யாழில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது – 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் – பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டு அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (25) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் அதிரடி கைது : சிக்கிய பொருள்!!

கிளிநொச்சியில் உள்ள பளை, ஆனையிறவு சோதனைச்சாவடியில் இன்று காலை மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது 4 கிலோ 40 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் முல்லைத்தீவு, திருமுருண்டி பகுதியைச் சேர்ந்த 18, 25 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விபத்தில் இளம் கணவன், மனைவி உயிரிழப்பு : வீடு சென்றபோது இடம்பெற்ற துயரம்!!

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் பயணித்துள்ளனர்.

இதன்போது பிடபெத்தரவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சொகுசு வேனில் அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய வர்த்தக சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

 

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு : கடும் சிரமத்திற்கு உள்ளான மக்கள்!!

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக உயர்ந்துள்ளது.

400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தேங்காய், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பால் அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு கட்டுப்பாடான விலையில் உணவு வழங்கும் வியாபாரிகள் உணவு தயாரிப்பதில் பெரும் செலவுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கிளிநொச்சியில் 11 வயதுடைய சிறுவனின் சாதனைப் பயணம்!!

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று (25.09.2024) ஆரம்பித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.

குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்மூடித்தனமாக ஆசிரியர் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பார்வையிழந்த சோகம்!!

உத்தரப் பிரதேச மாநிலம், கௌசாம்பியில், 6ம் வகுப்பு படித்து வந்த மாணவனை, ஆசிரியர் குச்சியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது.

பாதிக்கப்பட்ட ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மாணவனுக்கு கண்பார்வை கிடைக்கவில்லை.

நெவாரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆதித்ய குஷ்வாஹா எனும் மாணவன் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த மார்ச் 9ம் தேதி, பள்ளியின் மைதானத்தில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சில மாணவர்களை அழைக்குமாறு ஆதித்ய குஷ்வாஹாவிடம், ஆசிரியர் சைலேந்திர திவாரி கூறியுள்ளார்.

மாணவன் சென்று ஆசிரியர் அழைப்பதாக கூறியும் அவர்கள் வராத காரணத்தால், ஆசிரியர் கோபத்தில் குச்சியால் ஆதித்யாவை அடித்துள்ளார். இதில் ஆதித்யாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.

காயம்பட்ட பிறகு சிறுவனை ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதன்பின்னர் கண் சொட்டு மருந்து போட்டு வகுப்பில் படுக்க வைத்தார்கள். ஆனால் ஆதித்யாவால் இடது கண்ணால் பார்க்க முடியவில்லை.

இது குறித்து பேசிய ஆதித்யாவின் தாய் ஸ்ரீமதி, “ஆசிரியர் குச்சியை வீசியதில் என் மகனின் கண்ணில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. நாங்கள் காவல்துறைக்கு சென்றோம், ஆனால் அவர்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை.

கல்வித் துறை தலையிட்ட பிறகு இந்த விஷயம் விசாரிக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி கண் பரிசோதனையில், என் மகனுக்கு பார்வை சேதம் உறுதி செய்யப்பட்டது.

சித்ரகூடில் உள்ள கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட என் மகனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தனர். ஆனால் இடது கண் பார்வையை மீட்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இந்த விஷயத்தை மூடிமறைக்க ஆசிரியர் எங்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் பணம் வழங்கினார்.

ஆனால் நாங்கள் அதை வாங்க மறுத்து விட்டோம்” என்றார்குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டைத் தொடர்ந்து, தற்போது ஆசிரியர் சைலேந்திர திவாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி கமலேந்திர குஷ்வாஹா கூறுகையில், “கல்வி அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

கல்யாணமாகி 12 நாளிலே பெரும் சோகம்.. மனைவி இறந்த துக்கத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான முத்துமணி கடந்த 18ம் தேதி தனது 30 வயது கணவர் ராமையாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், லேசான காயம் அடைந்த ராமையா, மனைவி இறந்த தகவல் அறிந்ததும், மனவேதனை அடைந்தார். மனைவியை இழந்த சோகம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீதியில் விழுந்து கிடந்த தங்கத் தாலி : மாணவி செய்த செயல்!!

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம் பாடசாலை மாணவி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் பாலகிருஷ்ணன் அபிநயா எனும் மாணவியே இந்த செயலை செய்துள்ளார்.

இன்று காலை மஸ்கெலியா – சாமிமலை வீதியில் அம்மன் ஆலய பகுதியில் தங்க தாலி மற்றும் பணத்தை குறித்த மாணவி கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து பாடசாலை பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தரிடம் அதனை ஒப்படைத்து, அது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனுக்கு மாணவி தெரியப்படுத்தியுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ்.புஸப்பகுமார, இது குறித்து விசாரணை நடத்தி தவற விட்ட நபர் சம்பந்தமான விசாரணை நடத்திய போது புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவலோஜினி வயது 46 என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து அவரை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, தாலியும், பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேர்மையான முறையில் நடந்துகொண்ட பாடசாலை மாணவியை பொலிஸார் பாராட்டியுள்ளார்.

காணொளி எடுப்பதற்கு தடையாக இருந்த 18 மாத குழந்தையை கொன்ற தாய்!!

கண்டி பிரதேசத்தில் 21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.

காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க முடியன்செலவை சேர்ந்த லிதுமி செஹன்சா என்ற தனது 18 மாத குழந்தையை தாய் இவ்வாறு கொன்றுள்ளார்.

குலதுங்க முடியசெலவை மணந்த இருபத்தொரு வயதுடைய வரதவீரன் லக்சிகா என்ற பெண், ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இசுரு இமேஷாக கடமையாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹொரணையில் இருந்து இசுறு இம்ஸ் இல்லத்திற்கு வந்த தாம் நேற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாய் எப்போதும் மொபைல் போனை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு ஏழு மணியளவில் குழந்தையின் அழுகுரல் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை மூச்சுவிட முடியாமல் நீண்ட நேரம் அழுத்தி குழந்தையை தரையில் இறக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். ஆனால், கீழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து சில அடிகள் நடந்து அறையின் கதவு அருகே விழுந்து உயிரிழந்தது.

இந்த தாய் அந்தக் காட்சிகளை வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து சுமார் 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாடகைக்கு வீடு வைத்திருக்கும் பக்கத்து குடியிருப்பாளர்கள் வந்து குழந்தையை இரவு 10:20 மணி அளவில் கலஹா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து கலஹா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

கலஹா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட வைத்திய குழுவினர் இந்த மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இன்று பிற்பகல் கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். கலஹா பொலிஸார் தாயை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் காணாமல் போன இலங்கைப் பெண் : 29 வருடங்களின் பின்னர் நடந்த அதிசயம்!!

வெளிநாடு சென்ற நிலையில் பல வருடங்களாக காணாமல் போன பெண் மீண்டும் வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

சவூதி அரேபியாவில் 29 வருடங்களாக வீட்டுப் பணிப் பெண்ணாக பணியாற்றிய பெண், மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்லும் போது அவரது மகனுக்கு 13 வயதும், மகளுக்கு 12 வயதுமாக இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 43 மற்றும் 42 வயதாக அதிகரித்துள்ளது.

வாரியபொல – ஹிந்தகஹவெவ பிரதேசத்தை சேர்ந்த கமலாவதி என்ற இந்த தாயார் 1995 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

ஆறு மாதங்களாகக் கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் கணவனுடனும் பிள்ளைகளுடனும் தொடர்பில் இருந்த கமலாவதியின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய பல சந்தர்ப்பங்களில் அவரது கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்ற போதிலும், அவர் அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் 29 வருடங்களின் பின்னர் இலங்கை வந்த அவர், விமான நிலையத்தில் உள்ள உதவி பிரிவின் உதவியுடன் வெயாங்கொடயிலுள்ள பிள்ளைகளின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள்

இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

திடீரென உயிரிழந்த தாய் : ராகம வைத்தியசாலையில் மகன்களால் ஏற்பட்ட பெரும் குழப்பம்!!

வடக்கு கொழும்பு போதனா (ராகம) வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன்களால் தாக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையின் வைத்தியரும் தாதியும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் தொடர்பான நோயினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 22ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.

சூரியபாலுவ கடவட பிரதேசத்தில் வசித்து வந்த உயிரிழந்தவரின் மகன்கள் நேற்று (24) காலை ராகம வைத்தியசாலையின் 22 ஆம் விடுதிக்கு வந்து தாயின் மரணம் தொடர்பில் ஊழியர்களுடன் முரண்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், உயிரிழந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கவில்லை எனவும் மகன்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மோதலில் தாக்கப்பட்டு காயமடைந்த வைத்தியர் மற்றும் தாதி ஒருவரும் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவம் தொடர்பில் ராகம வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி ராகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்கப்பட்ட நபர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுரவின் வெற்றியால் வீடற்ற குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பந்தயங்களில் ஒரு குழுவினர் பெருமளவு பணத்தை வென்றுள்ளனர்.

கதிர்காமம், திஸ்ஸமஹாராம போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயம் கட்டியிருந்தனர்.

அதில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை அடிப்படையாக கொண்டு பந்தயம் கட்டப்பட்டிருந்தது.

செல்லகதிர்காமம் பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என 25 லட்சம் பந்தயம் கட்டி தோற்றுள்ளார்.

அவருடன் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய வர்த்தகர் வெற்றி பெற்றுள்ளார்.

அநுர என பந்தயம் கட்டி 25 லட்சம் ரூபாயை வென்ற வர்த்தகர், அந்த பணத்தின் மூலம் வீடற்ற குடும்பம் ஒன்றுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பந்தயம் கட்டிய பல வர்த்தகர்கள் தமது உடமைகளை இழந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பணம், வீடு, தங்க நகைகள், வாகனங்கள் என்பன பந்தயத்தில் ஈடு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 14 வயது மாணவன் துஸ்பிரயோகம் : பயிலுனர் ஆசிரியர் கைது!!

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பெண் ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.