கொழும்பு களுபோவில பிரதேசத்தில் 13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று பதிவாகியுள்ளது.
நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி பகுதியில் வசிக்கும் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களில் பெண் பிள்ளையான டபிள்யூ.பி.பி. நித்திகா சத்யா, நுகேகொட, சென்.ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் போது, அண்மையில் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு முகம்கொடுத்து, பரீட்சையில் ஏழு திறமைச் சித்திகளையும் ஒரு சாதாரண சித்தியையும் பெற்றுள்ளார்.
மேலும், அவருடன் அதே பரீட்சைக்கு முகம்கொடுத்த கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் இவரது சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் என்ற மாணவனும் இதே போன்று சித்தி பெற்றுள்ளார்.
சிறுவயதிலேயே சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில் இரு பிள்ளைகளும் குறித்த பாடசாலைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இந்தச் சாதனையை எட்ட முடிந்ததாக இரட்டைச் சகோதரர்களின் தந்தை டபிள்யூ. பி. பி.நிஷாந்த தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் வழங்கியுள்ளது.
எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் வாரந்தோறும் திட்டமிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையுடன் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற தரப்பினரால் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியாது, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திற்குள் பெரிய அளவிலான எரிபொருள் சலுகைகளை வழங்குவது சாத்தியமில்லை.
எனவே, தற்போதுள்ள சூத்திரம் மற்றும் சட்டத்தின்படி அண்மைய எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஒரேயடியாக பாரிய சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை எனவும், இதன் காரணமாக, வரிசைகள் உருவாகும் நிலை ஏற்படும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று (01.10.2024) காலை 10 மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகபாரம் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த அழகராசா லக்சுமி (வயது 50) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது. இந்த திட்டமானது இன்று (02), மதியம் 12 மணிக்கு தொடக்கம் நவம்பர் 5, வரை ஒன்லைன் பதிவுக்காக திறந்திருக்கவுள்ளது. ஆண்டுதோறும் 55,000 நபர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இந்த விசா வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்காக http://dvprogram.state.gov என்ற இணையத்தளத்திற்குள் நுழைய முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடி நடவடிக்கைகள் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு சம்பத் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பத் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கும்போது, பின்வருவனவற்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள், OTP இலக்கங்கள் போன்ற இரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்க்கவும்.
கணக்கு உள்நுழைவுக் கட்டுப்பாடு, உங்கள் கணக்குகளை இயக்க மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அதிகாரமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்கள் நிகழும் பட்சத்தில் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டியதுடன் சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளுடன் ஒத்துழைக்க வேண்டப்படுவீர்கள் என்பதை தயவு செய்து கருத்திற்கொள்ளவும்.”என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சமூக நலன்புரி திட்டங்களை முன்னெடுக்க சம்பத் வங்கிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2023 ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 298.91 ரூபாவாக காணப்பட்டது. இந்தநிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 399 ரூபாய் 22 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 61 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 48 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 65 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம்.
துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய மு/ ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இன்பராசா நிலாயினி என்ற மாணவி 9A சித்தியினை பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு,மத்திய மற்றும் வடமத்தியமாகாணங்களிலும்பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
சம்பள அதிகரிப்பு எந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் பல கட்டங்களில் செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கி பரிவர்த்தனைகளில்(online banking) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) கசிவு மூலம் பாரிய பண மோசடிகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடக பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பரிவர்த்தனையின் பாதுகாப்பு
”வாடிக்கையாளரை அடையாளம் காணவும், பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அந்தந்த வங்கி நிறுவனத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறியீட்டு எண் (ஒரு முறை கடவுச்சொல் / OTP) வழங்கப்படுகிறது.
இவ்வாறான குறியீட்டு எண் (OTP) சமூக ஊடகங்களில் சில வாடிக்கையாளர்களால் பிரபலமான நிறுவனங்கள் மற்றும் சேவைகள் என சமூக போலி விளம்பரங்களைப் பெற பயன்படுத்தப்படுகிறது.
இது போலி வலைப்பக்கங்களுக்கு மக்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்க வழிவகுக்கிறது.
மோசடி செயல்
இவ்வாறு மூன்றாம் தரப்பினருக்கு தனது தனிப்பட்ட தகவல்களை கொடுப்பது அவர்களின் அறியாமையால் செய்யப்படுகிறது.
இந்த மோசடி செயல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், வாடிக்கையாளர்கள் பெறும் குறியீட்டு எண்ணை (OTP) பெறுவதற்கு இணையத்தை பயன்படுத்தி இந்த மோசடி செயல்களில் ஈடுபடும் பல்வேறு நபர்கள் மற்றும் மேற்கூறிய தந்திரங்களுக்கு பலியாகாமல் இருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸார் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தென் மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
இஸ்ரேலில் வேலைக்காக சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
கண்டியை சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே தனிப்பட்ட காரணங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்று விவசாய துறையில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் இடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டை எண் மற்றும் முழுப் பெயரையும் பகிரங்கப்படுத்துவதன் மூலம், இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் அந்தத் தகவலை எளிதாகப் பெற்று பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக்கர்கள் அணுகி நிதி மோசடியில் ஈடுபடலாம் என விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, பிள்ளைகளின் தகவல்கள் சிறுவர்களுககு பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற தவறான செயல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
எனவே பெறுபேறு தாள்களை வெளியிடும் போது அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் விபரங்களை மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இணையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் ஊடாக ஹேக்கர்கள் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் தவறான செயல்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக, சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.
அதற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ஒரு லீற்றர் பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.