இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான இம்ரான் பாட்டேல் என்ற வீரரே இவ்வாறு கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இந்த வீரர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தோள்பட்டை வலி
மகராஷ்டிர மாநிலத்தில் புனோவில் நடைபெற்ற போட்டியொன்றின் இடைநடுவில் குறித்த வீரர் மாரடைப்பு காரணமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் மரணித்துள்ளளார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பாட்டேல் சிறிது நேரம் விளையாடிய போது நெஞ்சு மற்றும் தோள்பட்டை பகுதியில் வலி எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட நடுவர்கள் அவரை பெவிலியன் திரும்ப அனுமதித்துள்ளனர். எனினும் பெவிலியன் திரும்பும் வழியிலேயே கீழே வீழ்ந்து பட்டேல் உயிரிழந்துள்ளார்.
இறுதி 4 ஓட்டங்கள்
இந்த போட்டியானது நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகவும் இதனால் பாட்டேல் உயிரிழந்த காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த இம்ரானை மீட்டு வைத்தியசாலைலயில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முதல் பந்திலும் அவர் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
புனேவில் சில மாதங்களுக்கு முன்னதாக மற்றுமொரு கிரிக்கெட் வீரர் மைதானத்தில் விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.
சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவர் ஒருவித விஷமருந்தியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நிலந்த பிரதீப் குமார என்ற நபரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களுத்துறை, தொடங்கொட பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கமகொட பகுதியில் நாயினால் குடும்பம் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக வீடு முற்றாக இடிந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் காரணமாக வீட்டில் உள்ளவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 2 மணியளவில் வீட்டு உரிமையாளரின் படுக்கையறையின் படுக்கைக்கு அருகில் வந்த நாய் நுளம்பு வலையை கடித்து கிழித்ததுடன், வீட்டு உரிமையாளரின் ஆடை கடித்து இழுத்துள்ளது.
வீட்டின் ஏனையவர்கள் உறங்கும் அறைக்கும், உரிமையாளரை இழுத்து சென்ற நாய், அவர்களையும் வெளியே அழைத்து சென்றுள்ளது.
குடும்பத்தினர் வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்துள்ளது. வீட்டின் சமையலறையின் சுவர்கள் கட்டிலின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாயின் செயற்பாட்டினால் அனைவரும் விழிந்துக் கொண்டமையால், உயிராபத்தில் இருந்து தப்பியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் சிறுமி ஒருவர் ஏழு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்து சாதனை படைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற ஏழு வயது சிறுமி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
குறித்தப் போட்டியில் 200 மாணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 7 வயது சிறுமியான கஜீனா தங்கப் பதக்கத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்றுள்ளார்.இதன்மூலம் சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்ததார்.
இந்நிலையில் கரிப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் திலீபன் அவர்களினால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது இந்தியாவை நோக்கி நகருவதால இலங்கையின் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் இன்று நண்பகல் வேளையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு இடையாக ஊடறுத்து செல்லக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இதன் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கமானது படிப்படியாக குறைவடைவதுடன் வட மாகாணத்திலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் வானம் முகில் செறிந்தும் காணப்படும்.
வட மாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்று அவர் கூறினார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார். நேற்று (29.11) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே மரணமடைந்தவராவார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பதியர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் திருத்த முற்பட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்நிலையில், கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதனையடுத்து, இருவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறையில் வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்களிற்காக ட்துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு,மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு உயிரிழந்தமை நாடு உழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வருட இறுதியில் சுனாமி அனர்த்தம் உருவாகி இலங்கையில் பல பகுதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்னும் ஒரு கருத்து சமூக ஊடகங்ளில் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அது ஒரு தவறான கருத்து எனவும் சுனாமி அல்லது புவிநடுக்கம் ஆகியவை ஏற்படுவதற்கான எதிர்வுகூறல்களை ஒருபோதும் முன்னைக்க முடியாது என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அதனை நிகழும் போது எதிர்கொள்வது தான் மிக முக்கியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, 2024ஆம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்படும் என்னும் கருத்து ஒரு வதந்தி எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறு பரப்பப்படும் இந்த செய்தி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒன்று, எனவே இது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பிரதீபராஜா கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை குறித்து லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பொலன்னறுவை மகாவலி ஆறு மற்றும் திவுலான வில்லுவ அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமை மாடுகளின் கூட்டத்துடன் திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-5 வயதுடைய சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த யானைக் குட்டி, சோமாவதி காப்புக்காட்டில் வழமையாக உலாவித்திரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையிலேயே சீரற்ற வானிலை காரணமாக, தமது கூட்டத்தில் இருந்து பிரிந்து,திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு எருமைக் கூட்டத்துடன் வந்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள், மன்னம்பிட்டிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, குறித்த யானைக்குட்டியை காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் குழந்தைகளுக்கான பால் மா பக்கட்களை திருடிய சந்தேகத்தின் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் ஆறாயிரம் ரூபா பெறுமதியான பால் மா இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்காக இரண்டு பால் மா பக்கட்டுகளை பணம் செலுத்தாது எடுத்துச் சென்ற போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து குருந்துவத்த வைத்தியசாலைக்கு அருகாமையில் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணிடமிருந்து குழந்தைகளுக்கான இரண்டு பால் மா பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளை சேர்ந்த 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 1,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் 8,678 குடும்பங்களைச் சேர்ந்த 27,717 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 279 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.