வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு, அதிகபட்சமாக, பதினைந்து இலட்சம் ரூபாய் வரை, ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் மற்றும் மாணவர்கள் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு இரண்டு உத்தரவாததாரர்கள் கட்டாயம் என்றும், தாய் அல்லது தந்தை முதல் உத்தரவாததாரராக கையொப்பமிட வேண்டும் மற்றும் கடன் தொகையை அங்கீகரிக்கும் வங்கியின் தேவைக்கேற்ப இரண்டாவது உத்தரவாததாரரை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் பெற்ற 292 மாணவர்கள் கடன் தொகையை செலுத்த தவறியமையால் இம்முறை உத்தரவாததாரர்களின் தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் எட்டாவது தடவையாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இம்முறை 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி இளஞர் ஒருவர் அதே இடத்திலேயே உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது.
யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் கேரதீவு கடலில் வைத்து இனம் தெரியாத விசஜந்து ஒன்று தீண்டியதால் உடனடியாக மரணம் அடைந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் இருப்பிட சனசமுக நிலையத்தின் விளையாட்டு கழகத்தின் சிறந்த வீரர் என கூறப்படும் நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொனராகலை – பிபில நாகல பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்றையதினம் (05-09-2024) இரவு 7.30 மணியளவில் பிபில – அம்பாறை வீதியில், நாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பின்னால் அதே திசையில் சென்ற பேருந்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பேருந்தின் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2 பேருந்துகளிலும் பயணித்த 47 பயணிகள் விபத்தில் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், ஊழியர்கள் இறங்குவதற்காக நின்ற போது மற்ற பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியை சேர்ந்த தனுஜா தில்ருக்ஷி விக்ரமநாயக்க என்ற 30 வயதுடைய திருமணமான பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றத்தில் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய போதே அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணமாகி கொட்டகசந்திய பிரதேசத்தில் உள்ள கணவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் நிமோனியாவாக மாறியதால் கடந்த 31ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாகி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய போதிலும், அங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவே தெல்தெனிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் அன்றிரவு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கண்டி பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி சந்திரதாச, பெண்ணின் மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
யாழ். (Jaffna) மானிப்பாய் பகுதியில் எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை குறைந்த பட்சம் கருணை கொலையாவது செய்ய வேண்டும் என்று முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளையதம்பி ஜெயக்குமார் எனப்படும் குறித்த முதியவர் தற்போது, மானிப்பாய் வீதியில் உள்ள உதயதாரகை சன சமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
ஒரு காலில்லாத நிலையில் உள்ள அவரைப் பொறுப்பேற்பதற்கு எந்தவொரு முதியோர் இல்லங்களும் இதுவரை முன் வந்திருக்கவில்லை.
இந்நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம அலுவலருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவும், தொடர் நடவடிக்கைகள் காரணமாகவும் அந்த முதியவரை, பொருத்தமான முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஜே/88 கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் சிபாரிசு செய்திருந்தார்.
எனினும், எந்தவொரு முதியோர் இல்லமும் அவரைப் பொறுப்பேற்க முன்வராததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் அந்த முதியவரை இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக அல்லலுற்றுக் கொண்டிருந்த முதியவருக்கு தங்க ஓரிடம் கிடைத்தமையே போதும் என்ற நிலையில், கிராம மக்கள் இணைந்து பெரும் நிதிச் செலவில் அந்த முதியவரை பளையிலுள்ள மேற்படி முதியோர் இல்லத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
எனினும், அங்கும் அவருக்கு இடம் வழங்கப்படாததை அடுத்து, அவர் மீண்டும் உதய தாரகை சனசமூக நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்தே அவர், எந்தவொரு முதியோர் இல்லமோ, அமைப்போ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்காத பட்சத்தில் குறைந்தபட்சம் தன்னைக் கருணைக் கொலையாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தனது கடிதத்தின் பிரதிகளை அவர், வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் கொட்டடி கிராம அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
இளம் பெண் ஒருவரின் சமுக வலைதள காணொளிகளை பார்த்து 45 இலட்சம் ரூபாவை 52 வயதுடைய நபரொருவர் பறிகொடுத்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்ற குறித்த நபருக்கு 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் காணொளிகள் அனுப்பட்டுள்ளன.
டிக்டொக் கணக்கு
அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.
இந்தத் தொடர்பாடலின் பின்னர் அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
டிக்டொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 இலட்சம் ரூபாவரையில் கொடுத்திருக்கின்றார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன.
பொலிஸ் விசாரணை
ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக காணப்பட்டுள்ளன.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்துள்ளன.
அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் பெற்றிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
அத்துடன், இவர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
டிக்டொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை பெற்றுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பருக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இவர்கள் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் பின்புறம் லொறி ஒன்று மோதியது. இதன் காரணமாக கார் கவிழ்ந்ததில், பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கார் தீப்பிடித்து எரிந்ததினால் காரில் இருந்த 4 பேரால் வெளியே வரமுடியாத நிலையில் அவர்கள் காருக்குள்ளே கருகி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இதுவரை தீர்வு வழங்கப்படாத விண்ணப்பங்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை கிராஸ்பெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் அன்டனி அல்பனீஸிடம் முன்வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக அகதி கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், இதுவரை முடிவு அறிவிக்கப்படாத தமிழர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முன்னெடுத்து வந்த இலங்கையைச் சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் மனவிரக்தி காரணமாக, பொதுவெளியில் உயிரை மாய்த்தார்.
இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் அகதி தொடர்பான கோரிக்கை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் விசா பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள அகதிகளுக்கு நிரந்தர உரிமையை வழங்குமாறு கோரி 25 கூட்டரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் விசா கோரிய நிலையில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை எட்டாயிரத்தையும் தாண்டுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, 40 வயதுடைய டெய்சுகே ஹோரி என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும் வழக்கத்தை கொண்டவராவார்.
குறித்த நபர், 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் வழக்கத்தை 12 ஆண்டுகளாக தொடர்வதாகவும் அந்த 30 நிமிடங்கள் உறங்குவதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் உறக்கம் என்ற ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்நிலையில், மனிதனொருவன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிக ஆரோக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
எனினும், குறித்த நபரின் உறக்கத்தின் வழக்கம் மாறாக அமைந்துள்ளமையை அறிந்த மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மகிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட, பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தர பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தர பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதுவரை நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை 1000 ஆக மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
தற்போது தம்வசம் 30,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை அண்மித்து கடவுச்சீட்டை பெறுவதற்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்றிரவு (04.09.2024) வேகக் கட்டுப்பட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது உருத்திரபுரத்தைச் சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்றிரவு (04.09.2024) இடம்பெற்ற மற்றுமொரு வீதி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது சந்திரசேகரம் புவனேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இரு சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறித்த விபத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் நேற்றைய தினம் (03.09) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் (S.C.I.B) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களுடன் உப பொலிஸ் பரிசோதகர் குணத்திலக்க, மற்றும் பொலிஸ் சார்ஜன்டுகளான விஜேசிங்க(12535), மெதகொட(70812), மேலும் பொலிஸ் கொன்ஸ்தாபிள் கிரிநாத் ஆகியோரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.