திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில் மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்ததில் குறித்த ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதேவேளை, மரம் முறிந்தமையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதோடு, பகுதியளவில் இரு வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மின் கம்பிகள் அறுந்து விழுந்ததை அறியாது இரு பெண் தொழிலாளிகள் அதனை தொட்டதன் காரணமாக மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.விபத்துக்குள்ளான குறித்த இரு தொழிலாளிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, செயலிழந்த மின்சாரத்தை செயற்படுத்த அட்டன் மின்சாரசபையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மண்டபத்தில் இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பொலிஸாரை தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த 19 வயது பெண்னை நால்வர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனராம்.
தற்போது இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரி வழக்குப் பதிந்து தப்பி ஓடிய நால்வரையும் தேடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
உனுப்பிட்டிய – வனவாசல பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் புறக்கோட்டை – ரம்புக்கன ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.மேற்படி விபத்தில், ரயில் மிதிபலகையில் தொங்கி கொண்டு வந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரயிலுடன் மோதுண்ட டிப்பர் வாகனத்தில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.விபத்துக்குள்ளான டிப்பர் பாதுகாப்பற்ற கடவையில் சென்றுள்ளமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
உலக சுகாதார தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7(இன்று) ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் இந்த சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.இந்த வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
மேலும், இலங்கை மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால தெரிவித்துள்ளார். சென்ற வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக உணவுப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளியாகிவரும் நிலையில் தற்போது உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இருந்து இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன எவ்வாறு சந்தேக நபர்களிடம் வந்தது என்பது தொடர்பாகவும், ஆவணங்களின் உண்மை தன்மை தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 இந்திய பிரஜைகளில் 6 நபர்களின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டிருந்தாகவும் சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் வருடாந்த புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (07.04.2016) இடம்பெற்றது.
புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின் வவுனியா பணிப்பாளர் உட்பட புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது.
அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த வண்ணம் காணப்படுகிறது.
ஜப்பான் விமான படைக்கு சொந்தமான U- 125 என்ற சிறிய ரக போர் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது.
அந்த சிறிய ரக போர் விமானத்தில் 6 பேர் பயணம் செய்தனர். ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான U-125 என்ற சிறுரக போர் விமானம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட அவ்விமானம் பயணித்துக்கொண்டு இருந்த பகுதி மலைப்பகுதி என்பதால் விமானம் மலையில் விழுந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பேஸ்புக் மூலம் உலகின் மூலைமுடுக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வசதியை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சிப் பாவனையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் எந்த மூலையிலிருந்தாலும், காணொளிகளை கையடக்கத் தொலைபேசியூடாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வசதி இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சுக்கர்பெர்க் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
நாம் ஆரம்பித்துள்ள இந்த நேரடி ஒளிபரப்பு சேவை மூலம் எளியமுறையில் நேரடிக் காட்சிகளை ஒளிபரப்ப முடியும். இதன் மூலம் உங்களது சட்டைப்பையில் தொலைக்காட்சியை வைத்துள்ளீர்கள்.
இதனால் கைத்தொலைபேசியை வைத்துள்ள ஒருவர் நேரடிக் காட்சியை ஒளிபரப்ப முடியுமென குறிப்பிட்டுள்ளார்.
டேரன் சமி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.
T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இந்நிலையில் டேரன் சமி கிரிக்கெட்வாரியத்தைப் பற்றி பேசியது 100 சத வீதம் சரியானது என்று சக வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் குறிப் பிட்டுள்ளதாவது,
”டேரன் சமி கிரிக் கெட் சபையை பற்றி பேசியதற்கு நான் 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறேன். நாங்கள் சிரமப்படுவது உண்மை தான். மேலும், நல்லவேளையாக பரிசுத் தொகை கிடைத்தது. கிரிக்கெட் சபை ஊதியம் தருவதாக கூறுவது எல்லாம் ஒரு நகைச்சுவைதான் என்று கூறியுள்ளார்.
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தேவைகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்தார்.
இச் சந்திப்பில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்ககோவன், வடமாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் சோமசிறி, அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அண்மையில் வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் கையளிக்கப்பட்ட இராணுவக் குடியேற்றத்திட்டம், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை என்பவற்றையும் பார்வையிட்டார்.
வவுனியா செட்டிகுளம் முகதான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வசந்த மண்டப கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் 04.04.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 06.04.2016புதன் கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெற்று மீளக்கட்டமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (06.04.2016) காலை 11.00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (FSHKFDR – Tamil Homeland) தலைமை ஒருங்கிணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார்(ராஜா) தலைமையில் நடைபெற்ற குறித்த மீள்தகவமைவுக்கலந்துரையாடலில்,
வவுனியா மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் நா.நடராசா, உபசெயலாளர் கு.இராசேந்திரகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, குழுவின் இணைப்பாளர் எஸ்.றொஹான் ராஜ்குமார், நகரப்பகுதி இணைப்பாளர் க.கோணேஸ்வரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தின், (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District)…
தலைவர் மற்றும் ஊடகப்பேச்சாளராக திருமதி.கா.ஜெயவனிதா,
உபதலைவராக திரு.வே.புண்ணியம்,
செயலாளராக திருமதி.து.கலாவதி,
உபசெயலாளராக திருமதி.ம.வானதி,
பொருளாளராக திரு.க.பழனிநாதன்,
தலைமை ஒருங்கிணைப்பாளராக திருமதி.பே.பாலேஸ்வரி,
உதவி ஒருங்கிணைப்பாளராக செல்வி.தி.சாருசா,
நெடுங்கெணி பிரதேச இணைப்பாளராக திருமதி.யோ.சகுந்தலா,
செட்டிகுளம் பிரதேச இணைப்பாளராக திருமதி.இ.தவமணி,
கோவில்புளியங்குளம் – ஆச்சிபுரம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.க.சுமதி,
புளியங்குளம் – கனகராயன்குளம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.நா.நாகம்மா,
பாலமோட்டை – ஓமந்தை பகுதிகளின் இணைப்பாளராக திரு.சற்குணம்,
நெளுக்குளம் – கூமாங்குளம் பகுதிகளின் இணைப்பாளராக திருமதி.வே.சிவராணி,
சிதம்பரபுரம் பகுதி இணைப்பாளராக திருமதி.உ.சரஸ்வதி,
மறவன்குளம் பகுதி இணைப்பாளராக திருமதி.கை.பூவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீள்தகவமைவுக்கலந்துரையாடலுக்கான மண்டப வாடகை மற்றும் மதிய போசனத்துக்கான நிதியுதவியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொடிய வைரசான ஜிகாவின் வடிவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
ஏடிஎஸ் வகை நுளம்புகளால் பரவும் ஜிகா வைரசுக்கு, இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வைரசாஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறக்கின்றன.
பிரேசில் உட்பட 13ம் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரசின் வடிவை தற்போது விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் பர்டூயூ பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவே இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து குழுவை சேர்ந்த விஞ்ஞானி பேசுகையில், ஜிகா வைரஸின் வடிவம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை எளிதாக கண்டுபிடித்து, தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளையும் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.