வவுனியாவில் 2420 மாணவர்கள், 20 நிலையங்கள் : மழைக்கு மத்தியில் பரீட்சை ஆரம்பம்!!

க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சைசெயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை உயர்தரபரீட்சைக்கு வவுனியாவில் 2420 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும்மழை பெய்து வருகின்றது. இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை இம்முறை உயர்தரபரீட்சையில் நாடளாவிய ரீதியில் மூன்றுஇலட்சத்து 33,185பேர் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

வவுனியா பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் 2 வடிகால்களும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம் : சிறைச்சாலைக்கு சென்று விசாரணை நடத்திய நீதிபதி!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்தவராவார்.

மரணமடைந்தவரின் சடலம் சிறைக்காவலர்களால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் நீதவான் தி.திருவருள் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார். அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டார்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கொல்லப்பட்டரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும்!!

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், பல மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கான அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் வெளியிட்டது.

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, மத்திய வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழையுடன் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த முதலாம் திகதி கொழும்பில் இருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தனர். பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், இன்றையதினம் (23-11-2024) அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாகன விபத்தில் சகோதரர்கள் மரணம்!!

குளியாபிட்டிய பகுதியில் வாகனம் ஒன்று குடைசாய்ந்தமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்புராபொல பாலத்திற்கு அருகில் இன்று காலை ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குருநாகலை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் கொள்ளை : பொலிஸார் நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டள்ளது.

இதன்படி நிலையில் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருவரையும் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த ரயில் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!

குருணாகல் – கல்கமுவ பிரதேசத்தில் விரைவு ரயில் மோதி 2 வயது 2 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (22-11-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தை வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடியபோது கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக தாய் கண்முன்னே உயிரிழந்துள்ளது.

கல்கமுவ, புத்ருவகந்த பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எம்.செஜன் ஹசரங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

இந்த வீட்டிலிருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு ரயில் பாதை அமைந்துள்ளதால், குழந்தை வெளியில் செல்லாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி அமைக்கப்பட்டிருந்த போதும் குழந்தை அதனை கவிழ்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் குழந்தையுடன் கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த போது, ​​கவர் கீழே விழும் சத்தம் கேட்டது.

குழந்தை ரயில் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட தாயார், ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றபோதும் விரைவு ரயில் குழந்தை மீது மோதி உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வடக்கு மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!

வவுனியா (Vavuniya) உட்பட வடமாகாணத்தினுள் நடமாடும் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைப்பின் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் சுமார் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க எனப்படும் இருவரும் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் தற்போது வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

எனவே, அந்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) என்ற தொடர்பு இலக்கத்தக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் அறவித்துள்ளனர்.

யாழில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவியே இன்றையதினம் (22.11.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மாணவியின் பாட்டி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றையதினம் (22.11.2024) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இந்நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு மாரடைப்பினால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (23.11.2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்கவுள்ள அரசாங்கம்!!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் (22.11.2024) இந்த கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்காக, கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவ பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி!!

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இரட்டைப் பதிவு தொழிலை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இம்முறை சுமார் 20 வைத்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், மருத்துவராகப் பதிவு செய்துள்ள அர்ச்சுனா இராமநாதன், உத்தியோகபூர்வமாக தனது வேலையை விட்டு விலகாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்ட போதும், அவர் மருத்துவத் தொழிலைக் கைவிடவில்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தில் மற்றொரு தொழில் மூலம் சம்பளம் பெற முடியாது என்பது இலங்கையில் உள்ள நடைமுறையாகும்.

இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் நிலை தோன்றலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்னவும் தனது வைத்தியர் தொழிலை கைவிடாது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமைக்காகவே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவாகியுள்ளது.

வைத்தியர் ராஜித சேனாரத்ன தொடர்பான விவகாரம் இலங்கை அரசியல் மற்றும் சட்ட செயல்பாடுகளில் முக்கியமானதாகும். 1994இல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது மருத்துவர் தொழிலை தொடர்ந்திருந்தார்.

இந்த செயல் இலங்கையின் சட்டங்களின் கீழ் ஒரு அரச அதிகாரி அல்லது தேர்தல் பதவி வகிப்பவர் எந்த ஒரு வேறு தொழிலையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது என்ற விதிமுறைக்கு எதிராக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துச்செல்லப்பட்டபோது, அவர் வைத்தியர் தொழிலை நிறுத்திவிட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.சுயேட்சைக் குழு எம்.பி வைத்தியர் அர்ச்சுனா ஊடகங்கள் முன் பேசுபொருளானமையும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை – மகன் கைது!!

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பகுதியை சொந்த இடமாக கொண்ட 66 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காபுரே பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 32 வயதான மகன் கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சைனை காரணமாக மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு – நெருக்கடியில் மக்கள்!!

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் லாப் எரிவாயுநிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது, தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையால் நாடளாவிய ரீதியில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.