புத்தளம்-கற்பிட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வைத்து அவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து 97,200 ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் யாழ். வேட்பாளர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேற அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார்.
இந்நிலையில், அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் அவர் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலி, ஊறவத்த பிரதேசத்தில் கணவன்-மனைவி கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அம்பலாங்கொட மாதம்பே பிரதேசத்தில் வைத்து விசாரணைகளுக்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த தம்பதி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பதியினரின் கொலையை உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொட, மாதம்பே பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்ற 47 வயதுடைய நபர் மற்றும் 50 வயதுடைய மல்லிகா ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று(14.11.2024) செலுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து,தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்நது இங்கே வாழ்ந்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் யோன் பிலிப் லூயிஸ் கூறினார்.
கொடகவெல, தொம்பகொல, எல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பாதுகாப்பற்ற பாலத்தில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் , மல்வத்தை கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 27 வயதுடைய நதிக நுவன் திலகரத்ன என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கொடகவெலயில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று முன் தினம்(12) இரவு சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (34) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
10வது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நடைபெறுகிறது.
இந்நிலையில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் இன்றையதினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு, வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியின் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்தை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை இறந்த பிறகு, அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், குடியிருப்பாளர்களிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த குழந்தை நேற்று மாதம்பிட்டிய பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நபர் குடியிருப்பில் வந்து தனியாக இருந்தார்.
சத்தம் ஏதும் வராததால் குடியிருப்பாளர்கள் தேடியபோது அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகி, இந்த மொடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய IPhone SE -4 மொடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் IPhone SE – 4 மொடலில் 48MP பிரைமரி கமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் உடல் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 08.11.2024 திகதி அன்று வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த அசிரியை மீட்டு நெடுங்கேணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அசிரியின் உடலில் விசம் ஏறியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரவு நேரங்களில் விச ஊர்வன ஏதாவது கடித்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறையில் 9 வயதுடைய மாணவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரினால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபரான 38 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
மாணவனை பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக ஆசிரியர் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா நகரப் பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிற்கு அருகில் இவ்வாறான வேட்பாளர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள், துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா – மன்னார் வீதியிலும் பெருமளவான துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
பெருமளவிலான பொலிசார் சம்பவ இடங்களுக்கு சென்று அவற்றை துரிதமாக அகற்றி தீவைத்து எரித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறைக்கும்பல் ஒன்று அத்து மீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.
வன்முறைக்கும்பலின் தாக்குதலில் காயங்களுக்குள்ளான நிலையில் வேட்பாளரின் தந்தையார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சை குழு 14 இன் வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்று மாலை அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய அதேவேளை வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
மேலும் அயல் வீட்டின் மீதும் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற இதேவேளை குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞரின் கை மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் இன்று தங்கத்தில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாட்டில் 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,162 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த மகளை சத்தம் போட விடாது தடுக்கும் முகமாக வன்மையான முறையில் தனது தந்தை குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
திடீரென தான் எழுந்த போது மகளையும் தனது கணவரையும் காணவில்லை எனவும், மதுபோதையில் மகளை தகாத முறைக்கு கணவன் ஈடுபடுத்தியதை தான் கண்டதாகவும்,
உடனடியாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைத்ததையடுத்து பொலிஸார் அதிகாலையில் வீட்டில் வைத்து கைது செய்ததாக சிறுமியின் தாயும் எதிரியின் மனைவியுமான குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.
இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் 10 வயது நிரம்பிய சொந்த மகள் மீது தந்தை மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து,
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவதே பொருத்தம் என தெரிவித்து 10 ஆண்டுகள் கடுழிய சிறையும் 2 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் இரு ஆண்டு கடூழிய சிறை மற்றும் 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.