10,000 ரூபா பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை : இலங்கையில் பயங்கரம்!!

10,000 ரூபா பணம் தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மூதாட்டியை கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார். பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை!!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே அவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் : தந்தை கண் முன்னே பரிதாபமாக பலியான இளைஞன்!!

தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சிவராஜூலுவும் தனது தந்தையிடம் பாம்பு கையாளுதலைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் தந்தை கங்காராம் நாகப்பாம்பை மகனிடம் கொடுத்து ரீல்களை எடுக்கச் சொன்னார்.

அதன்படி, சிவராஜூலு பாம்புடன் வாயில் முத்தம் கொடுத்து போஸ் கொடுத்தார். அப்போது, ​​அவரது நாக்கை பாம்பு கடித்துள்ளது. இதை உணராமல் சிவராஜூலு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

சில நிமிடங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிவராஜூலுவை பாம்பு கடித்ததை உணர்ந்த அவரது தந்தை உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல் மோகத்தால் தந்தை கண்முன்னே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளை பரிமாறிக்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, இழிவுபடுத்தும் பதிவுகள் குறித்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

சில போலி கணக்குகளின் ஊடாக வெளியிடப்படும் பதிவுகளை, உங்கள் தமது சமூக ஊடக கணக்குகள் ஊடாக பகிர்வதன் மூலம் தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகும் அபாயம் உள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!!

கிங் கங்கையில் நீராடச்சென்ற போது காணாமல்போன மாணவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ, கடஹிங்கல பகுதியை சேர்ந்த ஜனிது சுரேந்திரா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு அருகே உள்ள ஜிங் கங்கையில் குளிக்க சென்றார்

இதன்போது, ஆற்றைக் கடக்க முற்பட்ட போது, ​​வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். காணாமல்போன மாணவனைக் கண்டுபிடிக்க நெலுவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பயங்கர விபத்து : யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்!!

கிளிநொச்சியில் யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் நேற்றையதினம் (06.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயலில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி உமையாள்புரத்தைச் சேர்ந்த 58 வயதான சுப்பையா சாந்தகுமார் என்பரே படுகாயமடைந்துள்ளதாக் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், கண்டியிலுள்ள கடைகளில் தொலைபேசி பாகங்கள், உடற்கட்டு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் சில ஜோடி காலணிகளை வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன ATM அட்டையின் உரிமையாளரான பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேக நபரான மாணவர் பொருட்களை கொள்வனவு செய்த நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட அவரது உண்மையான பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நேற்று மாணவனை கைது செய்துள்ளனர்.

இதன்போது, ​​கைதான மாணவன் கொள்வனவு செய்த பொருட்களை பேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 13ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவன் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 05 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் தவறான முடிவெடுத்து மரணம்!!

வவுனியா பொதுவைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை அவர் அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டனர்.

லோயினி வயது 39 என்ற இரண்டுபிள்ளைகளின் தாயாரே சாவடைந்துள்ளார். அவரது கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே நாடுதிரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் திருடிய நகைகளை வாங்கிய இரு வர்த்தகர்கள் கைது!!

அனுராதபுரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி பல இடங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞனும், திருடப்பட்ட தங்க நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவை சேர்ந்த இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா தோணிக்கல் பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இளைஞன் பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து சென்றுள்ளான். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அனுராதபுரத்தை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து அனுராதபுரத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டதுடன், குறித்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் அனுராதபுரம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு சங்கிலியும், மிகிந்தலை பகுதியில் மூன்று சங்கிலியும், பரசண்கஸ்கல பகுதியில் ஒரு சங்கிலியும், பூனாவப் பகுதியில் ஒரு சங்கிலியும், பூவரசங்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், உலுக்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், தோணிக்கல் பகுதியில் ஒரு சங்கிலியும் என 9 இடங்களில் குறித்த இளைஞனால் சங்கிலிகள் அறுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன், திருடப்பட்ட நகைகள் வவுனியா நகர் பகுதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இரண்டில் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், இரு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு வேறு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பல்வேறு நீதிமன்றங்களில் 6 பிடியாணைகள் காணப்படுகின்றன. அதில் நான்கு திறந்த பிடியாணையும், இரண்டு நாள் பிடியாணையும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மற்றும் கடை உரிமையாளர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ் புகலிட கோரிக்கையாளர் தற்கொலை : அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் அன்டனி அல்பனீஸிடம் முன்வைத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக அகதி கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், இதுவரை முடிவு அறிவிக்கப்படாத தமிழர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முன்னெடுத்து வந்த இலங்கையைச் சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் மனவிரக்தி காரணமாக, பொதுவெளியில் உயிரை மாய்த்தார்.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் அகதி தொடர்பான கோரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் விசா பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள அகதிகளுக்கு நிரந்தர உரிமையை வழங்குமாறு கோரி 25 கூட்டரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் விசா கோரிய நிலையில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை எட்டாயிரத்தையும் தாண்டுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த மகன்களின் உடலை தோளில் சுமந்து 15 கி.மி நடந்துசென்ற பெற்றோர் : பெரும் சோக சம்பவம்!!

இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது வெகுதூரம் சுமந்து சென்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை சரியான நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார்.

சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில், இருவரின் உடல்நிலையும் திடீரென மோசமானது. அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்த மகன்களின் சடலங்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான நோயாளர் காவு வண்டி வசதி கூடச் செய்து கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவர்கள் தங்களது மகன்களின் சடலங்களை சுமார் 15 கிலோ மீற்றர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சடலங்களைத் தோளில் சுமந்து கொண்டு, சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் காணொளியை அரசியல்வாதி ஒருவர் 2சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று (06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

13 வயது மகளை சீரழித்த தந்தை : தாய் முறைப்பாடு!!

பொகவந்தலாவ பிரதேசத்தில் தனது 13 வயது மகளை தந்தை சீரழித்ததாக , தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து அவரது கணவன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

கடந்த 2023 ம் ஆண்டு தொடக்கம் 13 வயது உடைய தனது சொந்த மகளை பல முறை சீரழித்ததாக தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து தாய் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரது 44 வயது உடைய கணவர் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!!

காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார்.

போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ரொனால்டோ தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான்.

எனினும், கழக மட்டப்போட்டிகளில் அனைத்து கிண்ணத்தையும் வென்றாலும், உலகக் கோப்பையில் போர்த்துக்கல் அணி காலிறுதி வரை வந்து அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.

இந்நிலையில், நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்த்துக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் தற்போது வரை காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

 

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது : அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 672 சந்தேகநபர்களும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 664 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 165 கிராம் 736 மில்லி கிராம் ஹெரோயின், 211 கிராம் 79 மில்லி கிராம் ஐஸ், 2,151 கஞ்சா செடிகள் மற்றும் 612 கிராம் 795 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.