வெல்லவாய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நேற்று முன்தினம் (15) வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவிகளில் ஒருவர் பாட வேலைக்காக கடந்த 14 ஆம் திகதி வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவியொருவரின் வீட்டிற்குக் சென்றுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் மறுநாள் (15) வியாழக்கிழமை காலை எழுந்து பார்க்கும் போது மாணவிகள் இருவரும் வீட்டில் இல்லாததை அறிந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மல்லாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் க்டந்த ஜூலை 30 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது.
மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது. குறித்த போராட்த்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டகாரர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகள் முன்னெடுக்கபடாவிடின், தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும்,வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பிங்கிரிய, மூகலன்ஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் ,விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். மகளின் கணவர் உயிரிழந்த பெண்ணை தேடிச் சென்ற போது நபர் ஒருவர் பெண் ஒருவரை தூக்கிச் செல்வதை பார்த்துள்ளார்.
மோட்டார் சைக்களில் வௌிச்சத்தில் குறித்த நபரை இனங்கண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி செயற்பட்ட பொலிஸார் நேற்று சந்தேகநபரை கைது செய்து சிலாபம் பொலிஸில் ஆஜர்படுத்தினர். கைதான சந்தேக நபர் வீரபொகுன பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரம், ஸ்ரீ புர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலக்கு வைக்கப்பட்டவருக்கு பதிலாக அப்பாவி இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியின் முறைகேடான கணவனை கொலை செய்வதற்காக வெளிநாட்டில் மறைந்திருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் கடத்தல்காரர் ஒப்பந்தம் ஒன்று வழங்கியுள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின்படி வந்த துப்பாக்கிதாரிகள், கொலை செய்யவேண்டிய நபரை போன்று சாயலை கொண்ட இளம் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஸ்ரீ புரா பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபுர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் விவசாயம் செய்து வந்த கே. டி. சந்தன மனோஜ் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்படவுள்ள நபரும், வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரியும் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிருகங்களிடமிருந்து நெல்லைப் பாதுகாப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் உருவமும், கொல்லப்பட்ட நபரின் உருவமும் ஒரே மாதிரியானவை எனவும், இந்த நபர் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
T56 ஆயுதத்தால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதுடன், தப்பியோடிய கொலையாளிகளை கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பல புலனாய்வுக் குழுக்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த பிராந்திய அலுவலகம் இன்று (16.08) திறந்து வைக்கப்பட்டது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியா, உள்வட்ட வீதியில் செயற்பட்டு வந்த நிலையில் போதிய இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இன்மையால் கடந்த 2 ஆம் திகதி முதல் அவ் அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, புதிய அலுவலகம் போதிய வசதிகளுடன் 24 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்பப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு சேவைகளும் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெறுவதற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், ஆட்பதிவு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் கிருபாகரன், பொலிஸ் அதிகாரிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (16.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் பத்மநாதன் டயான் (வயது 21) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை (14.08) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இம் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
’அப்பா… அம்மா… எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷன்புரா பகுதியில் வசித்து வருபவர் சவுரப். இவரது மனைவி மோனா. இந்த ஜோடிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
சவுரப் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் குழுவை நிர்வகித்தபோது, அவர்கள் கமிட்டியில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து வணிக நஷ்டத்தை எதிர்கொண்டனர். கடும் கடன் தொல்லையால், ஹரித்வாருக்குப் புறப்பட்ட தம்பதியர், கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடனில் சிக்கித் தவித்ததால் சோகமான முடிவை எடுத்துள்ளதாகவும், இரு குழந்தைகளும் தாத்தா, பாட்டி வீட்டில் தங்குமாறு வாட்ஸ்அப்பில் செல்ஃபி எடுத்து அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களது தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச் சேர்ந்த தம்பதியர் ரெஜி – பிரிஸ்லா. இவர்களது ஒரே மகள் எல்வினா ரெஜி(10). நேற்றிரவு று 9 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எல்வினா, திடீரென கழுத்தில் ஷால் சிக்கி இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி ஷால் வைத்து ஜன்னலில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
சிறுமியின் தாய் பிரிஸ்லா, விளையாடிக் கொண்டிருந்த எல்வினாவை இரவு உணவு சாப்பிட அழைக்கச் சென்றபோது, அவள் கழுத்தில் ஷால் மாட்டப்பட்டிருந்த நிலையில் படுத்திருந்தாள். ஷாலின் ஒரு பகுதி ஜன்னலிலும் மற்றொரு பகுதி எல்வினாவின் கழுத்திலும் கட்டப்பட்டிருந்தது. உடனடியாக பெற்றோர்கள் பதறியடித்தப்படி எல்வினாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சேலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, எல்வினாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினரும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவி எல்வினா ஷால் வைத்து ஜன்னல் கம்பிகளில் மாட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக ஷால் கழுத்தை இறுக்கியதில், மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வவுனியா பிரதான வீதி நவகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து இன்று (14.08.2024)காலை இடம்பெற்றுள்ளதாக வவுனியா, இரட்டைபெரியகுளம் பொலிஸார் கூறியுள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியுடன் வான் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை காலை வானில் செவ்வாய் – வியாழன் ( Mars-Jupiter) இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் ( Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் “இரட்டைக் கோள்” போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.
எனினும், இரவு வானில் சந்திரன் இணைவது பொதுவானது என்றாலும், இரு கோள்களுக்கு இடையே இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு அரிய இணைப்பு இன்று (14) இரவு 8.57 மணி முதல் இரவு 9.51 மணி வரை நிகழும் ஆனால் அந்த நேரத்தில், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலான கோண தூரம் ஒரு டிகிரிக்கும் குறைவானது ஆகும்.
ஆனால் அந்த காலப்பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தொடுவானத்தில் இருந்து எழாததால் நாளை (15) அதிகாலை 2 மணிக்கு பின்னர் இலங்கையர்கள் இணைவதை அவதானிக்க முடியும்.
அந்த நேரத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே கோண வேறுபாடு 19′ 29” ஆக அதிகரிக்கும். இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் மக்கள் சிறப்பாகக் அவதானிக்க முடியும். இருப்பினும், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே இந்த வகையான இணைப்பு 2033 ஆம் ஆண்டில் மீளவும் நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியை சேர்ந்த சுமித் பெர்னாண்டோ என்பவரே கைது செய்யப்பட்ட நிலையில் மஹர நீதிமன்ற நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மாகொல பகுதியை சேர்ந்த மனோஹரி பிரியங்கரி என்ற பெண் செய்த முறைப்பாடுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு பரிசு கிடைத்ததாக குறுந்தகவல் வந்ததாக களனிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் குமார நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுங்க அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திய சந்தேக நபர், சுங்கத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வருவதற்காக பணம் தேவை என பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அந்த பெண் குறித்த தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த மஹர இலக்கம் 02 நீதவான் ஜனித பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பல்பொருள் அங்காடியில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞர் ஒருவரின் உடல் 10 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோவாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் பல்பொருள் அங்காடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
இதன்போது, அங்கிருந்த குளிர்சாதனப் பேட்டி ஒன்றை அவர்கள் அகற்ற முயன்றபோது, அதன் பின்னால் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருந்துள்ளது.
உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித உடலைக் கைப்பற்றி DNA பரிசோதனைக்கு அனுப்பியதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 2009ஆம் ஆண்டில் காணாமல்போன Larry ely murillo-moncada என்பவரின் உடல் தான் அது என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் குளிர்சாதனப்பெட்டிக்கு பின்னால் சிக்கியதன் விளைவாகவே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் யூகித்துள்ளனர்.
எனினும், உயிரிழந்த இளைஞன் சிக்கியது விபத்தாக இருந்தாலும் அவர் உதவிக்கு அழைத்திருக்கக்கூடும். அது எப்படி கடைக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனது? அவரின் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு எழுந்த கேள்விக்கு விளக்கம் அளித்த பொலிஸார், உயிரிழந்த இளைஞன் 12 அடி உயரம் கொண்ட அந்த பாரிய குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வந்த சத்தத்தால், அதற்கு பின்னால் இருந்து அவர் எழுப்பிய குரல் கேட்காமல் போயிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இளைஞனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிய வைக்க கிராஃபிக்ஸ் காணொளி ஒன்றை தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.