பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!!

பதுளைக்கு (Badulla) களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததோடு, பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எனினும், இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் கழுத்து அறுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு!!

கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொழும்பிலுள்ள விகாரையின் மலசலகூடத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம் படித்துள்ளார். 25 வயதுடைய இந்த மாணவன் அனுராதபுரம், றம்பேவே கெந்தேவ, கோணகும்புக்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இலத்திரனியல் தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சிகளை பெற்றுக்கொள்ள குறித்த மாணவன் கொழும்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயிற்சி முடியும் வரை, ஜம்பட்டா வீதியில் உள்ள ஒரு விகாரையின் தங்கும் அறையில் தங்கியிருந்துள்ளார்.

அங்கு வந்த மாணவர் பொதுக் கழிப்பறைக்குச் சென்றுள்ளார், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், விகாரையின் நிர்வாகிகள் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கழிவறை கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து கதவை உடைத்தனர். விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்திய கத்தியும் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கழிவறை கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மாணவன் உயிரை மாய்ப்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மாப்பிள்ளை 10ம் வகுப்பில் சித்தியடையவில்லை : கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

மாப்பிள்ளை 10வது பெயில் எனத் தெரிந்ததும் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞரை நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்ய இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மணப்பெண் அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

மணமகள் பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் மணமகன் 10 ம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளார். எனவே, 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்யமாட்டேன் என்று மணப்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மணமேடை ஏறிய நிலையிலும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்காமல் உறுதியாக நின்றுள்ளார். இதைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டதால் மணமகன் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி அளித்தனர்.

குழந்தை பிரசவித்த 25 நாளில் சோகம் : போலி மருத்துவரால் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற கவுஞ்சி கிராமத்தில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி . இவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், விசாரித்து பார்த்தால் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சிக்கு கவுஞ்சியில் வசித்து வருபவர் 26 வயது விவசாயி சர்வேந்தன். இவருடைய மனைவி 24 வயது பிரியதர்ஷினி.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான பிரியதர்ஷினி, பிரசவத்துக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 25 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

பிரியதர்ஷினி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷி கவுஞ்சியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பிரியதர்ஷினி மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், செலுத்திய மருந்து பாட்டிலை எடுத்து கொண்டு மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முறையாக சிகிச்சை அளிக்காததால், பிரியதர்ஷினி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் பிரின்ஸ்.

மருந்தாளுனர் படிப்பு முடித்த அப்பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் வீடு, வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்தாராம். அங்கு சிகிச்சைக்கு வந்த பிரியதர்ஷினிக்கு ஆண்டிபயாடிக் செலுத்தியபோது மயங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . போலீசார் தனிப்படை அமைத்து, தலைமறைவாக உள்ள போலி மருத்துவர் பிரின்சை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குழந்தை பிறந்த 25 நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் கொடைக்கானல் மன்னவனுர் கவுஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

6000 கோடி மதிப்பிலான பிட்கொயினை குப்பையில் வீசிய பிரித்தானியர் : சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு!!

வாழ்க்கையை மொத்தமாக மாற்றப் போதுமான பிட்காயின் தொகுப்பை குப்பையில் வீசியிருக்கலாம் என்று நம்பும் பிரித்தானியர் ஒருவர் தற்போது அதை மீட்டெடுக்கும் வகையில் போராடி வருகிறார்.

வேல்ஸில் நியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ். இவர் தொலைத்ததாக கூறப்படும் 8,000 பிட்காயின்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் இவரை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டு தற்போது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கவனக்குறைவால் குப்பையில் வீசியதாக கூறப்படும் பிட்காயின்களின் மதிப்பு 569 மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றே அவர் நம்புகிறார். 39 வயதான ஜேம்ஸின் முன்னாள் காதலி கவனக்குறைவால் சில கணினி பாகங்களை குப்பையில் வீசியுள்ளார்.

அதில் ஒரு கணினி பாகத்தில் தான் பிட்காயின்களை அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். குப்பையில் வீசப்பட்ட அந்த பாகங்கள் தற்போது நியூபோர்ட் குப்பைக் கிடங்கில் காணப்பட வாய்ப்புள்ளதாகவே ஜேம்ஸ் நம்புகிறார்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில், குப்பைகள் அதே கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதால், தாம் தொலைத்ததாக கூறும் அந்த கணினி பாகத்தை தம்மால் மீட்டெடுக்க முடியும் என்றே ஜேம்ஸ் கூறுகிறார்.

மட்டுமின்றி, தற்போது நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ள ஜேம்ஸ், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய பிட்காயின் மதிப்பில் சுமார் 569 மில்லியன் பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் ரூ 6,038 கோடி) இருக்கும் என்றும்,

அதில் 10 சதவிகிதத்தை உள்ளூர் பகுதிக்கு நன்கொடை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நகர சபை நிர்வாகம் தொடர்ந்து தமக்கு அனுமதி மறுத்து வருவதாக கூறியுள்ள ஜேம்ஸ், நியூபோர்ட் நகரை இன்னொரு துபாய் அல்லது லாஸ் வேகாஸாக மாற்றும் வாய்ப்பை அவர்கள் இழந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை நாடும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என தெரிவித்தாலும், நகர சபை நிர்வாகத்தின் இந்த போக்கு தம்மை சட்ட நடவடிக்கை எடுக்க தூண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொலைக்கப்பட்ட பிட்காயின்கள் இன்று அல்லது இன்னொரு நாள் தம்மிடம் சிக்கும் என்றும், அப்போது அதன் மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றார். டிசம்பர் 3ம் திகதி இந்த வழக்கு தொடர்பில் கார்டிஃப் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை : பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள், மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால், ‘உளவியல் சமூக சூழலை’ இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெறும் மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.

திடீரென தீ பற்றி எரிந்த சொகுசுக் கார்!!

கொழும்பு – பத்தரமுல்லையிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து பத்தரமுல்லை நகரத்தில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. எனினும் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை தெரியுமா? உதவி கோரும் பொலிஸார்!!

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போன சிறுமியின் தாய் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் (20) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் , டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலை CCTV கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறை ஆக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு!!

இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார். மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் 170இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த கால அரசாங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டதுடன், பெருந்தொகை மக்களின் வரிப்பணம் செலவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்!!

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் ( G.C.E. Advanced Level) போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சை திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளன. வங்களா விரிகுடாவில் எதிர்வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020, 0113 668 100 அல்லது 0113 668 013, 0113 668 010 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி!!

பொது தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின்(NPP) சார்பில் போட்டியிட்டு தெரிவான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் இதற்கு முன்னர் செயல்பாட்டு அரசியலில் பங்கேற்றது கிடையாது எனவும் பிரதேச சபை ஒன்றை கூட தாம் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக தாம் நாடாளுமன்றம் செல்வதாகவும் இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எப்பொழுதும் எதிர்பார்த்ததே கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொது தேர்தலுக்காக தான் தனிப்பட்ட ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் மக்களுக்கு சேவைகளை செய்ய தவறினால் கடந்த அரசாங்கங்களை விட வேகமாக மக்கள் தம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் சிறப்புரிமைகளில் சில வேலைகளில் அதிகார பூர்வ இல்லம் ஒன்று தமக்கு தேவைப்படும் எனவும் அதற்காக விசேடமாக கோரிக்கைகள் எதையும் தாம் விடுக்கவில்லை எனவும் சட்டத்தரணி துஷாரி தெரிவித்துள்ளார்.

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரலாம் எண்ணப்படுகின்றது.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர உறுதி!!

10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு – செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி 10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.

முடிகளை நிறமூட்டுபவர்களுக்கு எச்சரிக்கைத் தகவல்!!

கொழும்பு, புறக்கோட்டையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கைதான சந்தேக நபர்கள் மூவரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த போலி கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான போலி கிரீம் வகைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தொடர்பில் முறையிட 1971 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.