யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு : பொலிஸார் அவசர கோரிக்கை!!

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(29.08.2024) யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறித்த சந்தேகநபர் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு கருவியின் காணொளியில் நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையை மாற்றிச் செல்வதும் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். குறித்த காணொளியில் பதிவாகிய நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறும் சாவகச்சேரி பொலிஸார் மக்களிடம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 

இலங்கையில் புதிய முயற்சி : உயரத்தில் பறக்கும் பட்டங்களில் இருந்து மின்சாரம்!!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது.

இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்கள்!!

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகளவில் அதிக இணைய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.

இதேவேளை இரண்டாவது இடத்தில் யூடியூப் (YouTube) மற்றும் மூன்றாவது இடத்தில் இன்ஸ்டாகிராம்(Instagram) உள்ளன.

Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் படி உலகளாவிய இணைய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணைய பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

260 ரூபாவாக குறையும் அமெரிக்க டொலரின் பெறுமதி : சலுகைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!!

370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 89 பில்லியன் டொலர் இருந்தது. நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது 76 பில்லியன் டொலர்களாக அது குறைந்திருந்தது.

ஒருநாள் ஒரு டொலர் கூட பணம் இருக்கவில்லை. அந்த நாளில் 2000 டொலர்கள் என்னிடம் இருந்தது. அன்று தாய்நாட்டை விட நான் செல்வந்தராக இருந்தேன். இன்று தாய்நாடு என்னை விட செல்வந்த நாடாக மாறியுள்ளது.

அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் ரூபாவின் பெறுமதி 100 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. பொருட்களின் விலை 100 வீதத்தினால் உயர்ந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

கிரீஸில் பொருளாதார வீழ்ச்சியுடன் அரச ஊழியர்களின் சம்பளம் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டது. எமது நாட்டில் அன்று அரச ஊழியர்கள் கஷ்டப்பட்டனர். நகை கடைகளில் அதிகளவான நகைகள் அடகுவைக்கப்பட்டன. அனைவரும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

இன்று சிவப்புப் பருப்பு விலை 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. டீசல் மற்றும் எரிவாயு என்பன 33 வீதத்தினால் குறைந்துள்ளது. 40 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் கஷ்டத்துடன் வாழும் 25 வீதமான மக்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியை 84 பில்லின் டொலர்களாக உயர்த்தியுள்ளேன்.

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அஸ்வெசும அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வருடத்தில் வரிச்சலுகை மற்றும் சம்பள உயர்வு வழங்க முடியவில்லை. ஆனால் 2024 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

பின்னர் அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்படுகிறது.

எம்மிடம் உள்ள பணம் அதிகரிப்பதோடு நிவாரணம் வழங்க ஆரம்பித்தோம். 370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம்.

மக்கள் படும் வேதனை எமக்குத் தெரியும். அதனை போக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழைக்கும் போதான வரியை திருத்த ஜஎம்எப் உடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எமது யோசனையும் ஜஎம்எப் யோசனையும் ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அவுஸ்திரேலியாவில் பெண் விவகாரத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்!!

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்துகொண்டமை தொடர்பாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலீப் சமரவீர, அவுஸ்திரேலிய கிரிக்கெட்டினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

துலீப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இதன்போது பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் அந்த பதவியிலிருந்து விலகிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை எனவும் விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துலீப் சமரவீர, இலங்கை அணியின் சார்பில் 5 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பதுடன், நட்சத்திர கிரிக்கெட் வீரர் திலான் சமரவீரவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தெஹிவளையில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் : முதல் நாளிலேயே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் தங்க சங்கிலி, காப்பு, மோதிரங்கள் உட்பட 50,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் உள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஊடாக பணிப்பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மூத்த சகோதரி ஊடாக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் எதுவுமின்றி தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் வழங்கி பணியை ஆரம்பித்ததாக விசாரணைகளில் தெரியவந்துளளது.

அன்றைய தினம், வீட்டு உரிமையாளரின் மனைவி இரண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் மனைவியின் தந்தை மற்றும் தாயார் மட்டும் வீட்டில் இருந்ததால், மனைவியின் தந்தை வீட்டு உரிமையாளரான மருமகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பணிப்பெண் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சந்தேகம் ஏற்பட்டு மேல் மாடியை சோதனையிட்ட போது தங்கம் மற்றும் பணம் அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

தங்கப் பொருட்களுக்கு மேலதிகமாக 45ஆயிரம் ரூபாய் பெறுமதியான Apple Air Pods இரண்டையும் அவர் எடுத்து சென்றள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்!!

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செப்டெம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமான சேவை!!

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செப்டெம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானத்தை இயக்குகிறது.

ஆரம்பத்தில், வட இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் விமானங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் பயணிகள் படகு சேவையும் சமீபத்தில் மீண்டும் இயக்கப்பட்டது.

‘சிவகங்கை’ என்று பெயரிடப்பட்ட இந்த படகு, சமீபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நான்கு மணி நேரத்தில் தனது முதல் பயணத்தை முடித்தது.

 

யாழ் வைத்தியசாலையில் முதலாவது பிறந்தாளை கொண்டாடிய இரட்டையர்கள் : நெகிழவைத்த தருணம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்தை இரட்டை குழந்தைகள் தமது பிறந்தநாளை வைத்தியசாலையில் கொண்டாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த இரட்டைகுழந்தைகள் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு வருடத்திற்கு முன்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு அதிசயத்தை கண்டது. அதாவது இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு ஆகும். தாம் இவ்வுலகிற்கு வர விருந்த காலத்திற்கு முன்னராகவே உலகிற்கு கொண்டுவரப்பட்ட இவ் இரட்டை குழந்தைகள் இந்த உலகில் நுழைந்த தருணத்திலிருந்து நம்பமுடியாத சவால்களை எதிர்கொண்டிருந்தனர்.

எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னதாகவே பிறந்து இக் குழந்தைகளின் பயணம் மருத்துவமனையின் மிகவும் சிறப்பு வாய்ந்த குழந்தை பராமரிப்புக் குழுவின் பாதுகாப்பான மற்றும் அக்கறையுள்ள கைகளில் தொடங்கியது.

இவர்கள் பிறந்த உடனேயே கண்ணாடியிலான புதிதாகப் பிறந்த குழந்தைகள் காப்பகங்களில் வைக்கப்பட்டனர். அங்கு இவர்கள் இரண்டு மாதங்கள் விழிப்புடன் கவனிப்பில் இருந்தனர்.

பிறந்த குழந்தை பராமரிப்பு குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் 24 மணிநேர கண்காணிப்பு ஆகியவை இந்த விலைமதிப்பற்ற உயிர்கள் ஒவ்வொரு நாளும் வலுவாக வளர சிறந்த வாய்ப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யப்பட்டன.

இரு மாதங்கள் அவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் சவாலான காலங்களை பார்த்து இனிதே குழந்தைகளுடன் வீடு சென்றனர். இந்த இரட்டைக் குழந்தைகளின் கதை உயிர்வாழ்வதற்கான கதை மட்டுமல்ல யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைப் பாராமரிப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட அசாதாரணமான பராமரிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

இந்த சாதனை மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது, இந் நிகழ்வானது பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவின் முன்னேற்றம் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இக் குழந்தைகளின் வளர்ச்சி இன்று வரை வேகமாக முன்னேறி, முழு வட்டத்திற்கு வந்துள்ளது.

இந்த நெகிழ்ச்சியான இரட்டையர்களின் பெற்றோர் சமீபத்தில் மருத்துவமனைக்குத் வந்திருந்தனர், பரிசோதனைக்காக அல்ல, ஆனால் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாடுவதற்காக.

ஆம் தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக. இந்த கொண்டாட்டம் ஆனது அவர்களின் குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டிருந்த குழுவுடன் ஒரு மனதைக் கவரும் வகையில் மீண்டும் இணைந்த தருணமாகும்.

தங்கள் கைக்குழந்தைகளுடன், பெருமை வாய்ந்த பெற்றோர்கள் தம் பிறந்த குழந்தை பராமிப்பு குழுவிற்கு இதயம் கணிந்த நன்றியைத் தெரிவித்தனர், இவர்களும் குழந்தை பராமரிப்பு குழுவினரும் அந்த முக்கியமான ஆரம்ப மாதங்களில் குடும்பத்தைப் போல மாறியிருந்தனர்.

இரட்டைக் குழந்தைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்ட குழுவால் சூழப்பட்டதால் அங்கு உண்மையிலேயே மாயாஜாலமான ஒன்று நடந்தது இரண்டு குழந்தைகளும் அக்கறையுள்ள குழுவினரைப் பார்த்து சிரித்தன, இது ஒரு சைகையை பெரிதாகப் பேசியது. இந்த தருணம், புகைப்படங்களில் கைப்பற்றப்பட்டது,

இந்நிகழ்வானது நம்பிக்கை, நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புள்ள சுகாதார நிபுணர்களின் நம்பமுடியாத தாக்கத்தின் சின்னமாக மாறியது. இது சமூகத்திற்கு ஒரு நினைவூட்டல் மற்றும் அதற்கு அப்பால் திறமையான மற்றும் இரக்கமுள்ள பராமரிப்பாளர்களின் கைகளில் ஒவ்வொரு நாளும் அற்புதங்கள் நிகழ்கின்றன.

இந்த சாதனையை மருத்துவமனை கொண்டாடும் போது, இந்த இரட்டை குழந்தைகளின் கதை அனைவருக்கும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது. தரமான பிறந்த குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தக்கூடிய வித்தியாசத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரண்டு உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமன்றி ஒரு குடும்பத்திற்கு தமது பிள்ளைகள் வளர்ந்து செழித்து வளர்வதைப் பார்க்கும் விலைமதிப்பற்ற பரிசையும் வழங்கியுள்ளது

. மருத்துவ நிபுணத்துவத்தின் ஆற்றலையும், மேம்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், பராமரிப்பாளர்களுக்கும் அவர்கள் தொடும் வாழ்க்கைக்கும் இடையே உருவான அழகான பிணைப்புகளைக் காட்டுவதால், இந்தக் கதை அனைவருக்கும் பகிரப்படத் தகுதியானது என பதிவிட்டுள்ளார்.

 

நாற்காலியில் கட்டி வைத்து இளம்பெண் கொலை : கணவரின் வெறிச்செயல்!!

பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா எஸ்எம்வி லேஅவுட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.

நவ்யஸ்ரீயின் தோழியான ஐஸ்வர்யா, காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை நவ்யஸ்ரீயிடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகக் கூறினார். மாலை 4.30 மணியளவில் ஐஸ்வர்யா நவ்யஸ்ரீயின் வீட்டிற்கு வந்தபோது, ​​அவர் வீட்டிலும் வெளியிலும் துன்பத்தை அனுபவிப்பதாக கூறினார்.

நவ்யஸ்ரீ மற்றொரு நண்பரான அனிலுக்கு போன் செய்து, தனது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து, அவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அன்று மாலை மூவரும் சந்தித்தனர், அங்கு நவ்யஸ்ரீ தனது கணவருக்கு எதிராக புகார் அளிக்குமாறு அனில் பரிந்துரைத்தார், போலீஸ் தலையீடு திருமண பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்று நம்பினார்.

அனிலை இறக்கிவிட்டு, நவ்யஸ்ரீயும் ஐஸ்வர்யாவும் இரவு 11.30 மணியளவில் முன்னாள் வீட்டிற்குத் திரும்பி படுக்கைக்குச் சென்றனர். மது அருந்திய ஐஸ்வர்யா மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ இறந்து கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை எச்சரித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

மனைவி மீது சந்தேகம் கொண்ட நவ்யஸ்ரீயின் கணவர் கிரண், மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பெண் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில், கிரண் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் நோய் ஆபத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

இலங்கையில் தற்போது சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், நகரமயமாக்கல், வளி மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் சுவாச ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் சுவாச நோய்களின் ஆபத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த சூழ்நிலையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களால் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை காரணமாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் செயல்பாடுகள் இன்மை போன்ற பல நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் மன நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிள்ளைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காலநிலை தொடர்பான அறிவிப்பு!!

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(30.08.2024) நண்பகல் 12.11 அளவில் வவுனியா, வண்ணாமோட்டை, அனல்கட்டிமடி மற்றும் பெரியபண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 

கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்!!

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு ஓர் அழைப்பு!!

வவுனியாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் இயங்கிவரும் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை (31.08.2024) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து குடும்பப் பெண் கடத்தல் : வானுடன் 4 பேர் கைது!!

வவுனியாவில் இருந்து குடும்பப் பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்துவிட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில்,

உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடாந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.