தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா : விரைவில் இறுதி தீர்மானம்!!

மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்.

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

எனினும் விசாரணைகளின் பின் நியாயமான தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறுகையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இனி நாடாளுமன்றில் ரணில் இல்லை அறிவிப்பை வெளியிட்டது ஐதேக!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுரகுமாரவே இலங்கையின் கடைசி ஜனாதிபதி : சுனில் ஹந்துன்நெத்தி!!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை மக்கள் இன்று இந்த நாட்டின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை நியமித்துள்ளீர்கள். இனி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் இருக்க மாட்டார்கள். அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றார்.

அதோடு அனுரவின் ஆட்சியில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வெகுவாகக் குறைக்கப்படும் எனத் தெரிவித்த அவர், ‘மக்களுக்குத் தேவையில்லாதவை அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படாது என மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம்.

எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூர கொலை : அதிரவைத்த சம்பவம்!!

இந்தியாவின் பெங்களூருவில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக‌ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குற்றவாளியை தனிப்படை பொலிஸார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெங்களூருவில் உள்ள வயாலிக்காவல் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (29). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது கணவர் ஹேமந்த் தாஸை பிரிந்து, தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அயலவர், மகாலட்சுமியின் சகோதரர் ஹுக்கும் சிங்கிற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மகாலட்சுமியின் குடும்பத்தினரும், அண்டை வீட்டாரும் வீட்டை திறந்து பார்த்தபோது, குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு தனித்தனி கவரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் , வயாலிகாவல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இரண்டு நாட்களில் அதன் அறிக்கை பொலிஸாரிடம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறுகையில், ‘‘இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகளை அமைத்திருக்கிறோம்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் கிடைத்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய முக்கிய துப்பு கிடைத்திருக்கிறது.

இதுதவிர அந்த பெண்ணின் கணவர், அவரது ஆண் நண்பர்கள் 4 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறோம். சந்தேகத்துக்குரிய 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஏறக்குறைய குற்றவாளியை நெருங்கி விட்டோம். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை பொலிஸார் விரைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரை தெரியுமா? உதவி கோரியுள்ள பொலிஸார்!!

புத்தளம், ஆனமடுவ, மிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இந்த யுவதி காணாமல் போயுள்ளார்.

யுவதி தொடர்பில், இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என முறைப்பாட்டாளரான யுவதியின் பாட்டி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு ஆனமடுவ பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (24) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,464 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,280 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – விமான நிலையத்தில் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்!!

நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் ஊடாக இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வழிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிலாபம் தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

இதேவேளை பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு அல்லது தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு ,வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராக இடம்பிடித்த ஹரினி!!

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

​ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கை நேற்றைய தினம் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிற்பகல் ஐந்து மணியாகும் போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ​ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

அதேநேரம் இன்று காலை ஊரடங்கு உத்தரவானது இன்று மதியம் 12 மணி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!!

நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளில் சஜித் முன்னிலை!!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,257 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

விஷம் கலந்து ஜூஸ் குடித்து பிரபல பாடகி மரணம்!!

15 நாட்களுக்கு முன்பு போலங்கிரில் நடந்த படப்பிடிப்பில் ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (27) பங்கேற்றார்.

பின்னர் அவருக்கு jஜூஸ் வழங்கப்பட்டது. அதை குடித்துவிட்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பாடகி ருக்ஸானா பானோ உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ருக்ஸானா பானோவின் சகோதரி ரூபி பானோ கூறுகையில், ‘எனது சகோதரி ருக்ஸானா பானோவுக்கு மேற்கு ஒடிசாவை சேர்ந்த பாடகி ஒருவர் அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது அவருக்கு கொடுத்த ஜூஸில் விஷம் கலந்திருக்கலாம். இதனால் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்றார். பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பரபரப்பு : வீடு எரிந்து பெண் பலி : நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதனால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளதுடன் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : தள்ளாத வயதிலும் தனது கடமையை செய்த106 வயது முதியவர்!!

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 106 வயது நபர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (106) ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல தனது வாக்கினை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,

நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

பங்களாதேஸ் அணியிடம் சிங்களம் பேசிய இந்திய வீரர் கோஹ்லி!!

இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது

பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி “நியமாய் மல்லி” ( சிறப்பு, தம்பி) என்ற வார்த்தையை கூறியுள்ளார். எனினும், இதன் அர்த்தம் சகிப் அல் ஹசனுக்கு புரியவில்லை.

இதன்போது நீங்கள், மலிங்கவை போன்று யோக்கர்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கோஹ்லி ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சகிப், கோஹ்லியின் ‘நியமாய் மல்லி’ என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்ததாக புன்னகை செய்துள்ளார்.