இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 283 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 319 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 183 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குறையும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,10,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,94,000 ரூபாவாகவும் காணப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,13இ000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,96,750 ரூபாவாகவும் காணப்பட்டிருந்து. அதேவேளை சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,657.33 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

16 மாணவர்களுடன் சிக்கிய இரு மாணவிகள் : பொலிஸார் அதிரடி!!

வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் இந்த களியாட்டம் இடம்பெற்றுள்ளது.

அது தொடர்பில் ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களை ராகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் தாயின் கொடூரம் : பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாய்!!

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்தான பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முப்பது வயதுடைய பெண்ணொருவர் தனது பிள்ளை முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததால் உடலின் நான்கு பாகங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளதோடு, சிறுமியை எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து கண்டி பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.

காயமடைந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டதாக 2024 ஓகஸ்ட் 16ஆம் திகதி அன்று, இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.

அண்மையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டிக்வெல்ல குற்றவாளியாக கருதப்பட்டார்.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!!

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன் சென்றுள்ளார். தொடர்ந்து நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில் இருந்த குறித்த யுவதி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் விபத்து!!

யாழ் தென்மராட்சி – கொடிகாமம் புத்தூர் சந்திப்பகுதியில் நேற்று (29) பிற்பகல் ஐந்து மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹெயஸ் வேனும்,

எதிர்த்திசையில் பயணித்த கெப் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெயஸ் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

எனினும், இந்த விபத்தில் தெய்வாதீனமாக எதுவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து சம்பவிப்பதற்கு காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டினை வாடகைக்கு விட்ட பெண் படுகொலை : தம்பதியின் கொடூரமான செயல்!!

கம்பஹாவில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் வாடகைக்கு வீடு வழங்கும் வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையின் பின்னர் 8 லட்சம் ரூபாய் பணமும் 18 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெலிவேரிய, அம்பறலுவ தெற்கு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மங்கலிகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் அறையில் தங்கியிருந்த தம்பதியே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் இருந்த போது போர்வையால் மூடி மூச்சு விட முடியாதவாறு அழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றுடன் குறித்த தம்பதியினர் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த வீட்டில் மற்றுமொரு வாடகை அறையில் தங்கியிருந்த தம்பதி, கொள்ளையுடன் தொடர்புடைய ஆண் நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, வாடகைக்கு தங்குமிடங்களை வழங்கும் போது அந்த நபர்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா!!

புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது மாதத்தின் கடைசி நாளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் எரிபொருள் விலை சூத்திரம் நீடிக்கப்படுமா, இல்லையா என்பது அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

கடந்த மாத விலைச்சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

10 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை தற்போது 307 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சுப்பர் டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை விலை 352 ரூபாவாகும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் தற்போது 352 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2023 சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு : முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்!!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுன சதீஷன் சமரவிக்ரம அந்த மாணவர் ஆவார். அதேசமயம் மற்றைய ஒன்பது பேரும் மாணவிகள் என்பது சிறப்பம்சமாகும்.

மாணவர் சகுன , பாடசாலை மாணவர் தலைவராகவும், கேடட் அணி மற்றும் சாரணர் குழுவில் உறுப்பினராகவும், பாடசாலை நடனக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மாணவர் சகுன சாதாரண தரப் பரீட்சை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், உறுதியாக இருந்த சகுன, பரீட்சைக்கு முந்தைய நாள் வீட்டுக்கு சென்று பரீட்சையை எதிர்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் நோய் நிலையிலும் பரீட்சையை எழுதி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள சகுன சதீஷன் சமரவிக்ரம, பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் திருத்தம்!!

இலங்கையில் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவை சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை!!

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்….

எனதுமனைவி கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் பயணம் செய்துள்ளார்.

பயணம்செய்த நாளில் இருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை.

கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை.

இந்நிலையில் எனது மனைவி சிலநாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை.

நாம் முகவரை அணுகியபோது அவர்சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது.
தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். குறித்த சம்பவத்தில் நிலூபா வயது 38 என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தரம் 10 மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ பி எடுத்து சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் வெளிவாரியாக சாதாரண தரப் பரீட்சையில் தாேற்றி 8ஏ பி சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில் 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சதாரண பரீட்சையில் வெளிவாரியாக பரீட்சையை எழுதியிருந்தார்.

இந்நிலையில் கா.பொ.த சாதாரன தர பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் குறித்த மாணவன் 8ஏ சித்திகளையும் 1பி சித்தியையும் பெற்று ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்று சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ. லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், 19 மாணவர்கள் எட்டுப் பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமை சித்தியையும் பெற்றுள்ளனர்.

சித்தி அடைந்துள்ளதுடன் அதிகளவான மாணவர்கள் இம்முறை அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை முட்டையின் விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதுளையில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய உறவினர்!!

பதுளையில் சிறுமி ஒருவரை கடுமையான தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுகலை – ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில் அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதையடுத்து குறித்த சிறுமியின் தாயாரினால் நேற்றைய தினம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.