வியட்நாமில் கப்பல் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அதில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவியுள்ளது. ஆப்ரோடைட் என் உல்லாச கப்பல் வியட்நாமில் உள்ள ஹா லோங் பேயில் நின்று கொண்டிருந்தது. கப்பலில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நியூசிலாந்து, கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் கப்பல் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் வேறு வழியில்லாமல் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். அவர்கள் கடலில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் பரவியுள்ளது. கப்பலில் உள்ள சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டு அது பிற பகுதிகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்ததாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களை காப்பாற்ற கப்பல் ஊழியர்கள் முயற்சி எதுவும் செய்யவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(09.05.2016) அட்சயதிருதியை முன்னிட்டு வவுனியாவில் நகைமாளிகைகள் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், பெருமளவான பொதுமக்கள் நகைக்கடைகளில் நகைகளினை கொள்வனவு செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பின்னர் வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.
அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.
பீகார் சட்டமேலவை உறுப்பினரின் மகன் ராக்கி தொழிலதிபர் மகன் ஆதித்ய சச்தேவை நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் ஜனதா தளம் ஐக்கிய தலைவர் மனோரமா தேவியின் மகனான ராக்கி யாதவ், 2 நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றபோது, தனது காரை மற்றொரு கார் முந்தி செல்வதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
இதையடுத்து கோபத்தில், தனது பாதுகாவலரிடம் அந்த காரை துப்பாக்கியால் சுட்டு நிறுத்தும் படி கூறியுள்ளார். அதன்படி பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு குறித்த காரை நிறுத்தியுள்ளார்.இச்சம்பவத்தில் குறித்த காரை ஒட்டிய ஒரு முக்கிய தொழிலதிபரின் மகனான 19 வயதுடைய சச்தேவா, நடு ரோட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்கியுடன் சென்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டநிலையில் ராக்கியையும் நேற்று பொலிசார் கைது செய்தனர்.ராக்கி தந்தை பிண்டியாதவ் கூறுகையில், ராக்கியை, ச்சதேவா மற்றும்அவரது நண்பன் தாக்கியதாகவும், அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ராக்கியிடம் இருந்த தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்து அவர் சுட்டதாக கூறியுள்ளார்.
பகிடிவதை புரிவோருக்கு எதிராக பத்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. பகிடி வதையானது இலங்கையின் சட்டத்தின் கீழ் குற்றமான செயல் என இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் அண்மையில் பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற பகிடி வதை சம்பவத்தில்பாதிக்கப்பட்டடோருக்கு பொலிஸார் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கத் தவறும்பட்சத்தில் அந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும் என இந்தஆணைக்குழுவின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பகிடிவதை புரிவோருக்கு எதிராக சட்டத்தின் மூலம் பத்து வருடங்கள்சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு உள்ளதாக மனித உரிமைகள்ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ப்ரதிகா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இதேவேளை அண்மையில் களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதை சம்பவமேபகிடி வதைக்கு எதிராக தற்போது அனைவரும் குரல் கொடுப்பதற்கு காரணமாகும். அத்துடன் குறித்த பகிடிவதை புரிந்த 7 பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாதம்பே – செப்புகட்டிய பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடிய சிவில் பாதுகாப்பு காவலர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மாதம் 18ம் திகதி குறித்த தோட்டத்திலிருந்து 1407 தேங்காய்கள் திருடப்பட்டுள்ளதாக குறித்த தோட்டத்தின் உரிமையாளர் மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த மாதம்பே பொலிஸார், குறித்த தோட்டத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த மூன்று காவலர்களை கைது செய்துள்ளனர்.இதற்கு முதலும் குறித்த தென்னந்தோட்டத்திலிருந்து அதிகமான தேங்காய்கள் களவாடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மாபியா கும்பலாக செயற்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் தொழில் பெற்று சென்று நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக விண்ணபிக்கும் இலங்கையர்களை குறித்த மாபியா கும்பல்கள் அழைத்துச் சென்று இடைநடுவில் விட்டுவிடுவதாகவும், இவர்களின் பாதுகாப்புக்கு மாபியா கும்பல்கள் உத்தரவாதம் வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகவர் மாபியாக்களை நம்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் பல சொல்லெண்ணா துயரங்களை அனுபவிப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரப்பட்டுள்ளது,வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் பணியாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவுரைகளை செவி மடுப்பது இல்லை என்றும் பிரதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகேயை, சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், மரணதண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குப் புத்தகம் மாயமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 1994ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர் தப்பியோடியிருந்த நிலையில் 22 வருடங்களிற்கு பின்பு அண்மையில் புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம்(09) ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அப்போது வழக்குப் புத்தகம் இல்லாமையினால், மரணத்தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பு அறிவிப்பதனை ஒத்திவைத்துள்ளது.இதனடிப்படையில், சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம், அவற்றைவைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.யாழ் குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன்ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்தஉத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்திற்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும், ஆபத்தான கத்திகளைவைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.இவற்றை உடைமையில் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில்உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.பொலிசார்; நடத்தும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, இந்த ஆயுதங்களை உடமையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக குடாநாட்டில்உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டத்திற்கு முரணான முறையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பன குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதனால், யாழ் குடாநாட்டில் உள்ள கம்மாலைகளில்இவற்றை உற்பத்தி செய்வதை இந்த நீதிமன்றம் தடை செய்கின்றது.நீதிமன்ற உத்தரவை மீறி இவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அல்லது யாருக்கும் வழங்கினால் அத்தகைய கம்மாலைகளின் உரிமம் உடனடியாக ரத்துச்செய்யப்படும்.
அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். யாழ் குடாநாட்டில் பல கம்மாலைகள் சட்ட முரணான வாள்கள் ஆபத்தான கத்திகள் என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற வாள்கள், ஆபத்தான கத்திகள்கைப்பற்றப்படும்போது, அவற்றை உற்பத்தி செய்யச் சொன்னது யார்? யார் அவற்றைஉற்பத்தி செய்தது? எந்தக் கம்மாலைகளில் அவைகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதுபோன்ற தகவல்களை பொலிசாரின் விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் வாள்கள் கத்திகளை உற்பத்தி செய்த கம்மாலைகளின் உரிமையளார்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்தக் கம்மாலைகளின் உரிமமும் ரத்துச் செய்யப்படும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று (09.05) ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 9 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்படி, இவ் வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேகநபர் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தெளிவான அறிக்கையினை இவ் வழக்கின் அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு, இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10.05) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.
மேலும், சில பகுதிகளில் மழை பெய்யும் போது கடும் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் இடி, மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ரோஸ் ஜோன்ஸ்(30) என்ற பெண்மணி சுமார் 6 மாதங்கள் தனது தாய்ப்பாலில் C drug Tramadol என்ற வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் குழந்தையுடன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் பரவியுள்ளது, இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், தனது குழந்தையை ஒரேடியாக கொன்று விடாமல் படிப்படியாக கொல்ல திட்டமிட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்பெண்மணி மீது இதற்கு முன்னர் தனது வீட்டில் தனக்குதானே தீவைத்துக்கொண்டார் என்ற குற்றசாட்டும், வேறொரு நபரின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணத்தினை கையாடல் செய்துள்ளார் என்ற குற்றசாட்டும் உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு பிரித்தானியாவின் PlymouthCombined Court – இல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்றும் அப்பெண்ணை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கான தண்டனைமே 19 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவராக உள்ள டோனி, அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்.
ஒரு காலத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக அஸ்வின் விளங்கினார். ஆனால் உலகக்கிண்ண தொடரில் இருந்தே டோனி அவரை புறக்கணித்து வருகிறார். தற்போது ஐபிஎல்தொடரிலும் இந்த நிலை தொடர்கிறது.
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் டோனி அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார். அதுவும் 17வது ஓவரில் தான் அவர் பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஆர்.பி.சிங், ஜம்பா, ரஜத் பாட்யா போன்றவர்கள் முழுமையாக 4 ஓவர்கள் வீசினர். ஆனால் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக போட்டியிலும் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார்.
அப்போது புதுமுக வீரர் முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதால் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்ததாக டோனி விளக்கம் அளித்தார்.
இவரது மோதல் போக்கு தான் புனே அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.நேற்று பெங்களூர் அணியுடன் தோற்ற புனே அணி அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது.
அதிமுக கட்சியை ஆதரித்து தமிழ்நாடும் முழுவதும் நடிகர் செந்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நேற்று வட்ஸ் அப்பில் செய்தி பரவியதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இந்த இறப்பு செய்தி குறித்து பேட்டியளித்த நடிகர் செந்தில், ஆண்டவன் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன்.
எனது பிரசாரத்தை தடுப்பதற்காக எதிரிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை பரப்புகின்றனர்.
யார் வதந்தியை கிளப்பினால் என்ன ஆண்டவன் என்ற ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார், பெண்கள் வாந்தி எடுத்தால் நல்லது என்று சொல்வார்கள், அதுபோல ஆண்களுக்கு வதந்தி வந்தால் நல்லது.
அதனால் என்னை பற்றி சில வதந்திகள் வந்துள்ளன, இதனை யாரும் நம்பவண்டாம், இப்படி வதந்திகளை கிளப்ப கிளப்ப, நான் நூறு வயது வரை வாழ்வேன் என கூறியுள்ளார்.
காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் அதிஜன் பகுதியில் சிறுபான்மை சமூக பாதுகாப்பிற்கான பணியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் ஒன்றில் இருந்து எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக துப்பாக்கிகள் இரண்டு என 4 துப்பாக்கிகளை பறித்து கொண்டு தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 02.00 மணியளவில் நடந்துள்ளது. தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் பரந்தன் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.