பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்!!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இரு மாணவிகளுக்கும் விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் திடீர் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா நேற்று (1) இரவு பதுளை போதனா வைத்தியசாலைக்கு சென்று சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.எம்.கே.பி. விஜேதுங்க மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, இரு மாணவிகளின் மரணம் வாகன விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என வைத்திய அறிக்கைகள் முடிவு செய்துள்ளன.

நேற்று (01.11) காலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நிவிதிகல, தோலம்புகமுவ பஹல்கந்தவில் வசித்து வந்த எம்.ஜி.ஐ. உமயங்கனி (24) மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த எம்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியான உமயங்கனியின் தாயார் மல்லிகா நிமல் சாந்தி மகளின் மரணம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கூறியதாவது:

“நேற்று எனது கணவரின் பிறந்தநாள். மகள் காலையில் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவரது நண்பன் ஊடாக தந்தைக்கு கேக் அனுப்பியிருந்தார். பிறகு எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி பேசிக்கொண்டு சென்ற போதே மகள் விபத்தில் சிக்கி இறந்து போனதை அறிந்தேன்.

“இறந்தவர் எனது மூத்த மகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி. எனக்கு மேலும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர்.

நான் சில காலம் பொலிஸ் சேவையில் இருந்தேன், பின்னர் பிள்ளைகளின் படிப்பின் காரணமாக விலகிவிட்டேன். கணவர் ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து மகள் தொலைபேசியில் அழைத்து எதிர்வரும் 31ஆம் திகதி பதுளைக்கு பயிற்சித் திட்டமொன்றுக்கு செல்லவுள்ளோம் என்றார்.

இதன்பின்னர் அங்கு சென்று அனைவரும் நேற்று இரவு (31) மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என தெரிவித்தார். என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை… கனவு போல இருக்கிறது. காலையில் பேசிய மகள் சில மணி நேரம் கழித்து விபத்தில் இறந்தது தெரியவந்தது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த விஞ்ஞான பீட விரிவுரையாளரை கொத்தலாவல விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நேற்று மாலை (01.11) மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தோல்வியடைந்துள்ளது.

காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் பதுளை கால்பந்து மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதால், அவரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்று தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சீவ விஜேரத்ன, பொலிஸ் பரிசோதகர் ஜயதுங்க, பிரதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் ஜினதாச, 54124 பீரிஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அநுரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : புதிய அமைச்சர்களுக்கு ஏமாற்றம்!!

பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்களே செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் அரசாங்க வீடுகள் வழங்கப்பட்டு வருவது வழமை.

எனினும் அடுத்து வரும் அரசாங்கத்தில் அந்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வந்தாறுமூலையில் பாவனையற்ற கிணற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தீபாவளி தினமான நேற்று முன்தினம் (31.10) மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும், அதில் பலமற்ற ஏணியொன்று சாத்தி வைக்கப்பட்டும் இருந்துள்ளது. இந்நிலையில், சிறுவன் அதில் ஏறி தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

சிறுவனின் உடல் நேற்று (01) உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் சாதனைப் பயணம்!!

கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுவன் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் இன்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.

சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

மேலும் நாளை மறுதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஸ்யா : தலைசுற்ற வைக்கும் பெரும் தொகை!!

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது.

இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது.

இந்த அபராத தொகையானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பல மடங்கு விஞ்சும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2 என்ற எண்ணிற்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.

யூடியூப்பில் ரஷிய அரசின் ஆதரவு ஊடகங்களில் இருந்து சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ஒன்பது மாத காலத்திற்குள் இந்த உத்தரவிற்கு இணங்க மறுத்தால் அபராத தொகை ஒவ்வொரு நாளுக்கும் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.

RT மற்றும் ஸ்புட்னிக் உட்பட பல ரஷிய அரசால் இயக்கப்படும் சேனல்களுக்கு உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும் : வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக் கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி பலியான சோகம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதன் பின்னர் தபஸ்யாவின் குடும்பத்தினர் அச்சிறுமியை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தபஸ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் பந்து பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் சாகசம்… சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் துடிதுடித்து பலியான சோகம்!!

தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில்,

இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூரில், ஒரே தெருவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிந்து வரும் நிலையில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பைக்குகளில் 5 இளைஞர்களும் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த, 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய 5 இளைஞர்கள் கூடலூரைச் சேர்ந்த லிங்கேஷ்(24), சேவாக்(23), சஞ்சய்(22), மோனிஷ்(22), கேசவன்(22) என்பதும்,

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டதும், அதிவேகத்தில் சென்றதும் விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தீபாவளி நாளில் சொந்த ஊருக்கு வந்திருந்த இளைஞர்கள் 3 பேர் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 வயது காதலியை கொலை செய்த 18 வயது காதலன் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

தனது காதலியைக் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதலனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களுத்துறை மக்கொன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய காதலனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலன் கடந்த செவ்வாய்க்கிழமை (29.10) பிற்பகல் கொலை செய்யப்பட்ட காதலியுடன் பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த காதலி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று (31) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை பரிதாபமாக பலியான சோகம்!!

களுத்துறை – மத்துகம வீதியில் தொடங்கொட மற்றும் ருவன்மகா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியின் கம்பத்தில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

சாரதி நித்திரையினால் வீதியை விட்டு விலகி, விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தை பார்த்துவிட்டு மத்துகமவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(01.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.64 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 214.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 370.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு : சகோதரன் மருத்துவமனையில்!!

பசறை அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று நேற்று (31.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தங்கையும் 17 வயதுடைய அண்ணனும் வீட்டுக்கு முன்பாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

பிள்ளைகளின் சத்தத்தை கேட்ட பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது தனது இரு பிள்ளைகள் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டு உதவியை நாடி உள்ளனர்.

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் இரு பிள்ளைகளையும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, தங்கை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயங்களுக்குள்ளான 17 வயதுடைய அண்ணன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கராத்தே பயிற்றுவிப்பாளரால் இரு பாடசாலை மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!!

கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா – தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிகள் கல்வி கற்கும் அதே பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். இவ்வாறான நிலையில், சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல இடங்களில் இன்று (01.11.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறு மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னல் மற்றும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

 

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் உயிரிழப்பு, 35 பேர் வைத்தியசாலையில்!!

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தில் வசித்து வரும் சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சாவும் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.

பல பாறைகளுக்கு இடையே நின்று இளம் பெண் நேற்று மாலை நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி ஏரிக்குள் விழுந்து பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார்.

அலறி கூச்சலிட்டத்தில் நண்பர்கள் அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மீட்க மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர மீட்பு பணி போராட்டத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் சுமார் 2 மணிக்கு பத்திரமாக மீட்டனர்.