தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விபரீதம்.. பெற்ற தாயே குழந்தைக்கு எமனாக மாறிய சோகம்!!

இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார்.

ஆனால் காதலியின் குழந்தையை கூட அழைத்து வர கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை. இதனால், குற்றச் சம்பவங்களின் பின்னணி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிரைம் பாட்ரோல் என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காஜல் தனது குழந்தையின் கழுத்தை அறுத்து, அப்பகுதியில் உள்ள குப்பையில் சூட்கேஸில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், அப்பகுதியில் சிவப்பு நிற உடை ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதில் ஒரு குழந்தையின் உடல் இருந்தது.அதன்பிறகு குழந்தை யார் என்பதை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தரையில் ரத்தம் கசிந்து கிடப்பதை கண்டனர்.

ஆனால் காஜல் அங்கு இல்லாததால், அவரது தந்தைக்கு போன் செய்தபோது, ​​அவரது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மிஸ்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் காஜலின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது காஜல் தனது காதலனுடன் வசித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காஜலை கைது செய்தனர். காதலனுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகன் திடீர் மரணம் : அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது.

பின்னர் நாகம்மாளை அவரது பெற்றோர் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில், அருண்குமார் தினமும் இரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை பார்ப்பது வழக்கம்.

கடந்த 25ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சிலுக்குவார்பட்டிக்கு சென்ற இவர், அம்மையநாயக்கனூர் சர்ச் எதிரே உள்ள சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் கர்ப்பமாக இருந்தபோது மருமகன் இறந்துவிட்டதால் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மாமியார் உயிரிழந்தார். கணவர் இறந்ததையடுத்து, நாகம்மாள் உடல்நிலை மோசமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தப்ப ஏழாவது மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த தம்பதியர்!!

தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப தங்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்கள் ஒரு தம்பதியர்.

பிரேசில் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள் லூயிஸ் (Luiz Evaldo Lima, 28) கிரேசியேன் (Graciane Rosa de Oliveira, 35) தம்பதியர்.

செவ்வாயன்று, தம்பதியர் வாழ்ந்துவந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல் வழியாக கீழே குதிக்க முடிவு செய்துள்ளார்கள் தம்பதியர்.

கீழே நின்றவர்கள் குதிக்கவேண்டாம் என சத்தமிட, அதற்குள் தீ வேகமாக பரவ, தங்கள் இரண்டுமாதக் குழந்தை Léo Oliveira de Limaவை கட்டியணைத்தபடி தம்பதியர் கீழே குதித்துள்ளார்கள்.

ஏழாவது மாடிலியிலிருந்து கீழே விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பலியாகிவிட்டார்கள். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

தம்பதியரின் மூத்த குழந்தை, ஏழு வயது மகள், அவர்களுடைய வீடு தீப்பற்றியபோது பள்ளிக்குச் சென்றிருந்ததால் உயிர் பிழைத்துள்ளாள். அந்தச் சிறுமி தற்போது தன் தாத்தா பாட்டி வீட்டில் இருக்கிறாள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

தங்கம் வாங்க காத்திருப்போருக்காக மகிழ்ச்சி தகவல் : வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.

இன்றைய (29.08) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,143 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம் 26,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,490 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 195,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

10 மாதங்களில் இருமுறை கர்ப்பம் : மூன்று குழந்தைகள் பெற்ற பெண்!!

பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41). திருமணமான இவர் கர்ப்பம் ஆனார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது தொடர்பில் மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.

சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2-வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8-வது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் சமூக வலைத்தளத்தில் இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் நேற்று(28.08.2024) முதல் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று(29.08.2024) நண்பகல் 12.11 அளவில் பலப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

 

பிரித்தானியாவில் சாலை நடுவில் விழுந்த விமானத்தால் பரபரப்பு!!

பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில், சாலைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

குறித்த சிறிய ரக விமானத்தை உடனடியாக தரையிறக்க முற்பட்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள் TFM மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சவர்க்கார பொதியில் இலங்கை தரநிலைப் பணியகம் SLS சான்றிதழ் அச்சிடப்பட்டதாகவும், 78 எனப் பொதியில் TFM மதிப்பாக மோசடியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஜூலை 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டிருந்தது.

அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை கொள்வனவு செய்து பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகார சபை அண்மையில் ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், இலங்கை தர நிர்ணய பணியகத்திடம் இருந்து SLS சான்றிதழ் பெற்ற சவர்க்காரங்களின் பட்டியலைப் பெற்று, அந்த சவர்க்காரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் TFM மதிப்பு உள்ளதா என்பதை சரிபார்க்க நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

சுமார் ஏழு விதமான சவர்க்கார வகைகள் இருப்பதாகவும்,.வீடுகள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான சவர்க்காரங்கள் கொழும்பில் உள்ள மொத்த மற்றும் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், அதன் TFM மதிப்பு தொடர்பான கடுமையான சிக்கல்கள் இருக்கலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை வாங்கும் போது மிக அவதானமாக செயற்படுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

பண்டாரவளையில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லியாங்கஹவெல, அம்பதன்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளை இவ்வாறு தந்தை சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாகும்.

பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு 6 வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சமையலறை குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை சிறுமியை திட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயங்களுடன் குறித்த மாணவி பாடசாலை சென்ற நிலையில், சிறுமியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அதிபர் அவதானித்துள்ளார்.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தந்தை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

வாழ்வை தேடிச்சென்ற இடத்தில் வாழ்க்கையை முடித்த ஈழத்தமிழ் இளைஞன் : துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது.

அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். “பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ.

உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் .

இதோ இன்று இன்னொரு இளைஞன். இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது என்றும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ இலங்கை இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார்.

இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது

இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை. ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌

இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி அனைவருக்கும் உணர்த்திச் சென்றுள்ளான்.

ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது எனவும் பேரவை வேதனை வெளியிட்டுள்ளது.

 

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரம்மாண்டமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு!!

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை பிரபஞ்சத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண் மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குவாசர் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் எனவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குன்றும் குழியுமாகக் காட்சியளித்த சாலை எமதர்மராஜா செய்த செயல்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், வீதிகளை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் வித்தியமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, உடுப்பி – மால்பே பிரதான வீதியில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்த சில ஆண்கள் வீதிகளில் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியுள்ளனர்.

வீதிகளை புனரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்தப் போராட்ட வடிவத்தை அவர்கள் முன்னெடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர்!!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டுபாயில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து விமானத்தின் ஊடாக பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் என்றும் கூறப்படுகின்றது.

 

வவுனியா பூம்புகார் மாணவர்கள் வடமாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் சாதனை!!

2024 ஆண்டு வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வவுனியா வடக்கு வலய பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் வவுனியா வடக்கு பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் க.சகிந்தன் 18 வயதுப் பிரிவில் 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும்,

பா.விழிவண்ணன் 800 மீற்றர், 1500 மீற்றர், 3000 மீற்றர் போட்டிகளில் 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் அவர் அரைமரதன் போட்டிலும் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் முதல் நிலைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது.

கிராமப்புறப் பாடசாலையாகவும் பொதுப் பேருந்துச் சேவையற்றதும், பொருளாதாரப் பின்னடைவுமுள்ள இப்பாடசாலையிலிருந்து வடமாகாண வெற்றியாளர்களாவது இலகுவான காரியமில்லை.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்ர் ஒருவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுட்ன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவராவார்.

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதிக்கு நேர்ந்த சோகம்!!

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதி இளைஞர்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.08) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது வைரவபுளியங்குளம், மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி நின்றது.

காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.