காதலிக்க மறுத்த 16 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மதியம் ஒரு இளம்பெண் எரியும் தீயுடன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கதறியபடி சாலையில் ஓடிவந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த தீக்காயத்துடன் தவித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு பத்வேல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(20). தீக்காயமடைந்த பெண் தஸ்தகிரிம்மா (18), அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் விக்னேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவியை விட்டுவிட முடிவு செய்தார்.

இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட விக்னேஷ், நேற்று கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையொட்டிய ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு மாணவியிடம் ஆசையாக பேசிக்கொண்டிருந்த விக்னேஷ், தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் மாணவி மீது திடீரென தீ வைத்துள்ளார்.

தீ மாணவி அணிந்திருந்த உடைகள் மீது பரவி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி தஸ்தகிரிம்மா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை இன்று கைது செய்தனர். காதல் தகராறில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல உணவகத்தில் குடிநீரை அருந்திய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு, கொத்தடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின்னர் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த யுவதி நோய்வாய்ப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர் குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​உணவகத்தில் சாப்பிட வந்த மருத்துவர், தண்ணீர் போத்தலை சோதனையிட்ட போது அது குடிநீர் இல்லை எனவும் அது surgical spirit என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அது பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

யூரோபார்முலா கார் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய முதல் இலங்கையர்!!

இத்தாலியில் நடைபெற்று வரும் யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தய தொடரின் 8ஆவது கட்டத்தில் இலங்கை கார் பந்தய சாம்பியன் யெவன் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கிய F3 மோட்டார் பந்தய நிகழ்வில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத் தொடரின் 8ஆவது கட்டமாக இத்தாலியின் மொன்சா பாதையில் நடைபெற்ற பந்தயத்தில் யோவான் கலந்துகொண்டார்.

தனது அறிமுகப் போட்டியில் அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களுடன் ஓட்ட பாதையில் நுழைந்த 17 வயதான அவர், போட்டியின் தொடக்கத்திலிருந்தே அனைவரும் பாராட்டும் அளவுக்கு செயற்பட்டுள்ளார்.

யூரோ ஃபார்முலா ஓபன் கார் பந்தயத்தின் 8ஆவது கட்டத்தில் மோன்சாவில் நடந்த 16 சுற்றுகள் பந்தயத்தை 30 நிமிடங்கள் 13 வினாடிகளில் முடித்த யோவான் டேவிட் வெற்றியினை தழுவிக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றியானது, இலங்கை மோட்டார் பந்தய வரலாற்றில் ஒரு தடகள வீரர் பெற்ற அதிகூடிய வெற்றிகளில் ஒன்றாகும்.

யாழில் முச்சக்கர வண்டி மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!!

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்று முன்தினம் (19.10.2024) தனது வீட்டுக்கு எதிரே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு, பிற்பகல் 6.00 மணியளவில் வீதியை கடந்து தனது வீடு நோக்கி செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது பருத்தித் துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி அவரை மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் படுக்காயம் அடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்திசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள் : வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு!!

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த குழு அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் மாத்திரம் முன்னூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணனி அவசர தயார் நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதே போன்று கடந்த காலங்களில் முகப்புத்தக மோசடிகள் தொடர்பிலும் பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கையில் இணைய வழி மோசடிகளை அரங்கேற்றிய குற்றச்சாட்டில் இதுவரை 200க்கும் ​மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெருமளவான இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிலாபம் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும்,வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மகள் சிலாபம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்துள்ளார்.

மேலும், எங்களுக்கு தெரிந்தவரை, இந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், இந்த தீ விபத்திற்கு எந்தவித காரணமும் இல்லை என்றும் சம்பவம் குறித்து பொலிஸார் முறையான விசாரணை நடத்தி விரைவில் உண்மைகளை கண்டறியுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.

இந்நிலையில், சம்பவம் ஆதாரங்களின் அடிப்படையில், பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஹலவத்தை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித அமரதுங்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட்ட தமிழர் கைது!!

கனடாவில் பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பெண்ணொருவருடன் தகாத முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண்ணுடனும் தற்போது தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி டெனிசன் தெரு மற்றும் கார்ட்மெல் டிரைவ் பகுதிக்கு அருகே பெண்ணொருவரை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்த முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த டிப்போக்களின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு இடத்தில் திடீர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.

அதன் பின்னர், குறித்த தரப்பினர் தாங்கள் வந்த வாகனத்தை சீர் செய்ய Ez cash மூலம் அவசர தொகையாக 10,000 ரூபாயை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு வந்துள்ளதாகவும், சில இடங்களில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர்கள் வாகனம் திருத்துமிட உரிமையாளர்கள் அல்லது குறித்த இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வேறு சில குறிப்பிட்ட நபர்களாக இருந்து திட்டமிட்டு, இந்த பண மோசடிகளை செய்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தொலைபேசி எண்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, பல சந்தர்ப்பங்களில் அந்த எண்கள் இறந்த நபர்கள் அல்லது வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சிம் அட்டை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது சில போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்தால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மக்களைத் தொடர்பு கொண்டு, அழைப்பின் உண்மை மற்றும் பொய்யை சரிபார்த்துக் கொள்ளுமாறும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வவுனியாவில் அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அறிமுக நிகழ்வும்!!

வவுனியா தேசியக் கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வி திட்டசான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் பிரேம் ராவத் எழுதிய உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அறிமுக நிகழ்வும் நேற்று முன்தினம் (19.10.2024) வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்றது.

அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக, தொழிலதிபர் ஞா.ராஜேந்திரன் கலந்துகொன்டிருந்தார்.
கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயின்றுவரும் மாணவர்களுக்கு அமைதிவழி கல்வித்திட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு 461 ஆசிரிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஆசிரிய மாணவர்களால் பாடல், கவிதை, அனுபவபகிர்வு, நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளே இருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி போன்ற ஆற்றல் மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அமைதி கல்வித்திட்டத்தின் ஸ்தாபகரான, பிரேம் ராவத் எழுதிய உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அறிமுக உரையை சிரேஸ்ட சட்டத்தரணி திருமதி நளினி கணேசயோகம் அவர்களும் உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அனுபவ உரையை வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி ஜெ.பத்மாவதியும் வழங்கியிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உப பீடாதிபதிகளான கெ.கரிகரசக்தி, கெ.யோகராசா மற்றும் விரிவுரையாளர்களான துணைவன் லிங்கேஸ்வரி, பத்மாவதி ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் மாலதி, அமைதி கல்வித்திட்ட வழிப்படுத்துனர்களான குகானந்தராஜா கீர்த்திகா, விமலநாத சர்மா மற்றும் கல்லூரியின் 780 ஆசிரிய மாணவர்களுடன் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

தாய் வீட்டிற்குப் பிரிந்து சென்ற மனைவி.. விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியில் பழனிச்சாமி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு சர்மிளா தேவி என்ற மனைவி உள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சில பிரச்சினை காரணமாக மனைவி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து பெரும் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுரேஷ் கண்ணனை நேற்று மதியத்தில் இருந்து காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்தனர்.

இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டிற்கு சென்று தட்டிப் பார்த்த பொழுது வீடு திறக்கப்படவில்லை உடனே கதவை உடைத்து பார்த்த போது உள்ளே தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சுரேஷ் கண்ணனின் சடலத்தை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

சிறுநீரை கொண்டு உணவு சமைத்த பணிப்பெண் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் வசித்து வருபவர் பிரபலமான தொழிலதிபர். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து வந்தது.

மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனால் மருத்துவர்கள் உணவில் எதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதனை ஆராயும் வகையில் செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தனர்.

அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைகிறார்.

இந்த வீடியோவை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த குடும்பத்தினர் பணிப்பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 14ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமையல் பணிப்பெண் ரினா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்த வீட்டில் வேலை செய்து வருகிறார்.

இருந்த போதிலும் அந்த குடும்பத்தினருக்கு எதிராக இப்படி ஒரு அருவருப்பான வேலையை செய்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

‘என்னை கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்கள்’.. கணவர் இறந்த அடுத்த அரைமணி நேரத்தில் பெண் ராணுவ அதிகாரி எடுத்த விபரீத முடிவு!!

‘என்னையும் என் கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்க’ என்று தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஆக்ராவில் ராணுவ அதிகாரி ரேணு தன்வார் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நாளில் டெல்லியில் இருந்த ரேணுவின் கணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் ரேணு தன்வார். இவரது கணவரும் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், டெல்லியில் தனது கணவர் தீன்தயாள் தீப் தற்கொலைச் செய்துக் கொண்டதாக தகவல் தெரிந்த நிலையில், ஆக்ராவில் பணியில் இருந்த ரேணு, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.

அதற்கு முன்பாக உருக்கமாக, தனது கணவருடன் சேர்த்து தன்னையும் தகனம் செய்யும் படி கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவலின்படி, விமானப்படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப்பும், அவரது மனைவி ராணுவ அதிகாரி ரேணு தன்வாரும் கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டனர்.

இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் டெல்லியில் உள்ள விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு, டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள விமானப்படை சிறப்பு பிரிவு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். ஆக்ராவில் இராணுவத்தில் பணியில் இருந்தார் ரேணு.

ஆக்ராவில் தனது சகோதரருடன் தாயாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட செய்தி கிடைத்துள்ளது.

கணவர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது மனைவி ரேணு, தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு திரும்பி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விருந்தினர் மாளிகைக்கு விரைந்த போலீசார் ரேணு தன்வாரின் உடலை மீட்டனர். மேலும் அவர் எழுதியிருந்த தற்கொலைக்கு முன்பான கடிதத்தையும் கைப்பற்றினர்.

அதில் ரேணு தன்வார் ’என்னை என் கணவருடன் கைகோர்த்து தகனம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மறுபுறம், தீன்தயாள் தீப் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுப்பிடிக்க போலீசாருக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருமணமாகி 2 மாதம் கூட முடியவில்லை : பரிதாபமாக பலியான புதுமணப்பெண்!!

கல்யாணமாகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட முடியல… இப்போத் தான் மறுவீடு என்று வந்து போய் கொண்டிருந்தனர். அதுக்குள்ள புதுமணப்பெண் தன் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா (29). இவருக்கும் சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த விஸ்வப்பிரியாவுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், புதுமண தம்பதியர் உறவினர்கள் வீட்டிற்கும், தாய், மாமியார் வீட்டிற்கும் மறுவீடு சென்று வந்துக் கொண்டிருந்தனர்.

தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்தபடியே திருவள்ளூரில் இருந்து சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றுக் கொண்டிருந்தார்.

கவரப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், நாகார்ஜுனா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த விஸ்வ பிரியா ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் . 38 வயதான இவருடைய மனைவி சங்கீதா.

இவர்களுக்கு 8 வயதில் ரோஹித் , 4 வயதில் தர்ஷினி என 2 குழந்தைகள். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கோவிந்தராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரது மனைவி சங்கீதாவும், குழந்தைகளும் சடலமாக கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த உதவி கமிஷனர் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து, சங்கீதா அவரது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமைக் காவலர் கோவிந்தராஜும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை காப்பாறிய காவல்துறையினர் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால் யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த (14.10.2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் , 24 வயதான குறித்த இளைஞன் எல்லை பாதுகாப்பு படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிர்ழந்தவர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு உயிரிழந்த இளைஞன் அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்!!

Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ, தனது கண்களில் உள்ள கெமராக்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கு திறன் கொண்டுள்ளதுடன் AI அல்காரிதம்கள் மற்றும் ரோபோ கைகளை பயன்படுத்தி நேர்த்தியாக வரைகின்றது.

AI தொழில்நுட்பம் மூலம் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது, தனது கலை மற்றும் மனிதநேய பண்புகளினால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ai-Daவினால் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் கண்காட்சிகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஏஐ ஃபோர் குட்’ என்னும் நிகழ்வில் Ai-Da ரோபோ, தொழில்நுட்பம் பற்றிய சிறந்த உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.

இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பத்தின் மகத்தான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் முகமாகவே இந்த ரோபோ கலைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.