உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக தமிழரான ஏ.விமலேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிர்வாக சேவையில் அதி உயர் பதவிகளை வகித்த ஏ.விமலேந்திரராஜா யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் படித்தவர் ஆவார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் குறிப்பாக ஊழலுக்கு எதிரான குரலாக விளங்கிய வசந்தவின் தலைமையிலான அமைச்சிற்கு தமிழரான ஏ.விமலேந்திரராஜா உள்வாங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் ஆர்.எஸ்.ரஞ்சன் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (19.11.2024) சம்பவித்துள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த இவர் பல்வேறு ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ரஞ்சன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வானும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் வானில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனேடிய (Canada) அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கனேடிய குடிவரவு குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாக கொண்ட தேசிங்கராசன் ராசையா (Thesingarasan Rasiah) என்ற நபரே இவ்வாறு புதிய கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்த போது அவரிடம் புதிய கடவுச்சீட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டவிரோத ஆட்கடத்தல் வலையமைப்பிற்கு குறித்த நபர் தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த தேசிங்கராசன் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கையர்களை கனடாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை தேசிங்கராசன் ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது கால்களுக்கு இலத்திரன்கள் பிரேஸ்லெட் ஒன்று போடப்பட்டு கடுமையான நிபந்தனை அடிப்படையில் வீட்டில் வசிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தேசிங்கராசன் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே தேசிங்குராசன் விடுதலை செய்யப்பட்டார்.
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இலங்கையர் ஒருவரை அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் தேசிங்குராசனுக்கு 15 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் அவர் தொடர்ந்தும் அதே குற்ற செயலில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே மாதம் மீண்டும் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் கடவுச்சீட்டு முறைமை பலவீனமாக காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் கெலி சன்ட்பர்க் தெரிவிக்கின்றார்.
எனினும் இந்த இலங்கைத் தமிழர் எவ்வாறு இரண்டாவது தடவையாக கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தேசிங்குராசனுக்கு எவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பது குறித்து குடிவரவு அமைச்சர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்றுள்ளமை இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிந்துஜாவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (19-11-2024) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர்.
இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்தி 2 வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் மேலும், வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 3 திகதி தவணையிடப்பட்டுள்ளதுடன் சில மாதங்களுக்கு முன் சிந்துஜாவின் விடயத்தில் தங்களை முன்னிறுத்தி விளம்பரம் தேடிய எவரும் வழக்கு விசாரணைக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபாவுடன் ஓட்டமெடுத்த வாகன சாரதி நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் 35 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கடந்த 18 ஆம் திகதி அன்று ஏழரை கோடி ரூபா பெறுமதியான பணத்தை நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றில் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது வாகனத்தின் சாரதியாகக் கடமையாற்றிய நபரொருவர், ஊழியர்கள் வாகனத்திலிருந்து வெளியே இறங்கிய வேளையில் பணத்தை எடுத்துக் கொண்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றிருந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வாகனம் கம்பஹா, உக்கல்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான சாரதி கம்பஹா, கடுவன்கஹ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாக கூறப்படும் 31,515,291 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (19-11-2024) மாலை உயிரிழந்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராக அழகசுந்தரம் கிருபாகரன் போட்டியிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
அவர் ஒரு தொழிலதிபராக இருந்துவந்த நிலையில் பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், வேறு பல உதவிகளையும் வழங்கி அவர்களது குடும்ப வறுமையை போக்கி பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாகவே தமிழ் சினிமா தம்பதிகளிடயே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர்.
ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தபோதிலும், பிரிவது என முடிவு செய்துள்ளனர்.
மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என சாய்ராவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19) தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள் காலை (18) , வைத்தியசாலையின், பிரசவ விடுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த கர்ப்பிணிபெண் அதீத வலியினால் துடித்து தனக்கு இயலாமல் உள்ளது.
சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கச் செய்யுமாறு தாதியர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்ளாது போனதனால், குழந்தையையைப் பிரசவிக்க முடியாது கர்ப்பிணி பெண் உறவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்து அவருடைய தாயார் தெரிவிக்கையில்,
நான் இந்தியாவில் வசித்து வருகின்றேன். எனது மகள் திருமணம் முடித்து இங்கே வசிக்கிறார், நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாது இருந்த அவருக்கு இது முதற்குழந்தை என்பதனால் அவரைப் பராமரிப்பதற்காக,நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், எனது மகளை திங்கள் காலை பிரசவத்திற்காக, வைத்திய சாலையில் அனுமதித்திருந்தோம்.
அவர் வலியினால் துடித்திருக்கின்றார்,தன்னால் முடியவில்லையெனத் தாதியர்களிடம் கெஞ்சியுள்ளார்,நான் அவரைப் பார்க்க சென்ற போது, என்னை. வெளியே இருக்குமாறு கூறினார்கள்.
மாலை நான்கு மணியளவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள். பரபரப்பாக இருந்தனர். எனது மக்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறினர்.
நான் மகளை அனுமதி கேட்ட போது என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள், அங்கு எனது மகளைச் சுற்றி வைத்தியர்கள் மற்றும், தாதியர்கள் நின்றார்கள். அவர்கள் என் மகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார்கள்.
ஆனால் நான் பிரசவ அறைக்குள் சென்றபோதே என் மகள் எந்த அசைவுகளுமின்றியே இருந்தார். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தாயார் கண்னோருடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட்டுபட்டனர்.
ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் இவ்வாறான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், வைத்தியசாலையின் கவனமின்மையே கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர், அசாத் ஹனீபா கூறுகையில், இங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன, மரணம் நிகழ்கின்ற போது எமது விசேட மகப்பேற்று நிபுணர், வைதியர்கள், மற்றும் தாதியர்கள், கடமையிலிருந்துள்ளனர். எனவே முறையான விசாரணைகளை,மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதி வழங்குவோம் என்று தெரிவித்தார்.
அதேசமயம் இரவு 12 மணிவரை மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியேயும் பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நிலமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஈச்சங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதி ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து, சாரதி பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார்.
பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்துடன் தப்பிச்சென்ற சாரதியை கைது செய்வதற்காக புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பான தகவல்களை 071 85 91 608 அல்லது 071 85 91 610 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.
இந்த கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயா வந்துள்ளார். அவருடன், உறவினரான சிசுபாலன் என்பவரும் இருந்துள்ளார்.
அப்போது, இரண்டு போரையும் தெய்வானை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால், அவரது ஓட்டுநர் குளியல் அறையின் கதவை தட்டியுள்ளார்.
பதில் ஏதும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மகாதீர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மகாதீர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மகாதீரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப சண்டையில் 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் தாஸ்கா நகரில் ஜெஹ்ரா என்ற 26 வயது இளம்பெண் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
ஜெஹ்ரா தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் ஜெஹ்ராவுக்கும், அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மாமியார், மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த மாமியார், 7 மாத கர்ப்பிணி மருமகளை, 25 துண்டுகளாக கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.
சந்தேக நபர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த நிலையில் இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் நேற்று (18.11.2024) திங்கட்கிழமை பிடிபட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாகக் கடத்திச் செல்லப்பட்ட தங்கம், இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயமே சிக்கியுள்ளது.
தங்கத்தை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்த இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள், மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி இலங்கை நாணயத்தில் 10 கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றது.