உயிரிழந்த 7 வயது மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக மாவட்டம் கோவையில் வைரஸ் காய்ச்சலால் மகன் உயிரிழந்த துயரத்தில், தம்பதியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் காய்ச்சல்

கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, வக்சலா. இவர்களது 7 வயது மகன் விஷ்ணு. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு வைரஸ் காய்ச்சலுக்கு விஷ்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் பழனிசாமி – வக்சலா தம்பதி மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனையடுத்து மகனை இழந்த துக்கத்தில் இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் பொலிஸார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யுவதி பலி!!

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்து யுவதி ரணை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த, ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த 23 வயதான நுவங்கி இந்துனில் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.

இன்றைய (05) தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 802,163 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) சற்று குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,736.23 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பள்ளத்தில் கவிழ்ந்த லொறி : கர்ப்பிணிப் பெண் காயம்!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இந்த விபத்து (05) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் லொறியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று , மருத்துவப் பணிகள் நிறைவடைந்ததும் கர்ப்பிணிப் பெண் லொறியில் அமர்ந்திருந்துள்ளார். இதன்போது சாரதியின்றி லொறி முன்னோக்கி சென்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் மருத்துவரின் மனைவி படுகொலை : நடந்த விபரீதம்!!

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ்த்தில் மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நடைப் பயணம் மூலம் இலங்கையை சுற்றி வந்த 11வயது பாடசாலை மாணவன்!!

இலங்கையை 39 நாட்களாக நடைப் பயணம் மூலம் சுற்றி வந்து பாடசாலை மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தரம் 06இல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் என்னும் மாணவனே தனது பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளான்.

11 வயதான குறித்த மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த 25-09-2024 ஆம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து தனது நடை பயணத்தை ஆரம்பித்தார்.

இவ்வாறான நிலையில், இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 36 பேரைக் காவுக்கொண்ட நெரிசல் பேருந்து!!

உரிய முறையில் பராமரிக்கப்படாத, நெரிசலான பேருந்து ஒன்று திங்களன்று வட இந்தியாவில் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது பேருந்தில் சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்களின் குழுக்கள் தளத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

குறிப்பாக மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் ஏழு பயணிகள் சிகிச்சைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம், உத்தர பிரதேச மாநிலத்தில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றின் மீது மோதியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், மே மாதம், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் உள்ள மலைப்பாங்கான நெடுஞ்சாலையில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.

தாய் மற்றும் சகோதரிக்கு இளைஞன் செய்த கொடூர செயல்!!

மொனராகல, வெல்லவாய பிரதேசத்தில் மகன் தனது தாயின் கையின் மூன்று விரல்களை மன்னா கத்தியால் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாயின் விரல்களை வெட்டிய மகன் தனது சகோதரியையும் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களால் விரல்கள் துண்டிக்கப்பட்ட தாயையும், காயமடைந்த சகோதரியையும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மகன் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள்!!

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் கடைகளுக்கு முன்னால் ஏராளமான பெண் யாசகர்கள் உறங்கும் நிலையில், அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது பிள்ளைகளைப் பயன்படுத்தியும் துன்புறுத்தியும் யாசகம் எடுத்துவிட்டு அந்தப் பணத்தை அடாத்தாகப் பறித்து மதுபானத்தைக் கொள்வனவு செய்து பருகுகின்றனர் என்றும் பொலிஸாரிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த யாசகர்களைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் மாநகர சபை முறையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

புகையிரத விபத்தில் பலியான இளம் யுவதி : உறவினர் வெளியிட்ட தகவல்!!

காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அடிவயிறு மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட மரண விசாரணையில் யுவதியின் மரணம் குறித்து அவரது அத்தை மஹதுர தில ஜயசேகர (62) பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யுவதியின் தாய் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தார். தகப்பனில்லாத இரண்டு குழந்தைகளையும் என் சொந்தப் பிள்ளைகள் போல தத்தெடுத்தேன்.

ஆடையகமொன்றில் பணி புரிந்து வந்த நிலையில், தினமும் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து செல்வார். மினுவாங்கொடை சந்தி வரை தொடருந்து பாதையில் நடந்து செல்வார்.

கடந்த (01) திகதி காலை எட்டு மணியளவில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். இதன்போது பாதையை கடக்க முயற்சித்த போது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்ததாக தொடருந்து சாரதி தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் காயங்கள் இருந்தன. அவள் மிகவும் வேதனைப்பட்டு என்னிடம் பேசினாள். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இயந்திரங்கள் சத்தமாக ஒலித்தன. இன்று காலை குழந்தைக்கு போதி பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது, ​​அவள் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கோடிக்கணக்கான பணமோசடி : வெளிநாட்டுப் பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை!!

இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது.

மேலும், இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய இலங்கையிலுள்ள பல வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பிரஜைகள், ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மோசடிகளில் ஈடுபட்ட பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் மாமியார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மருமகன் தலைமறைவு!!

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இளம்பெண் பரிதாபமாக மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.

தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தவரை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார்.

இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் , தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேவேளை வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லபட்ட நிலையில் அதனை குறித்த சிறுமியே பெற்றுள்ளார்.

இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக கஜிஷனா- தர்ஷன் பங்குபற்றவுள்ளார்.

அத்துடன் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக கஜிஷனா- தர்ஷன் விளையாடவுள்ளார்.

இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார். அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார்.

மேலும் இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடங்களையும் கஜிஷனா- தர்ஷன் பெற்றவர் ஆவார்.

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியிலும் கஜிஷனா- தர்ஷன் வெற்றி பெற வேண்டுமென பல்லரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

கொப்பர் அமிலம் குடித்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா தெல்தோட்டையைச் சேர்ந்த பிரதீபன் ரத்னீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை தெல்தோட்டையில் தங்க வியாபாரம் செய்து வருகிறார்.

அவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக மாலை ஐந்து மணியளவில் இந்த வணிக வளாகத்திற்கு வந்தார்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, ​​அருகில் இருந்த தங்க பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்திய கொப்பர் அமிலம் சிறு குழந்தை குடித்த நிலையில் குழந்தை தரையில் விழுந்துள்ளது.

பதறியடித்த பெற்றோர் குழந்தையை தெல்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் , வைத்தியர்கள் குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போதிலும், சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நிபுணர் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.பி.ஜெயசூரியவினால் வெளிப்படையான தீர்ப்பு நவம்பர் 2ஆம் திகதியன்று வழங்கப்பட்டு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.