ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் (புளொட்) 8 வது தேசிய மாநாடு சிறப்பாக வவுனியா, கோவில்குளம், ஆதி மண்டபத்தில் நேற்று (22.05) நடைபெற்றது.
முன்னதாக உமாமகேஸ்வரன் இல்லத்தில் மறைந்த புளொட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அங்கிருந்து கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பேராளர்கள் ஊர்வலமாக வந்து உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள ஆதி மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவனேசன், ஜி.ரி.லிங்கநாதன், 14 நாடுகளில் இருந்து வந்த புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா க.சந்திரகுலசிங்கம், கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதுடன் கட்சியின் பிரகடனமும் வெளியிடப்பட்டு கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அச்சிறுமியின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஹர்டிகா என்ற சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒக்சிஜன் சிலிண்டரின் துணையுடன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹர்டிகா பொலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
இது குறித்து அமிதாப் பச்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பிறந்த நாளன்று அவரை சந்திக்க விரும்புவதாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள தனது இல்லத்துக்கு ஹர்டிகாவை வரவழைத்து, அவருக்கு பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அங்கேயே பிறந்தநாள் கேக்கை வெட்டி, அந்த சிறுமிக்குக் கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்.
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காத மாணவர்களுக்கு அதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு கொழும்பு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர்கள் இணங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பான தகவல்களை வலையக் கல்வி பணிமனைகளூடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வௌ்ளம் மற்றும் மணசரிவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்களை திரட்டுவதற்காக 24 மணித்தியாலங்களும் செயற்படும் விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
0112 78 63 84, 0712 365 965 அல்லது 0718 838 212 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடியில் மல்லிகைப்பூ கொலனி, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்தினர்.
மின்வெட்டால் இருள் சூழ்ந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்தனர். சிறியவர்கள், முதியவர்கள் என்றும் வித்தியாசம் பாராமல் கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சரமாரியாக வெட்டிய அந்தக் கும்பல் பின்னர் தப்பிச் சென்றது.
இந்தத் தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்ததாகவும் காயமடைந்தவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
தற்போது தாக்குதலில் காயமடைந்த 16 பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாதிகப்பட்ட மக்களின் உறவினர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்ன காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது என தெரியாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள ஓரிரு நாட்களிலேயே சென்னையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கலை கல்லூரி மாணவர் ஒருவர் இனவாதம் தொடர்புடைய கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டதால் அந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
சுவிஸ் நாட்டின் வலைஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கலை கல்லூரி மாணவர் ஒருவர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்ட நிர்வாகம்.
இனவாதம் என்பதை ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் யூத எதிர்ப்பு மற்றும் மக்களிடையே வெறுப்பை தூண்டி விடுதல் உள்ளிட்டவையை எந்த உருவகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர் மீது இறுதி முடிவை எடுக்கும் முன்னர் இதன் பின்னணி குறித்து முழுவதுமாக அறிந்து கொள்ளவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மட்டுமின்றி முன்னர் பதிவேற்றிய அனைத்து கேலிச்சித்திரங்களையும் அவர் அப்புறப்படுத்தியுள்ளார்.
மாணவர் வரைந்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அனைத்தும் யூதர்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கவே தார் வீதிகள் உருகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில்கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே சாலைகள் பலவும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகி பொதுமக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் அமைந்துள்ள சில்வாசா சாலையில் தார் உருகி வழிந்துள்ளதால் வாக ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டுள்ளனர்.
சில்வாச பகுதியில் மட்டுமின்றி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலும் இதுபோன்று அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகி வழிந்துள்ளது. இப்பகுதி சில்வசா பகுதிக்கு 50 கிலோ மீற்றர் வட திசையில் அமைந்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த மே மாதத்தில் புது டெல்லியில் உள்ள சில பகுதிகளில் தார் சாலை உருகி வழிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை காரணமாக சீருடையை தொலைத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வௌ்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைப்பழத் துண்டு தொண்டையில் இறுகியதன் காரணமாக ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பதுளை கயிலாகொட பிரதேசத்தில் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தாய் குழந்தைக்கு வாழைப் பழத்தை ஊட்டிக்கொண்டிருந்த போது அதில் ஒரு துண்டு குழந்தையின் தொண்டையில் இறுகியுள்ளது.
இதனையடுத்து தாய் குழந்தையை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை திடீரென இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு வயதும் 4 மாதங்களுமே ஆன ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
வாழைப்பழத்துண்டு தொண்டையில் இறுகியதன் காரணமாக நிமோனியா ஏற்பட்டே இந்த குழந்தை இறந்ததாக பிரேதப் பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் தமது இரண்டு நாள் பகலுணவை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள அனைத்துக் கைதிகளும் நேற்றும் இன்றும் தமக்கு வழங்கப்படும் பகலுணவை வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த பகலுணவுக்காக செலவு செய்யும் நிதியினை சிறைச்சாலை தலைமையகத்தின் ஊடாக வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேபோன்று மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் நிருவாகத்தின் கீழுள்ள கல்முனை சிறைக் கூட உத்தியோகத்தர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தினை வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன் வந்துள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை சிறைக் கூட உத்தியோகத்தர்கள் 135 பேர் இவ்வாறு தமது ஒரு நாள் சம்பளத்தினை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் மேலும் தெரிவித்தனர்.
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பூப்பந்து(பட்மிண்டன்) சுற்றுப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 15 வயது மற்றும் 19 வயதுப் பிரிவு மாணவர்கள் சம்பியன் பட்டத்தை தமதாக்கியுள்ளனர்.
மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று (21.05.2016) நடைபெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை எதிர்த்து மன்னார் பற்றிமா மத்திய மகாவித்தியாலயம் பலப் பரீட்சை நடாத்தியது.
மூன்று ஒற்றையர் ஆட்டங்கள், இரண்டு இரட்டையர் ஆட்டங்கள் என மொத்தம் 5 செற்களைக் கொண்ட ஆட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 3:0 என நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
மாகாணமட்டப் போட்டிகளில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தின் 15 வயதுப் பிரிவு அணி இத்துடன் 5வது முறை தொடர்ச்சியாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சப்ரகமுவ மாகாணத்தின் 52 பாடசாலைகளை காலவரையறை குறிப்பிடாமல் மூட அம் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 52 பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 33 பாடசாலைகள் மற்றும் பாதிக்கப்பட்ட 19 பாடசாலைகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கேகாலை மாவட்டத்தின் 46 பாடசாலைகளும் இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பாடசாலைகளும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர்.
இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பலவீனம் காரணமாக கொழும்பு நகரம் நீரில் மூழ்கி அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்திருந்தால் களனி கங்கை நிரம்பி பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அவ்வாறான நிலையில் அந்த வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வளங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் முழு கொழும்பும் நீரில் மூழ்கி இருக்கும். நாட்டின் தலைநகருக்கு போதிய பாதுகாப்பின்மையானது, அது பல்வேறு விடயங்களை பாதிப்பை ஏற்படுத்தும். களனி கங்கை கொழும்பினை மூடியிருந்தால் பொருளாதார மையங்கள் தடம்புரண்டிருக்கும். நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சுற்றி ஏற்படுகின்ற காலநிலை மற்றும் அதன் தாக்கம் காரணமாக கொழும்பு நகரத்தின் ஆயுட்காலம் குறைவடையும் அபாய நிலையை எட்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமைகளுக்கு அமைய 2100ம் ஆண்டளவில் கொழும்பு நகரத்தின் ஒரு பகுதி கடலினால் மூழ்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சர்வதேச மட்டத்திலான ஆய்வு முடிவுகளும் உறுதி செய்துள்ளது.
முறையற்ற நகர்புற அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழலை கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக இயற்கைப் பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையினை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
களனி கங்கையின் நீர் போக்குவரத்து முழுமையாக கொழும்பிற்கு செல்ல இடமளிக்காமல் அவிசாவளை அல்லது குருவிட்ட ஆகிய பிரதேசத்திற்கு அருகில் அல்லது குருணாகல் ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்கு திருப்புவதற்கான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான மாற்றும் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையை காப்பாற்றும் வழிமுறையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்படாத பிரதேசங்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது தான் பிரதான காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அனர்த்தங்களின் அதிர்வெண்களும் அதிகரிப்பட்டுள்ளது. மொத்தமாகவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு இரண்டு முறை வெள்ள அனர்த்தம் அல்லது மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படுவதோடு அதில் முழு மக்களிலும் ஏறத்தாழ பாதியளவிலான மக்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வருடமும் வறட்சியான நிலையில் காணப்படுகின்ற போதிலும் அது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே பாதிக்கின்றது.
இலங்கைக்கு தேவையான நீர், மலையக பிரதேசங்களில் சேமிக்கப்படுகின்றமையே அந்தப் பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான நீர் நிலைகளை உலர் வலயங்களில் சேமித்து வைக்க வேண்டும் என தற்போதைய புவியியல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சமநிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக உத்ரா துருவத்தில் பனி உருக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதன் தாக்கம் காரணமாக 23 டிகிரி அளவில் பூமி சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பூமி தட்டில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கமைய அடுத்த நூற்றாண்டில் நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
யூடியூப்பில் தான் வெளியிட்ட அல்பம் ஒன்று பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து அந்த நம்பிக்கையில் அதையே படமாக எடுத்த வருகிறார் டிஜே என்ற இசையமைப்பாளர்
ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது இப்போது பல வழிப் பாதைகள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சி அறிமுகம் மூலமும், குறும்படங்கள், அல்பங்கள் போன்றவற்றின் மூலமும் என்றெல்லாம் பல திசைகளிலிருந்து எளிதில் சினிமாவில் நுழைய முடிகிறது.
அப்படி ஒரு புதிய திசையிலிருந்து வந்து முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் ‘அம்சனா’ என்கிற ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். ‘முத்து முத்து’ என்கிற மியூசிக் அல்பம் யூடியூபில் ஒன்பது மில்லியன், அதாவது 90 லட்சம் ஹிட்டடித்து கலக்கியது. அதில் டிஜே என்பவர் பாடியதுடன் தோன்றி நடித்து அந்த அல்பத்தை உருவாக்கியும் வெளியிட்டார். இவரது இயற்பெயர் டிஜெந்தன் அருணாச்சலம். இவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்.
உலக நாடுகளில் அதற்குக் கிடைத்த பரவலான பலத்த வரவேற்பு திரையில் நுழையும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் துணிவையும் டிஜேக்குத் தந்திருக்கிறது. திட்டம்போட்டு ஆயத்தமாகி களத்தில் இறங்கிவிட்டார் டிஜே. ‘அம்சானா’ என்ற படத்தை எடுக்க முடிவு செய்து, டிஜேவே நாயகனாக களமிறங்கினார். நாயகி ஸ்ரீபிரியங்கா. ஒளிப்பதிவு- சிவானந்தம், இசை—டிஜே, இயக்கம்- நிஷாந்த் என படக்குழு உருவானது.
பாண்டிச்சேரிக்கு படப்பிடிப்புக்கு புறப்பட்டுப்போய், பாதிப்படத்தை முடித்து விட்டார்கள். இப்படத்தை லிசா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இது ஒரு காதல் கதைதான் என்றாலும் திரைக்கதை, அதைச் சொல்லும் விதம் எல்லாவற்றிலும் புதிய பாதை புதிய பயணம் என்றிருக்குமாம்.
இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட அதை வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எனவே வியாபாரம், வெளியீடு தளங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறது இந்தப் படக்குழு.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட சார்லி படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்திக்கு மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளிவருகிறது. அவ்வாறு உருவாகும் படங்களில் சில வெற்றியடைந்தாலும், பல படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. அப்படியிருந்தும், அப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்வம் கொஞ்சம்கூட குறையவே இல்லை.
அந்த வரிசையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட சார்லி படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் தமிழில் மாதவன் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், தற்போது இந்த தகவலை மாதவன் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இப்படத்தில் யார் நடிப்பார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள கொலன்னாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (23.05) நாளை மறுதினமும் (24.05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடுவளை கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மரியாள் கல்லூரி, முனிதாஸ குமாரதுங்க மகா வித்தியாலயம், இஹல போமரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு வலயத்திற்குட்பட்ட மட்டக்குளி சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், பாலத்துறை சங்க போதி வித்தியாலயம், அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம், மாளிகாவத்தை தாருசலாம் முஸ்லிம் வித்தியாலயம், ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
களனி கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வானை மகா வித்தியாலயத்திற்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர ஹோமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட மயாதுன்ன மகா வித்தியாலயம், பஹல ஹங்வெல்ல கனிஷ்ட வித்தியாலயம், பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், துன்னானை சுமன போதி வித்தியாலயம், ஆட்டிகல கனிஷ்ட வித்தியாலயம், ஜல்தர கனிஷ்ட வித்தியாலயம், முல்லேகம கனிஷ்ட வித்தியாலயம், படவள கனிஷ்ட வித்தியாலயம், பானலுவ கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் பாடசலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் 2012 முதல் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலிசாரிடம் கொண்டு வரப்படும் இது தொடர்பான முறைப்பாடுகளும் மாதத்திற்கு 100 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு முதல் இயங்கி வரும் Goddard விசாரணை எனப்படும் ஒழுங்கமைப்பானது நாட்டிலுள்ள சட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் சிறுவர் மற்றும் சிறுவருக்கெதிராக துஸ்பிரயோகங்கள் தொடர்பில் எவ்வாறான செயற்பாடுகளை கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் கண்காணிப்பதாக உள்ளது.
இருப்பினும் இங்கிலாந்தில் உள்ள சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமாக அமைந்துள்ளது.