ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபாக்கு வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!!

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின.

இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.

பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார்.

இரண்டாம் நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர் இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது.

இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை.

புயல் நகரும் வேகத்தில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறையிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இன்று (26) காலை 8.00 மணியளவில் இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும்.

நாளை மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும்.

அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப்படும். பின்னர் 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும்.

தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும். நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க.

கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அம்பாறை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி இன்றும் நாளையும் (2024 நவம்பர் 26 மற்றும் 27) மிக முக்கியமான நாட்களாகும். இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

எனவே பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாரு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கில் கொட்டித்தீர்க்கும் மழை : பரீட்சைக்கு செல்லமுடியாது தவித்த மாணவர்கள்!!

மாரிகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் அடைமழை நேற்று (25.11) காலை முதல் மழை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்றையதினம் கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆரம்பமான நிலையில் மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து மாணவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்லும் நடவடிக்கையை இராணுவ அதிகாரிகள் மற்றும் வடக்கு பகுதி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வீதிகள் அழிந்தும், பாலங்கள் உடைந்தும் கிடப்பதால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட கடினமான சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உடைந்து வெளியேறும் நீர் , பாலத்தின் மீது பாய ஆரம்பித்ததால் முல்லைத்தீவுக்கான பாதை மூடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாகாணங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தொடர்பு முறிந்துவிட்டது.

வவுனியாவில் உள்ள பேராறு நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் இரண்டு பிரதான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததனால், அக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்க முடியாமல் உள்ளது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை வரை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாகாணங்களில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இராணுவம், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேசமயம் பெருமழையினால் விவசாய நிலங்களும், மாடு, ஆடு, கோழி என ஏராளமான பண்ணை விலங்குகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து : பெண் உயிரிழப்பு!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்றைய தினம் (26.11.2024) அதிகாலை இந்த விபத்து புனேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியில் வழுக்கும் நிலைமை காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ,உயிரிழந்த பெண்ணின் விபரம் வெளியாகவில்லை.

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிடியானையானது யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில், 2021 மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது காருடன் மோதி விபத்துக்குள்ளான மற்றுமொரு காரின் வாகன சாரதியைத் கடுமையாகக் தாக்கி காயப்படுத்தியதாகக் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்த காரணத்தினால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பா.உ கு.திலீபன் EPDP கட்சியில் இருந்தும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகினார்!!

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்,

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன்.

மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.

இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தாமதம் : நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ள கார்களின் விலை!!

வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (25) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகளை ஒப்பிடும் போது கடுமையான உயர்வு பதிவாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.

இதன்படி, டொயோட்டா – பிரீமியர் 2017இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், Toyota – Vitz – 2018இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 93 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Toyota – Aqua G 2012இன் முந்தைய விலை 60 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 68 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Honda – Vessel2014இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Nissan – X-Trail 2015 இன் முந்தைய விலை 84 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே இருபத்தேழு லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

சுஸுகி – வேகன் ஆர் 2014இன் முந்தைய விலை 47 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 57 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Suzuki – Alto – 2015இன் முந்தைய விலை 30 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 32 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழர் பகுதியில் வேருடன் சாய்ந்த மரம் : வாகனம் சேதம்!!

நட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பரந்தன்- முல்லைத்தீவு A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்தது.

இதில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர்.

 

யாழில் வைத்தியர் வீட்டில் கொள்ளையிட்டு போதைப்பொருள் வாங்கிய இளைஞர்கள்!!

யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தட்டாதெரு சந்தி பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் இருக்கை பகுதியை உடைத்து , அதனுள் இருந்த ஒரு தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பணத்தினை கொள்ளையடித்து சென்ற சந்தேக நபர்களின் ஒளிப்படங்கள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

சந்தேகநபர்கள் அரசடி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

இதன்போது இருவரிடம் இருந்தும் 10 போதை மாத்திரைகளும் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் எனவும் , போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திருட்டு , கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

இ.போ.ச பேருந்துடன் தனியார் பஸ் மோதி விபத்து : இரண்டாகப் பிரிந்த பேருந்து!!

ஹட்டன் – வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அட்டனிலிருந்து கண்டில் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வந்த இ.போ.ச. பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டாகப் பிரிந்த தனியார் பஸ்

விபத்தின்போது தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் பின்புறப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மிஸ்டர் வேல்ட் 2024 இல் வரலாறு படைத்த இலங்கையர்!!

வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையின் மேக்கா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.

இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “தேசிய ஆடை மக்கள் தெரிவு” விருதையும் அவர் பெற்றார்.

இந்தநிலையில் மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக்கா சூரியராச்சி படைத்துள்ளார்.

கலாசார பிரதிநிதித்துவம்

அவரது கலாசார பிரதிநிதித்துவத்திற்கு ஒரு சான்றாக, மேகாவிற்கு அதற்கான விருது வழங்கப்பட்டது.

இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தை தனது உடையின் மூலம் சூரியராச்சி வெளிப்படுத்தியதாகவும், அவரது ஆடை நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோர விபத்தில் சிக்கிய ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகின.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று (25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து இ.போ.ச பேருந்து எதிர்திசையில் வருவதை கண்டு பிரேக் அழுத்தியதில் தனியார் பேருந்தின் பின்பகுதி நழுவி அரச பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பேருந்தின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? அதிர்ச்சியை கிளப்பிய இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு!!

பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் அவர்களின் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள்.

கண் தெரியாத பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் 2025 க்கு ஒரே மாதிரியான பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளனர்.

பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்நிலையில் , ​​​​2025 க்கு, இரண்டு பார்ப்பனர்களும் ஒரே விஷயத்தை கணித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ்

இரு தீர்க்கதரிகளின் பெரும்பான்மையான கணிப்புக்களும் இதுவரை ஆண்டுதோறும் உண்மையாகி வருகின்றன. இப்போது, ​​2025 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிலையில், வரவிருக்கும் ஆண்டை அவர்கள் கணித்தவை மீண்டும் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் பழம்பெரும் தீர்க்கதரிசிகள் இருவரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு அழிவுகரமான வளர்ச்சியை முன்னறிவித்துள்ளனர்.

2025 பரவலான பேரழிவு

அதாவது – 2025 இல் ஐரோப்பாவில் ஒரு மோதல், அதன் மக்கள்தொகையின் அதிக விகிதத்தை அழிக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

பார்வையற்ற பல்கேரிய பாபா வாங்காவின் சில கணிப்புகள் உண்மையாகிய பிறகு சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வழிபாட்டு நபராக ஆனார்.

பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பண்டைய பிரெஞ்சு ஜோதிடரான Michel de Nostredame பல துல்லியமான கணிப்புகளையும் செய்துள்ளார்.

பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸின் 2025 ஆம் ஆண்டிற்கான அதே கணிப்பு வரவிருக்கும் ஆண்டில், பாபா வங்கா ஐரோப்பாவில் ஒரு பேரழிவு யுத்தத்தை முன்னறிவித்துள்ளார்.

விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை

இது பரவலான பேரழிவு மற்றும் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மோதல் 2025 ஆம் ஆண்டில் கண்டத்தை “பேரழிக்கும்” என்று அவர் கூறியிருந்தார். 2025 இல் நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று வங்கா கூறியதாக கூறப்படுகிறது.

அவர்களின் கணிப்பின்படி , இரு நாடுகளுக்கு இடையே 2025 இல் ஒரு புதிய போர் வெடிக்கும் என்று அவர் நம்பினார், ஆனால் அதன் விளைவுகள் உலகம் முழுவதும் அலைமோதும்.

நோஸ்ட்ராடாமஸ், ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான எதிர்காலத்தை கற்பனை செய்திருந்தார்.

அவரது பல நூற்றாண்டுகள் பழமையான தீர்க்கதரிசனங்கள் கண்டத்தை மூழ்கடிக்கும் “கொடூரமான போர்கள்” மற்றும் எதிரிகளை விட மோசமான “பண்டைய பிளேக்” மீண்டும் எழுவதைப் பற்றி பேசுகின்றன.

ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும்

பரஸ்பர சோர்வு காரணமாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டார்.

இதுதவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வெற்றி குறித்தும் வங்கா வெளிப்படையாகப் பேசினார்.

1979 இல் எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவ் உடனான சந்திப்பின் போது, ​​​​வாங்கா கூறியதாகக் கூறப்படுகிறது, “அனைத்தும் பனிக்கட்டியைப் போல கரைந்துவிடும், ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை.”

மேலும் ரஷ்யா அனைத்தும் வழியிலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், உலகின் அதிபதியாகவும் மாறும் என்றும் வங்காவை தி சன் மேற்கோள் காட்டி எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.

காதலுக்கு மறுப்பு : நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்த மாணவி!!

காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23.11.2024) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய, புடலுஉயன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தோழியின் கையைப் பிடித்தவாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிர் பிழைத்த மாணவி தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி தனது காதலுக்கு பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதிய கடிதத்தின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அர்ச்சுனா : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!!

நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்த சபாநாயகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

“தனி ஒரு நபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகத் தெளிவாக உள்ளது.

மக்கள் இன்று நாட்டில் அப்படியொரு விடயத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என நாங்கள் நம்புகின்றோம்.

அது ஒரு தனியொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து பேஸ்புக் கணக்குகளையும் சரிபார்த்தோம்.

நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்” என்றார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 35-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.