ஓடும் புகையிரதத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற 20 வயதுப் பெண் : அடுத்து நேர்ந்த துயரம்!!

இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்ரதா பெஹெரா (20). இவர் தனது தோழிகளுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

ரயில் சென்றுகொண்டிருந்தபோது நம்ரதா செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து நம்ரதாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் உருவான காதல் : 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்!!

முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

அதேபோல், சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் திருமணமாகவில்லை. இவரும், கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். இதில், பத்மேஸ்வரருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் இந்தி பாடல்களை அடிக்கடி பாடுவார். இது ஜெயபிரபாவுக்கு மிகவும் பிடிக்கவே, இருவரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம், இரு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு தெரியவரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

பின்னர், இத்திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.

இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், “பொது நிதியுதவியுடன் இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளோம்.

திருமணத்திற்கு வந்த 4000 பேருக்கு உணவு பரிமாறியுள்ளோம். அவர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்” என்றார்.

மனைவியை கொலை செய்யும் முன் நாயை கொன்று வேக வைத்து ஒத்திகை : நெஞ்சை உறைய வைக்கும் வாக்குமூலம்!!

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியில் வசித்து வருபவர் 39 வயது குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி 35 வயது வெங்கட மாதவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டினார்.

எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். குருமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். இந்த உடலை எப்படி அழிப்பது என்பது குறித்து செல்போனில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்தார்.

இதனை தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய்க்கு உணவளித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளை குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார்.

அதே பாணியில் மனைவியை வெட்டி சமைத்து தண்ணீரில் வீசியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வவுனியாவில் தடம்புரண்ட யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்!!

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், தொடருந்தின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மஹாவவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவாகும்.

சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞன் : தந்தையை கொலை செய்த தாத்தா!!

சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞனின் தந்தையை யுவதியின் தாத்தா கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (26.01) இடம்‌ பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி‌ கிராம சேவையாளரின் தலைமையில் பிரதான வீதியொன்றை “தூய்மையான இலங்கை” ‌வேலைத்திட்டத்தின் கீழ் ‌சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

சுமார் 100 பேர் கலந்து‌ கொண்ட சிரமதானத்தில் சிங்கள் யுவதி ஒருவரை காதலித்த , தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் யுவதியின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் .

இந்நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயம் மேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் பெண்ணின் தாத்தா மட்டுமே நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

திருமணம் செய்யாது காதல் ஜோடி, காதலன் வீட்டில் பல மாதங்களாக தங்கி இருப்பது தொடர்பில் பெண்ணின் தாத்தா வினவிய போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக பிரேதம் காவத்தை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை தாக்கிய மின்னல்!!

பிரேசில் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றின் வால்பகுதியில் மின்னல் தாக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிரேசிலின் – பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.

அப்போது, வானில் இருந்து மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியுள்ளது.இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் காணொளி எடுத்துள்ளார்.

இதுபற்றி பெர்ன்ஹார்டு வார் கூறும்போது, பெரிய புயல் ஒன்று வீசியதால், விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம்.

இது புகைப்படம் எடுப்பதற்கான சரியான தருணம் என உணர்ந்தேன். அப்போது, நாங்கள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தபோது, விமான நிலைய தரை பகுதியருகே மின்னல் தாக்கியது. அது விமான வால் பகுதியையும் தாக்கியபோது படம் பிடித்தேன் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும்.

மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமானத்தின் புறப்பட தாமதடைந்ததுடன் பயணிகளும் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சரிசெய்யப்பட்ட பிறகு 6 மணி நேரம் கழித்து விமானம் பயணத்திற்குப் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இரு வெளிநாட்டவர்!!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்த பகுதியில் நேற்று (26) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாடகை அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த இருவரில் ஒருவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகவேகத்தில் முச்சக்கவண்டியை செலுத்தியதாலேயே, முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,

விபத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் : பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னரே மரணம்!!

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவருவதற்கு முன்னர் அதில் தோற்றிய மாணவன் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.

பெறுபேறுகள் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவன் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

பலாங்கொடை, வதுகாரகந்த பகுதியை சேர்ந்த சுபுன் சதருவன் என்ற இந்த மாணவன் பலாங்கொடை வலேபொட தொரவெலகந்த பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார்.

வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அந்தப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவர் அவராகும்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, தாயார் குசுமா பொடிமணிகே தகவல் வெளியிட்டுள்ளார்.

“என் மகன் இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்தார். புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பின்னர் 160 மதிப்பெண்களை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

எனினும் தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

முடிவுகளைப் பார்க்கும்போது, ​​அவர் 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் என் மகன்தான். எனினும் இந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி கடலில் மூழ்கிய ரஷ்ய தம்பதி : பொலிஸாரின் துணிச்சலான செயல்!!

காலி – அஹுங்கல்ல கடற்கரையில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதி ஒன்றை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (25.01.2025) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ரஷ்யாவை சேர்ந்த 51 வயது ஆணும் 46 வயது பெண்ணும் கடலில் நீந்திக் கொண்டிருந்த வேளை பலமான அலையில் சிக்கியுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் அதிகாரி மனோஜ் அரியரத்னா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சங்கீத் மற்றும் துலாஞ்சயா இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நீச்சல் வீரர்கள் வலுவான நீரோட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திருகோணமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் உயிரிழந்தவரிடம் கல்வி கற்ற மாணவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரியையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்று உயிரிழந்த கல்லூரி மாணவன்!!

சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், ராஜகோபால் கேட்டரிங் வேலைக்காக கோடம்பாக்கத்திற்கு ரயிலில் சென்றுள்ளார்.

அப்போது அவர் காதில் மாட்டியிருந்த Bluetooth ஹெட்செட் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அதனை எடுக்க கீழே இறங்கிய ராஜகோபால் தண்டவாளத்திலேயே நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக வந்த மற்றொரு ரயில் அவர் மீது மோதியதில் மாணவர் ராஜகோபால் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடூரமாக நடந்த ஆணவக் கொலை : துடி துடித்து பலியான காதல் ஜோடி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி.

அவரது மகன்கள் வினோத்குமார் (27) மற்றும் கனகராஜ் (23). அவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களில், கனகராஜ் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இது அவரது சகோதரர் வினோத்குமாருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மீதான காதலை கைவிடுமாறு தனது தம்பியை எச்சரித்து மிரட்டினார்.

ஆனால், அவர் தனது காதலை கைவிடவில்லை. இந்த சூழ்நிலையில், ஜூன் 25, 2019 அன்று, காதல் ஜோடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வினோத்குமார்,

அவர்களைச் சுற்றி வளைத்து, அரிவாளால் இருவரையும் வெட்டிக் கொன்றார். இதில், கனகராஜ் இறந்தார். வர்ஷினி பிரியா ஜூன் 29 அன்று கோவை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இந்த இரட்டைக் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் சரணடைந்தார்.

இந்த வழக்கில், மேட்டுப்பாளையம் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகளான கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை எஸ்சி-எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வினோத்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் அவர் மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளார் என நீதிபதி விவேகானந்தன் நேற்று தீர்ப்பு வழங்கினார். மற்ற 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினோத்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) விவாதிப்பார்கள் என்றும் நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

வலிப்பு நோயால் உயிரிழந்த 22 வயது யுவதி : வைத்தியசாலை மீது குற்றச்சாட்டும் பெற்றோர்!!

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு இதன்போது உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கடந்த 17 ஆம் திகதி வலிப்பு நோய் காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், தனது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடையில் வாங்கிய திராட்சையில் இறந்த பல்லி : வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.

திராட்சையை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய 132 பேர் கைது!!

இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் அது 4,658 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் மோசடியாளகள் தொடர்பில் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

டிக்டொக் காதலியை காண சென்ற திருகோணமலை இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவர், நுவரெலியா பசுமலையில் வசிக்கும் தனது டிக்டொக் காதலியான பாடசாலை மாணவி ஒருவரை காண சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி, தந்தையை இழந்தவர் எனவும் அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தனது சிறிய தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் வீட்டிற்கு திடீரென வந்த இளைஞனின் நடத்தையால் அயல் வீடுகளில் வாழும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட, விடயம் தொடர்பில் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், இளைஞனை விசாரித்த போது, அவரின் பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞனிடம் தேசிய அடையாள அட்டையும் இருக்கவில்லை. எனவே, பொலிஸார் இளைஞனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.