திருகோணமலையில் உள்ள இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமர தோட்டம் ஒன்றிலிருந்து இன்றையதினம் (03-10-2024) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் களுதாவளையில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையில் இருந்து தப்பித்து மூதூருக்கு வந்து தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு பொலிஸார் வருகை தந்து தடயியல் பரிசோதனை செய்தனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (3) மாணவன் கல்வி பயின்ற கலைமகள் தமிழ்ப் பாடசாலைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம்.யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன் கடந்த முதலாம் திகதி தனது நண்பரின் காதலி என கூறப்படும் 16 வயது மாணவியை சந்திப்பதற்காக மேலும் இரு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
காதலியின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, காதலியின் சகோதரி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கர்ப்பிணியான சகோதரி தரையில் வீழ்ந்ததுடன் இதனால் கோபமடைந்த அவரது கணவன், மாணவர்கள் மூவரையும் தாக்கியதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, மாணவியின் தந்தை, மற்றொரு சகோதரி மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் மோதலில் ஈடுபட்டனர்.
தடிகளாலும் பாதுகாப்பு தலைக்கவசத்தாலும் அவர்களை தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்து தரையில் விழுந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலத்தின் இறுதிச் சடங்குகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
மற்றைய இரு நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வயதுடைய மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரியின் கணவர், மேலும் இருவர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.
அவர் உட்கொண்ட வாழைப்பழத்தில் ஒரு துண்டு, தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் “தனது கணவன், உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டார். அதன்பின்னர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டார்.
அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில், அவசர, அவசரமாக அழைத்துவந்தோம் எனினும், உயிரிழந்துவிட்டார் என பிரதான சட்ட வைத்தியர் முன்னிலையில் பியதாஸவின் மனைவி சாட்சியமளித்தார்.
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் 11.09.2024 இலிருந்து நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, 11.09.2024 க்கு பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வந்துள்ள அந்நிய செலாவணியின் அதிகரிப்பானது, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவுக்கான ககாரணமாக அமைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்த டொலரின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இருந்து வெளியேறும் டொலரின் அளவில் குறைவு ஏற்பட்டிருந்தது.
மேலும் தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு வந்த டொலர் மற்றும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதியை நிலையான நிலையில் பேணுவது மிகவும் முக்கியமானது.
ரூபாயின் பெறுமதி உயர்வதும் குறைவதுமாக இருந்தால் அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் பெறுமதியை நிலையான மட்டத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
15 மாதங்களின் பின்னர் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று முதல் முறையாக 300 ரூபாய் வரம்பிற்கு கீழ் வீழ்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எனவே, வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.
முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவரே இவ்வாரு நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் சம்பந்த பட்ட நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தங்வேல் கமலதாசன் என்ற 41 வயதுடைய தந்தையும் பத்மநாதன் பவிஷ்கா என்ற 05 வயதுடைய மகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன தந்தை மற்றும் மகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் 071 859 1630 அல்லது 031 222 2222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முதியோர் இல்ல தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையில் இயங்கிவரும் எல்லப்பர்மருதங்குளத்தில் அமைந்துள்ள #சிவன்#முதியோர்#இல்லமானது இலங்கை முழுவதிலும் உள்ள 426 முதியோர் இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற தேசிய தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தைப் பெற்றது .
சிவன் முதியோர் இல்லத்திற்கான விருது வழங்கல் நிகழ்வு 01.10.2024 அன்று சுகுறுபாய பத்ரமுல்லையில் நடைபெற்றது.மேற்படி நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம மந்திரி ஹரிணி அமர சூரிய கலந்து கொண்டு சிவன் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது..
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்தார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாக செயற்ப்பட்டுவந்தது.
இந்நிலையில் வவுனியா யாழ் வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையமூடாகவே அரச தனியார் பேருந்துகள் சீரான முறையில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக் கட்டங்கள் நகரசபையால் அகற்றப்பட்டுவருகின்றது. அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஒரு குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்ததால் குழந்தையைக் காண முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த தாய், மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டது வேலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்கேஷ்(28), இவரது மனைவி சுரேகா(23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் கருவுற்ற சுரோகவிற்கு கடந்த 23 ம் தேதி பிரவச வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்றிரவு சுரேகாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சுரேகா தனது இன்னொரு குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்து வந்த சுரேகா நேற்று மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றுள்ளார்.
அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், படுகாயமடைந்த சுரேகாவை மீட்டு, அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தவமிருந்து பெற்ற குழந்தை பார்க்க முடியாத ஏக்கத்தில், 4 வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்படி திறக்கப்பட்டிருந்தது என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது.
பிரசவ வார்டில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுதாகியதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது என்றும் கூறினர்.
அப்போது சுரேகா நான்காவது மாடியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார் அவரோடு அவரது தாயும் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.
நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.
அந்தவகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவரான ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்த நல்ல விஜய் குமார் என்பவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் விதமாக தங்கப் புடவை நெய்து பேசப்பட்டு வருகிறார்.
இவர், ஏற்கெனவே பல விஐபிக்களின் புகைப்படங்கள், பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் ஆகியவற்றை புடவைகளில் நெய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.
அந்தவகையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக விஜய் குமாரிடம் தங்கப் புடவையை நெய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்காக 200 கிராம் தங்கத்தைக் கொண்டு 10 முதல் 12 நாட்கள் வரை வடிவமைத்து புடவையை நெசவு செய்தார். 5.5 மீட்டர் நீளம் மற்றும் 49 அங்குல அகலம் கொண்ட இந்த புடவை மொத்தம் 900 கிராம் எடை கொண்டது.
செப்டம்பர் 17-ம் திகதி திருமணத்துக்காக நெய்யப்பட்ட இந்தப் புடவையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். தங்கத்தால் புடவை நெசவு செய்யும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நெசவாளி விஜய் தனது வேலையில் செய்து காட்டியுள்ளார்.
ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழானது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மிக ஏழ்மையான குடும்பம் ஒன்று உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 என்று தாசில்தார் கையெழுத்துடன் வருமானச் சான்றிதழ் (income certificate) வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழானது பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது ஆகும். கடந்த 2014 -ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்களின் குடும்பத்தில் இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மொத்தம் 5 பேர் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காணமாக கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் இளைய மகன் பல்ராம், 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக வருமான சான்றிதழை கொடுத்துள்ளார்.
பின்னர், உதவித்தொகை வராததால் ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் சரிபார்த்த போது சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வருமானம் தவறானது என தெரிய வந்தது.
இதுபற்றி பல்ராம் கூறுகையில், “வருமான சான்றிதழை CSC மையத்தில் இருந்து பெற்றதாகவும், குடும்ப வருமானம் ரூ.40,000 என தெரிவித்திருந்தும் அதில் ரூ.2 என குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் சான்றிதழில் தவறாக இருந்ததை ஊழியர்களோ, சான்றிதழில் கையெழுத்திட்டு வழங்கிய தாசில்தாரோ கவனிக்கவில்லை.
இதையடுத்து, அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு ரூ.40,000 வருமான சான்றிதழ் வருமான வழங்கப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.