அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே ஆபிரகாமை இவனது பெற்றோர் சேர்த்துவிட்டனர்.
அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர்.
இதனால் அவன் 2014-ம் ஆண்டு அதாவது தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டான்.
அதன் பிறகு சக்ரமென்டோவில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படித்த அவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்தான்.
அமெரிக்காவில் 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.
தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான்.
இதுகுறித்து ஆபிரகாம் கூறியதாவது, 18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்,சிறு வயதில் இருந்தே எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பேன், அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது
எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புவதே எனது ஆசை என கூறியுள்ளான்.
திமுக பொருளாளர் ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.வை, ஜெயலலிதா திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால், முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன்.
ஸ்டாலினையோ, தி.மு.கவையோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை. அதிகாரிகளின் பதவி வரிசைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது.
எனினும், விதிகளை தளர்த்தி முன் வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன்.
மேலும், மாநில மேம்பாட்டிற்காக தி.மு.க செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை.
மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26ம் திகதி தொடங்குகிறது.
இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வார்னர், ஜேக்சன் பேர்ட், ஜோ பர்ன்ஸ், நேதன் கூல்டர் நைல், ஜோஷ் ஹேசில்வுட், மோய்சஸ் ஹென்றிக்ஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், பீட்டர் நெவில், ஸ்டீஃபன் ஒகீஃப், மிட்செல் ஸ்டார்க், ஆடம் வோஜஸ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
சோலார் இம்பல்ஸ் 2 (Solar Impulse 2) என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி வருவதற்கு எடுக்கின்ற கடைசிக்கட்ட முயற்சி இதுவாகும்.
ஒக்லஹோமா மாகாணத்தின் ஒகியோவிலுள்ள டேடனிலிருந்து இந்த விமானத்தின் 12வது பயணம் தொடங்கியுள்ளது. இந்த பயணத்திற்கு 17 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், அரச ஊழியர்கள் தங்கள் கடமை நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தைச் செலவிடுவது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அண்மையில் தொழிற்சங்கம் ஒன்று மேற்கொண்ட சுயாதீன ஆய்வொன்றின் பிரகாரம் ஒவ்வொரு அரச ஊழியரும் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பாவனை மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைக்கு ஒன்பது இலட்சம் அரச ஊழியர்கள் சேவையில் உள்ளனர். இதன் பிரகாரம் ஒருநாளைக்கு பதினெட்டு இலட்சம் மணித்தியாலங்கள் மனித உழைப்பு வீணடிக்கப்படுகின்றது.
இதனைக் கருத்திற் கொண்டே அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற சமீர இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவருக்கு பதிலாக யாரை இங்கிலாந்து தொடருக்கு அனுப்புவது என்பதை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு கூடி தீர்மானிக்கவுள்ளது.
இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதோடு, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாம் முன்நோக்கிச் செல்லுகின்ற நேர்வழியில் எதிர்படும் எந்தவிதமான தடைகள் ஏற்படினும் அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்லப்போவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சர்வோதைய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தின் கல்வி கலாசாரம் என்பவற்றை 1970ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்தார். இதற்கு சகலரும் தம்முடன் இணைந்து ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
1970ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பிய யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி தரம் இன்று 21ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
தண்டனை தான் சமூகத்தை திருத்தும் என்ற போதிலும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட கூடாது என்பதே தமது வாதம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனைகள் மூலம் யாழ்ப்பாணத்தில் சிறந்த சமூகத்தை உருவாக்குவது தமது கடமை எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொதுமக்களின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தம்மை தற்காப்பதற்கான உரிமை சட்டத்தில் உள்ளதாகவும் அவர் கோடிட்டு காட்டினார்.
யாழ் குடாநாட்டுப் பெண்கள் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாண நகரில் தாம் சுதந்திரமாக திரிகிறோம் என்ற குரல் எழும்பும் போதே தாம் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா தலமையில் ஆசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்ப்பாட்டில் ஆசிரியர் மாநாடு ஏதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆசிரியர்களுக்கான தொழில்சார்வாண்மையை ஏற்ப்படுத்துதல் , தொழில் சார் ஊக்கத்தை வழக்குதல், நவீன கற்பித்தல் சாதனங்களின் மூலம் கற்பித்தலை மேம்படுத்துதல், கற்பித்தல் சார் அனுபவங்களை வழங்குதல் போன்றவற்றை நோக்காக கொண்டே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடானது ஆய்வரங்கு, கண்காட்சி, பேருரைகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது.
கண்காட்சி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மண்டபத்தில் தரம் 1 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான மாணவர்களின் அனைத்து பாடங்களுக்குமான கற்பித்தல் சாதனங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
முல்லைத்தீவு, அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயிலின் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பொங்கல் விழா, நேற்று (23.05.2016) நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து சிறப்பித்தனர். வடக்கு, கிழக்கில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விசேட பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
பக்கதர்களின் வசதி கருதி கோவில் நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன் நிலையில் அங்கு ஒரு பெண் அடியார் தூக்குக் காவடி எடுத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றி உள்ளார்.
இவர் கடந்த மூன்று வருடங்களாக இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்ளையில் ஈடுபட்ட ஏறக்குறைய 100 கொள்ளையரை அடையாளம் காண ஜப்பான் காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
இதற்காக அவர்கள் பல மணி நேர பாதுகாப்பு கேமரா பட பதிவுகளை பார்த்து ஆராய்ந்து வருகின்றனர்.
தென்னாபிரிக்காவின் ஸ்டாண்டெர்டு வங்கியிலிருந்து திருடிய தகவல்களை வைத்து மூன்று மணிநேரத்திற்கு குறைவான காலஅளவில் இவர்கள் 13 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.
போலியான கடன் அட்டைகளை பயன்படுத்தி ஜப்பானிலுள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளே இருக்கும் 1400 பணம் எடுக்கும் இயந்திரங்களிலிருந்து இவ்வளவு பணத்தையும் அவர்கள் எடுத்துள்ளனர்.
இந்த பணம் வழங்கும் இயந்திரங்களில் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை வசதி இருந்ததால் தான் அவற்றிலிருந்து கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது.
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும் கல்வி கற்க கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.
சாதாரண தரப் பரீட்சையில் தேவையான பாடங்களில் சித்தியெய்தாத மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் இடை விலகுவதனை தவிர்க்க முடியும்.
இசை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அந்தந்த துறைகளில் உயர்கல்வி தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப யுகமொன்று உருவாக உள்ளதனால் தகவல் தொழில்நுட்பத்துறைக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க்பபட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார்.
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார்.
சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் சத்திர சிகிச்சை நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு மாலைத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலைத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, சத்திர சிகிச்சைக்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலைத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார். அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் அங்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்திர சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியதும் மாலைத்தீவுக்கு திரும்பிவர முஹம்மது நஷீத் மறுத்து விட்டார். அவரது ஓய்வூதியம், மருத்துவ சலுகை ஆகியவற்றை யாமின் தலைமையிலான அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசு நஷீதுக்கு அகதியாக தஞ்சம் அளித்துள்ளதாக அவரது அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதும் லண்டன் நகரில் இருந்து முஹம்மது நஷீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாலைத்தீவின் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களை எல்லாம் அடக்குமுறை அதிகாரத்தை பயன்படுத்தி தண்டித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மாலைத்தீவில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வாதிகார ஆட்சிக்கு இணையான ஒரு அரசின்கீழ் மாலத்தீவு சிக்கியுள்ள நிலையில் நானும் இதர எதிர்க்கட்சி தலைவர்களும் நாடுகடந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கருதுகிறோம்’ என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஷீதுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது தொடர்பாக இங்கிலாந்து அரசின் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகளின் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் முற்பட்டபோது, ‘வழக்கமாக நாங்கள் தனிநபர்கள் தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதில்லை’ என பதில் அளித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டக்கண்டல் கிராமத்தில் இருந்து ஆண்டாங்குளம் சந்தியூடாக வற்றாப்பலை ஆலயத் திருவிழாவிற்கு சென்ற ஹயஸ் வாகனத்துடன், அதி வேகமாக செலுத்தி வரப்பட்ட மோட்டார் சைக்கிள் மேதியதிலே குறித்த விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு குறித்த இருவரும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் அடம்பன் வைத்தியசாலையிலும், மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்திற்கு உள்ளான இருவரும், மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவர் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.