யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவிவரும் நிலையில் குடியிருப்பொன்றின் கூரைகள் வீசிய கடும் காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று(21.08.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகளே காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன.
இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையும் செயற்படுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இன்று (21.08.2024) மலைப்பாம்புகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சோதனையின் போது இலங்கைக்கு சொந்தமான முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஒன்றின் மாடியில் குறித்த விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இருவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விலங்குகள் விமானம் மூலம் பயணப்பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த முதலை இனம் இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் உள்ள ஏரியிலிருந்து பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த விலங்குகள் 300,000 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்பனைக்கு தயாராக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விலங்குகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்னர்.
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் லொறி – பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது, லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 11 இலட்சம் புதுப்பிக்க முடியாத டிரக் ஓட்டுநர் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் சலுகைக் காலத்தில் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். அதற்கு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, புதுப்பிக்க முடியாத இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் 10 லட்சம் உரிமங்களும் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மொத்தமாக 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 1000 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 3,000க்கும் மேற்பட்ட வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், 2023 ஆம் ஆண்டில், விபத்துகளில் குறைவாக காணப்பட்டதோடு, 2,214 வீதி விபத்துகளில் 2,321 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 2024 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 10 வரை 1,352 வீதி விபத்துக்களில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடத்தில் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு , காத்தான்குடி நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கடைசி நிமிடத்தில் நிதியுதவியை திரும்பப் பெற்றதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லிமாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகளில், இலங்கையைச் சேர்ந்த 12 இளைய தடகள வீரர்கள் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சகம், திடீர் நிதிப் பற்றாக்குறையை மேற்கோள் காட்டியதன் காரணமாக, விளையாட்டு வீரர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிடம் என்பவற்றை பெற்றுக்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
2024 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் களத்தை பொறுத்தவரை, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் போட்டியிட ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
பதினோராவது மணி நேரத்தில் அமைச்சகத்தின் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டமையால் மாற்று தீர்வுகள் அல்லது தனியார் அனுசரணையாளர்களை நாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பியன்சிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விமானங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 12 விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
எனவே அவர் இதற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.
மேலும் இரு பெண்களை காயப்படுத்தியதாகவும் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதலவத்த, லெவங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பணத் தகராறு தொடர்பாக தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், படுகாயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மனைவியும் மகளும் கூரிய ஆயுதத்தால் காயம்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் இன்று சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, திருகோணமலை,மன்னார்,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட சில இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது….
தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன். மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது.
இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார். இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார். பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர்.
மறுநாள்வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர்செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த வைத்தியரை பேசியிருந்தார். பின்னர்மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைகூடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர்.
பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள்.
அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம்.
எனினும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
எனவே வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது உள்ளக விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்குப்புறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் ஜஸ் போதைப் பொருளை பாவித்ததன் காரணமாக இவ் அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவத்தனர். அத்துடன் குறித்த மாணவன் இந்து மதகுரு ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு அனிதா, சுனிதா (19), புனிதா (17) என மூன்று மகள்கள் உள்ளனர்.
இவருடைய முதல் மகள் அனிதாவுக்கு அசோக் குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் சுனிதா 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மூன்றாவது மகள் புனிதா 10 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் தந்தை சுரேஷ் குமார் மகள்களை தேடியுள்ளார். இதையடுத்து, இருவரது உடல்களும் பிசுஷி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆற்றில் இருந்து சகோதரிகளின் உடல்கள் மீட்கப்பட்டது.
இருவரும் துணியால் கைகளை கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தந்தை சுரேஷ் குமார் கூறுகையில், “எனது மகள்கள் விபரீத முடிவு எடுத்ததற்கு முதல் மகள் அனிதாவின் கணவர் அசோக் குமார் தான் காரணம். அவர் தான் என்னுடைய மகள்களை தவறான முறையில் துன்புறுத்தியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா – மத்தியப் பிரதேசம், இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் உடல் பரிசோதனையின் போது நபர் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இந்தூரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு தனது உடல் பரிசோதனைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
இந்நிலையில், வைத்தியர் அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரழந்துள்ளார். இதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார். இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.
இதையறிந்த பெண்ணின் வீட்டார் பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த, சன்னு ராம் மிகவும் கோபமடைந்தார். மேலும், பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார். குறிப்பாக கல்யாணம் செய்தால் நீ என்னுடன் தான் செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் உன்னை கொடுக்க மாட்டேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பூஜாவின் தாய் பயந்து மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி அவளைப் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் தக்க நேரத்திற்கு காத்திருந்த சன்னு நேற்று வீட்டில் பூஜா தனியாக இருப்பதை அறிந்து நண்பர்களுடன் பின்பக்கமாக வீட்டுக்குள் புகுந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பூஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து புறப்பட்டு படிப்பதற்காக இந்த கல்லூரிக்கு வந்துள்ளார். ராமாபுரத்தில் உள்ள பிஜி ஹாஸ்டலில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார் சுகைல்.
அப்போது அவர் அங்கு உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பப்பில் தனது தோழிகளுடன் சுகைல் நடனமாடிக் கொண்டிருந்தார். தோழிகளுடன் பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த போதே திடீரென முகமது சுகைல் சுருண்டு கீழே விழுந்தார்.
திடீரென முகமது சுகைல் மயங்கி கீழே விழுவதைப் பார்த்து உடன் நடனமாடிக் கொண்டிருந்த அவரது தோழிகள் பதறியடித்தப்படி அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சுகைலைப் பரிசோதித்த மருத்துவர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப், கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது என்றும் ஒரு நபருக்கு உள்ளே நுழைவு கட்டணமாக மட்டுமே 1,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதும் தெரிய வந்துள்ளது. எனினும் கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் உட்கொண்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்து கிடக்கும் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.