யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண் வைத்தியரின் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21.11.2024) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி , பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான பெண் வைத்தியர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கைதான வைத்தியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது இன்றையதினம் சமூக செயற்பாட்டாளர் எல்.எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சோறு வடித்த போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் சிறுமி பலியான சோகம்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ரவிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மகள் 16 வயது நந்தினி. இவர் நவம்பர் 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது திடீரென கைதவறி கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடல் முழுவதும் கொட்டிவிட்டது.

இதில் படுகாயமடைந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைக்குள் புகுந்து இளம் ஆசிரியை குத்திக்கொலை!!

தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் அரசு பாடசாலை ஆசிரியை, கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பாடசாலையில் ஆசிரியையாக ரமணி (26) என்ற இளம்பெண் 4 மாதங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார்.

பாடசாலை தொடங்கிய வேளையில் ஆசிரியை ரமணி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மதன் (28) என்ற நபர் ரமணியை வெளியே அழைத்து பேசியுள்ளார்.

அப்போது திடீரென அவர் ஆசிரியையை கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், படுகாயமடைந்த ஆசிரியை ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என தெரிய வந்துள்ளது.

மேலும், ரமணியின் குடும்பத்தார் அவரை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசன வாய்க்காலில் தவறி விழுந்து வளர்ப்பு மகன் பலி.. கதறும் பெற்றோர்!!

கரூர் மாவட்டம் மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள நீர்ப்பாலம் அருகே வசித்து வருபவர்கள் கணபதி (28), சித்ரா (26). இவர்களது மகள் நாய் கடித்து இறந்த பிறகு, கிஷாந்த் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இன்று (நவம்பர் 20) ஒன்றரை வயதுக் குழந்தையான கிஷாந்திற்கு காலை உணவை ஊட்டிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்தார் தாய் சித்ரா. அரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குள் தன் மகன் கிஷாந்தைத் தேடினார்.

பக்கத்து வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாததால், பீதியடைந்த கிராம மக்கள், சிறுவன் பாசன வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என, மாயனூர் அணை நிர்வாக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி சிறுவன் கிஷாந்தின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து, மாயனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த மருத்துவர் அருச்சுனா!!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றம் இன்றும் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. முதல் நாள் அமர்வான இன்று உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியும் என்ற கோட்பாட்டின் உள்நுழைந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அருச்சுனா அங்கு எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தால் குழப்ப நிலை ஏற்பட்டது.

எனினும் அங்கிருந்த அதிகாரிகள் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் வேறு ஆசனங்களில் அமரும்படி கோரினர். எனினும் இன்றைய நாள் விதிமுறைகளை கூறிய அர்சுர்னா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டார்.

எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆசனங்கள் அமர முடியாது என்பது மரபு.

அதேவேளை புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

பல்வேறு பயிற்சி வகுப்புகளின் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் தகாத புகைப்படங்களை இணைத்து மாணவர்களை அச்சுறுத்துவதாக தெரியவந்துள்ளது.

வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இவ்வாறான ஆபத்தான நபர்கள் பதிவிறக்கம் செய்து, அந்த புகைப்படங்களை எடிட் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை உரிமையாளருக்கு அனுப்பி, அந்த புகைப்படம் தவறான இணையதளங்களில் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அவர்களை பயமுறுத்துவதுடன், அதை அகற்ற விரும்பினால், இதுபோன்ற புகைப்படங்களை அகற்றும் சேவை மூலம் செய்யலாம் எனவும் அவர்களுக்குத் தெரிவித்து, தாங்கள் கூறுவதை போன்று செயல்பட அறிவுறுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த புகைப்படத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உண்மையான தகாத புகைப்படத்தைப் பதிவேற்றுமாறும் மோசடியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தத் தொடர் வழிமுறைகளைப் பின்பற்றும் மாணவர்கள் தங்களின் உண்மையான அந்தரங்க புகைப்படத்தை இணைப்புகள் மூலம் அனுப்பத் தூண்டப்படுகிறார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இவ்வாறான சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, அத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் பேருந்து மீது மோதிய உந்துருளி… தந்தை உயிரிழப்பு : மகன் படுகாயம்!!

அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் பாடசாலைப் பேருந்து மீது உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும் 56 வயதுடைய விலங்கு அபிவிருத்தி ஆலோசகர் சம்பத் வடுகே என்பவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் புகைப்படங்கள்!!

முல்லைத்தீவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்தில் 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் திரைகள் காரணமாக சிறுவர்களுக்கு உருவாகியுள்ள பாதிப்பு!!

டிஜிட்டல் திரைகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் 30 சதவீத சிறுவர்கள் கிட்டப்பார்வை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2050ல் 50 சதவீதமாக உயரும் என உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் கண் மருத்துவர் அனுசா தென்னேகும்புர கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்

எனவே குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை கண்காணிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியலாளரான ஸ்வர்ணா விஜேதுங்க, அதிகப்படியான திரைப் பயன்பாடு கண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கருதி, 18 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கான திரை நேரம் பெற்றோரின் கண்காணிப்புடன், தினசரி அதிகபட்சம் ஒரு மணிநேரமாக வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்

இதற்கிடையில், திரைகளில் தங்கியிருப்பதை விட, தரமான நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் விளையாட்டுக்களில் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 83 வீதமான மழை வீழ்ச்சி!!

வவுனியா மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட மழைவீழ்ச்சி தொடர்பாக ஊடகவியாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.

இந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும்.

நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் எனவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய பெண் கைது!!

சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்ப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(19.11.2024) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் நாட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவருடன் இருந்த முரன்பாட்டையடுத்து சமூக வலைத்தளத்தில் கானொளிகள் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்ப்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (20.11.2024) மாலை 5.30 மணியளவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் 5ம் மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கம் விலையானது மீண்டும் அதிகரித்து செல்லுகின்றது. அதனபடி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 195,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கை வந்தது!!

கட்டார் ஏர்வேர்ஸ் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) இலங்கைக்கு வந்துள்ளது.

அதன்படி குறித்த கட்டார் ஏர்வேஸால் நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க வந்துள்ளது.