மராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடி வந்தனர்.
இந்த பாலின பாகுபாடு தொடர்பாக பூமாதா படை அமைப்பினர் மராட்டிய ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சனி பகவான் கோவில் கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கி கடந்த 1-ந் திகதி தீர்ப்பளித்தது.இதனால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் சனி பகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் இந்த கோவில் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என கோவில் நிர்வாகமும் சமீபத்தில் அறிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக துவாரகா-சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஹரித்வாரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் இதுகுறித்து கூறியதாவது:-
மராட்டிய மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக்களிப்பில் மிதக்க வேண்டாம். இந்த செயலை செய்ததற்காக தம்பட்டம் அடித்துக்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும்.சனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல. சனி பகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்ததால் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்.
சனி சிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைந்திருக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆண்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த பொருட்களால் தான் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறினார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்களில் ஒருவரான பிருந்தா கரத் கூறுகையில், ‘இத்தனை ஆண்டுகளாக சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியானால் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களை பெண்கள் இதுவரையிலும் அனுபவிக்கவில்லையா? இதற்கு ஸ்வரூபானந்த் சரஸ்வதி பதிலளிப்பாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் – இருபாலையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (11.04.2016) திங்கட்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது.
நேற்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
வவுனியா சூசைப்பிள்ளையார் குளவீதியில் நேற்று (11.04.2016) அதிகாலை மூன்று கடைகள் உடைக்கப்பட்டு துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா சூசைப்பிள்ளையார் குளவீதியில் நேற்று அதிகாலை மூன்று கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு 50,000 ரூபா பணம் மற்றும் சிகரட் பெட்டிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது.
பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
மேலும் வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை நடத்திச் சென்ற முகாமையாளரையும் நான்கு பெண்களையும், நேற்று கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 31, 18, 23, 31 மற்றும் 36 வயதானவர்கள் எனவும் இவர்கள் கொடகம்பல, இரத்மலானை, பண்டாரவளை மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடினமான, மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி நாட்டில் 4471 பாடசாலைகளுக்கு மேலதிக சீருடைகள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் வழங்குனர்களால் வழங்கப்பட்ட தரமற்ற புடவைகளுக்கு பதிலாக பெற்றுக் கொள்ளப்பட்ட புடவைகள் இந்த வேலைத் திட்டத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.சுமார் 12 இலட்சம் சீருடைகள் கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படசாலைகளின் இரண்டாவது தவணைக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு மேலதிக சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
மருந்துப் பொருட்களுக்கான விலைப் பொறிமுறைமை அமுல்படுத்தப்படாத காரணத்தினால் மருந்து வகைளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
மருந்துப் பொருட்ளுக்கான விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படும் என சுகாதார அமைச்சு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் விலைப்பொறிமுறைமை ஒன்று இதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லை.2012ம் ஆண்டில் மருந்துப் பொருட்களுக்கான சந்தை விலைகளை நிர்ணயிக்கும் விலைப் பொறிமுறைமையை அறிமுகம் செய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் இதுவரையில் தேசிய ஒளடதங்கள் அதிகார சபையோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையோ விலை பொறிமுறைமை அறிமுகம் செய்யவில்லை.இலங்கையில் விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாத காரணத்தினால் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. சில மருந்து வகைகள் 200 வீத உயர்வினை பதிவு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை 2012ம் ஆண்டில் இலங்கையின் சுகாதார அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில்இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வீட்டின் உரிமையாளரான ஏ.நுவான் சந்துரங்க (வயது 34) எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.அதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று (11) இரவு வேளையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தது தப்பிச் சென்ற இராணுவ வாகனத்தையும் சாரதியையும் பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 59வயது நடராசா வாசுகி, 33 வயது நடராசா சிவதாரணி ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன், சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி அருள்ராஜ் மற்றுமொரு பயணி ராஜேஸ்வரி ஆகியோர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொரிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் விபத்துக்கள் குறித்த அபாய எச்சரிக்கை பதாகைகள் வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துள்ளாகியிருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்யுள்ளனர்.
குறித்த விபத்தானது, பண்டாரவளை எல்லதோட்டை என்ற இடத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி பண்டாரவளை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா முகத்தான்குளம் செட்டிகுளம் சித்தி விக்னேஸ்வரர் முகத்தான்குளம்திருக்கோவில் வருடாந்த மஹோற்சவப்பெருவிழாவின் 6ம் நாளான நேற்று 11.04.2016 திங்கட்கிழமை மாம்பழத்திருவிழா இடம்பெற்றது.
நேற்றைய மாம்பழ திருவிழாவின் போது சித்தி விக்னேஸ்வர பெருமான் காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு சாத்துப்படி செய்யப்பட்டு எழுந்தருளி வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 5,000 கி.மீ தூரமுள்ள அட்லாண்டிக்கடல் பரப்பை தனியாக கடந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Nicolas Jarossay(38) என்பவர் தீயணைப்பு வீரராகவும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவாராகவும் விளங்கி வருகிறார்.
இந்நிலையில், அட்லாண்டிக் கடலை தனி ஒருவனாக கடந்த சாதனை படைக்க வேண்டும் என தீர்மானித்த அவர், Cap Verde கடற்கரை ஓரமாக உள்ளPraia என்ற பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளார்.இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அவர் பயணிக்கும் சிறிய ரக படகில் நின்றுக் கொண்டு தான் பயணிக்க முடியும்.
அதாவது, சுமார் 5,000 கி.மீ தொலைவு உள்ள இந்த தூரத்தை இந்தசிறிய படகில் பயணம் செய்து 2 நாட்களுக்குள் பிரான்ஸில் உள்ள Martinique கரீபிய தீவுக்குள் வந்தடைவார்.7 மீற்றர் நீளமுள்ள இந்த படகு சுமார் 50,000 டொலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படகின் முகப்பு பக்கத்தில் உள்ள 2.2 மீற்றர் நீளமுள்ள பகுதியில்அவர் இரவு நேரங்களில் உறங்கலாம்.
இதுமட்டுமில்லாமல், இந்த படகில் சோலர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், வெளி உலகை தொடர்புக் கொள்ள தேவையான உபரணங்களை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.இந்த சாதனையை நிறைவு செய்துவிட்டால், அமெரிக்க நாட்டில் உள்ள 3,780 கி.மீ நீளமுள்ள மிசிசிபி நதியை கடந்த Alex Linnell என்பவரின் உலக சாதனையை இவர் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த நபர் காதலி வீட்டு முன் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.புனேவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.
பின்னர் கார் கதவை திறந்து பார்த்த போது உடல் கருகிய நிலையில் நபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் அந்த கருகிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பொலிஸ் விசாரணையில், காரில் உடல் கருகி பிணமாக மீட்கப்பட்டவர் சதாரா மாவட்டத்தை சேர்ந்த அஜித் இங்கலே (25) என்பது தெரியவந்துள்ளது.
இவரும் சதாரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் தனது மகளுக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அஜித் இங்கலே, நேற்று முன்தினம் தனது ஊரில் இருந்து கார் மூலம் தனது முன்னாள் காதலி வசித்து வரும் பகுதிக்கு சென்றுள்ளார்.தனது முன்னாள் காதலியின் வீட்டின் முன் உள்ள சாலையில் காரை நிறுத்திய அவர், காரில் இருந்தபடியே முன்னாள் காதலியை செல்போனில் தொடர்புகொண்டு தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
பின்னர் தான் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி காருக்குள்ளேயே தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். காசுபணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் வாழ்க்கையை காதலிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள்.
வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். என்றாலும் கேது ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும்.
சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள்.
வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. வீண் பழிகள் வரக்கூடும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8ல் அமர்வதால் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எல்லோருக்கும் எல்லா வகையில் உதவியும் நம்மை ஏன் குறைக் கூறுகிறார்கள் என்று அவ்வப்போது புலம்புவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங்,ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.
வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தையில் மதிப்புக் கூடும். 2.8.2016 முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
விவசாயிகளே! மகசூல் பெருகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வருமானம் உயரும். வீட்டில் விசேஷங்களெல்லாம் நடந்தேறும். இந்த துர்முகி ஆண்டு துவண்டுக் கிடந்த உங்களுக்கு புதிய பாதையை அமைத்துத் தருவதுடன் புகழ்பட வாழ வைக்கும்.
பரிகாரம்: வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு உதவுங்கள்.
அவிசாவளை நகரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மேலும் 5 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கொழும்பு – அவிசாவளை வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, தற்போது நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டமையால் இரண்டு லொரிகள், கார் ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் வேன் ஒன்றுடனும் இவ்வாறு மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.