புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சின் அறிவிப்பு!!

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.

தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்தின்படி, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும்.

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!

இலங்கையின் வடக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது.

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா? அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்!!

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான இளஞனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த தமிழ் இளைஞன் இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் இளைஞன் சுடப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து , உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த இளைஞனுக்கு முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட இளைஞன் வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொலைக்கான காணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மகனுக்காக 200 பேரை படுகொலை செய்த நபர்!!

மகனுக்கு ‘பில்லி சூனியம்’ வைத்ததாக 200 பேரை படுகொலை செய்து தெருவில் போட்டு எரித்த Gang leader.

கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக – போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும்.

ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான்.

பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான்.

பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் (voodoo practitioners) பில்லி சூனியம் (voodoo) வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான்.

அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6 – 8 இற்கு இடையில் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் நேற்று (09) இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

100 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி : மக்களே அவதானம்!!

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (09.12) உத்தரவிட்டார்.

நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், முறைப்பாட்டாளர் காணி விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்ததாகவும்,

அதனைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபர் முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அவரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து நாற்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதெவேளை சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடி சம்பவத்தைச் செய்து மோசடியாகப் பணம் பெறப்பட்டு,

சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழப்பு : மக்களே அவதானம்!!

யாழ் . போதனா வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

அதன்படி பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேசமயம் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூவரின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி கூறுகையில்,

இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. எனினும் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும் என்றார்.

அதோடு பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டு மாடியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு : நகைக்காக கடத்தி கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்.

இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  கடந்த சில தினங்களாக கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று டிசம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் மாயமாகியுள்ளார்‌. சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயினும் கையில் 1 கிராம் தங்க மோதிரமும் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சிறுவன் கருப்பசாமி கிடைக்கவில்லை என்றதும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவனது பக்கத்து வீட்டின் மடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், சிறுவன் உயிரிழந்து பல மணி நேரம் ஆகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கருப்பசாமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவன் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர்.

கருப்பசாமியை தங்க நகைக்காகக் கடத்திச் சென்று கொலை செய்து விட்டு மாடியில் போட்டார்களா? அல்லது மரணத்திற்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீ குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : 3 பேர் கவலைக்கிடம்!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா நல்டா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயது தரியா(53). இவரது மருமகள் சாந்தா வயது 33. இவர் டிசம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார்.

அப்போது, தவறுதலாக டீ தூளுக்கு பதிலாக கரையான் விரட்டி மருந்து( பூச்சிக்கொல்லி) மருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை குடித்த தரியா, மருமகள் சாந்தா, சாந்தாவின் மகன் 14 வயது அக்ஷ ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் அந்த சமயத்தில் அவர்களது வீட்டிற்கு வந்திருந்த பக்கத்துவீட்டுக்காரர் உட்பட மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்ச்சம்பவம் குறித்து போலீசார் இந்த தேநீரில், கரையான் மருந்து கலக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சமையல் அறையில் கறுப்புப் பையில் கரையான் மருந்து வைக்கப்பட்டு இருந்ததும், அதுவும் தேயிலை இலை போல இருந்தது தான் காரணம் எனத் தெரியவந்தது.

தேயிலை இலைகளுக்கு அருகில் இந்த நச்சு விரட்டியை யாராவது வைத்திருப்பார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை இலங்கை மற்றும் தமிழகத்தை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.

யாழில் நடந்த அவலம் : நடுவீதியில் தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளை சம்பவமானது இன்று (9) மாலை நடந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணம் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த பகுதியல் முன்னர் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதை தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன. பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வருகிறது.

ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள், ஆனையிறவு சோதனைச்சாவடிகள் அகற்றப்படடதை தொடர்ந்து கால்நடை கடத்தல் தீவிரமடைந்துள்ளதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (09.12) மாலை இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில், உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளம் – சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் , வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றநிலையில், இளஞனும் விரவில் அமெரிக்கா செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை படுகாயமடைந்த பசிந்து தேத்மிக பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞனும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட்டக்கல்லிய ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு செயற்படாததால், ரயில் சமிக்ஞை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை சரி செய்துள்ளபோதும்,

சிவப்பு ஔி சமிக்ஞை மாத்திரம் 24 மணித்தியாலமும் ஔிர்ந்துக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து இடம்பெற்றபோது ரயில் கடவையில் முதியவர் ஒருவர் கடமையில் இருந்ததாகவும், ரயில் வருதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் ரயில் கடவையின் இரு பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை அவதானிக்காது வந்த மோட்டார் சைக்கிள் ரயில் வீதியில் வந்த வேகத்தில் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னடுக்கபப்ட்டு வருகின்றது.

 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு!!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்.

பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 15.12.2024 என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,

தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை Online மூலமாகவும் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும் .

பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

வவுனியாவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் மோசடி : ஒருவர் கைது!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 16 பேரிடமும் சிறு தொகையாக பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.