில் அரியலூர் மாவட்டம் கடம்பூருக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசித்து விட்டு நேற்று தனது மகள் புனிதவள்ளியின் குழந்தைகள் தினேஷ் (8), சகானா (6) ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு புறப்பட்டார்.

இவர்கள் மூன்று பேரும் சென்றுக் கொண்டிருந்த கார் திருமானூர் அருகே சத்திரத்தேரி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது ​​எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த விக்னேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மேலும், காயமடைந்த மாலதி, ஜெயலட்சுமி, தினேஷ், சகானா ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு மகள்களையும் கொன்று 7மாத கர்ப்பிணி தாய் எடுத்த விபரீத முடிவு!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தாய் தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள் இருந்தனர். மாதம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மாதம்மாள் தனது 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிக்கு சென்றார்.

அதன் பின்னர் சமாதானமடைந்த மாதம்மாள் மகள்களை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு வந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் மாதம்மாளையும் அவரது இரு மகள்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர்களும், நண்பர்களிடம் விசாரித்தும், பல்வேறு இடங்களில் இவர்களைத் தேடியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரவியின் வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் மாதம்மாள், 2 குழந்தைகளின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மாதம்மாளின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ரவியும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது கிணற்றில் மூன்று பேரும் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்த ரவி தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வேலை முடிந்து நேராக வீட்டிற்கு வராமல் எங்கே சென்றுவிட்டு வருகிறாய் எனக் கேட்டு மாதம்மாள் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு எற்பட்டு மோதல் வந்துள்ளது.

தன்னிடம் கணவர் உண்மையை மறைக்கிறார் என்ற கோபித்துக் கொண்டு கடந்த வாரம் அக்கரைப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் மாதம்மாள்.

பின்னர் சமாதானமடைந்து மீண்டும் வந்தவர், இதே தகராறில் மனமுடைந்து, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களைக் கடந்த நிலையில் தற்கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2 மகள்களையும் கொலைச் செய்து விட்டு 7 மாத கர்ப்பிணி பெண்ணும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வறுத்த கடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு, வறுத்த கடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இந்த வழக்கு புலந்த்ஷாஹரில் உள்ள நர்சேனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகமதுபூர் பர்வாலா கிராமத்தில் நடந்து வருகிறது.

நவம்பர் 24 ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சந்தையில் ஒரு தெரு வண்டியில் இருந்து வறுத்த பருப்பை வாங்கி வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 50 வயது தாத்தா கலுவா சிங் மற்றும் 8 வயது அப்பாவி பேரன் லவிஷ் ஆகியோர் உயிரிழந்தனர். நேற்று மருமகள் ஜோகேந்திரியும் இறந்துவிட்டார்.

தகவலின் பேரில், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம், பிரேத பரிசோதனை செய்யாமல், இறந்தவர்களின் உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். இன்று இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.