17 மாணவர்களால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : அதிபர், ஆசிரியர்கள் அதிரடியாக கைது!!

தனமல்வில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் (12.08) உத்தரவிட்டது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

கொழும்பில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் : மில்லியன்கணக்கான பணம் மாயம்!!

கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் கையடக்கபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை அம்பலமாகி உள்ளது.

மோசடி செய்தமை தொடர்பில் நபர் ஒருவர் கைது செயப்பட்ட நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியை சேர்ந்த சுமித் பெர்னாண்டோ என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மாகொல பகுதியை சேர்ந்த மனோஹரி பிரியங்கரி என்ற பெண் செய்த முறைப்பாடுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு பரிசு கிடைத்ததாக குறுந்தகவல் வந்ததாக களனிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் குமார நீதிமன்றில் தெரிவித்தார்.

சுங்க அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திய சந்தேக நபர், சுங்கத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வருவதற்காக பணம் தேவை என பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அந்த பெண் குறித்த தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த மஹர இலக்கம் 02 நீதவான் ஜனித பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சகோதரனுடன் வீடு திரும்பிய சகோதரி பரிதாபமாக உயிரிழப்பு!!

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி தனது 16 வயதுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவியின் சகோதரன் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சகோதரனும் சகோதரியும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சகோதரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருமகளை திருமணம் செய்த மாமியார்!!

 இந்தியாவில் மாமியார் , தன் சொந்த மருமகளை திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது.

சில நாடுகள் தன்பாலி திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் , இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் இளைததளங்களில் வெளியாகி விவாத்தையும் தூண்டி விடுகின்றது.

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டதுடன் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர். இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார். தமது திருமண தொடர்பில் மாமியார் கூறுகையில், நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன்.

அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை. உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.

கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

 

கடவுச்சீட்டால் நின்றுபோன திருமணம் : வெளிநாடு செல்ல காத்திருந்த யுவதிக்கு அதிர்ச்சி!!

இலங்கையில் இருந்து திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான இலங்கை யுவதியொருவர் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்த மணப்பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு தயாரான குறித்த யுவதி இணையம் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

அதற்காக கைரேகை அடையாளங்களை வழங்க வந்தபோது, ​​குடிவரவு அலுவலக அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

அதேவேளை திட்டமிட்டபடி திருமணத்திற்கு வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள மணமகன் தெரிவித்ததையடுத்து குறித்த யுவதி அழுது புலம்பியவாறு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்.

எனினும் தற்போதுள்ள நடைமுறைகளுக்கமைய யுவதிக்கு கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதன்போது பிரச்சினைகளை தீர்க்க நியமிக்கப்பட்ட அதிகாரி நேரம் ஒதுக்கியவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளது.

கடவுச்சீட்டு கிடைக்காத காரணத்தால் யுவதி திட்டமிட்ட வகையில் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

 

காணாமல்போன யுவதி : உதவி கோரியுள்ள உறவினர்கள்!!

கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ ஒர்சட்வத்த பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா ஆயிக்ஷா எனும் இளம் யுவதி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல்போன யுவதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0777 302 372, அல்லது 0755 489 489 எனும் இலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காணாமல்போன யுவதியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மன்னார் சிந்துஜாவிற்கு நீதி கோரி வீதிக்கு இறங்கிய மக்கள் : தாய்க்கான போராட்டத்தில் பிஞ்சுக் குழந்தை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் பிஞ்சுக்குழந்தை

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருப்பு துணியால் தனது வாயை கட்டி, கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக அமுனதிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயான சிந்துஜா , நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ந்திருந்தார்.

இந்நிலையில் சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை குறித்த போராட்டத்தில் உயிரிழந்த சிந்துஜாவின் தாயார், சிந்துஜாவின் பிஞ்சுக்குழந்தையுடன் கலந்து கொண்டிருந்தமை பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க செய்திருந்தது .

 

மன்னாரில் உண்ணாவிரதத்தில் இறங்கிய வைத்தியர்!!

புதிய இணைப்பு : மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13.08.2024) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாம் இணைப்பு : மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகின்றோம். ஆகவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதி வேண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் அனைத்து உறவுகளையும் அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து இருவர் படுகாயம்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (12.08.2024) மாலை வேளை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணை

களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் வண்டிகளும், ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக கருவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்நேற்றைய தினத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (13.08.2024) தீடிரென அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி, இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை740,645 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,130 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 209,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 191,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.

19 வயது காதலியை தேடி சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர புர பிரதேசத்தை சேர்ந்த சமித் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

தங்களுடைய மகள் திருமணமான ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த குறித்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை, மஹவெவ தொடுவா பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .

இது தொடர்பாக தகவல் அறிந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி இரவு தனது காதலியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டருகில் சென்று மறைவாக இருந்துள்ளார் .

வீட்டுக்கு வெளியில் யுவதிசென்ற போது இளைஞன் வந்து அவரை அழைத்ததாக கூறிய உறவினர்கள், தனது காதலனைக் கண்டதும் யுவதி வீட்டுக்குள் ஓடிச் சென்றுள்ளார்.

இதன்போது இளைஞனை பிடிக்க வீட்டில் இருந்த சிலர் துரத்திச் சென்ற போது அவர் இருட்டிலேயே தப்பியோடிய நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் ஏதோ விழும் சத்தம் கேட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 

காதலனால் மாணவிக்கு நேர்ந்த கதி : பெண் ஒருவர் உட்பட பல மாணவர்களின் மோசமான செயல்!!

 

பாடசாலை மாணவி ஒருவரை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் நேற்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார். தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு முதல் முறையாக தவறான செயலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, தவறான செயலுக்கு உட்படுத்தி, அதனை காணொளியாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணொளியை பயன்படுத்தி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை குழுவாக இணைந்து தவறான செயலுக்கு உட்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் தெரியவந்துள்ளது.

தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற கேரளா குடும்பப் பெண்!!

கனடாவில் இடம்பெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளார்.

கடந்த மாத இறுதியில் மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது.

இதில் கேரள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

இதேவேளை இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார்.

அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார். பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

நாட்டில் பல பகுதிகளில் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் பயணிகள் படகு சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படும்.

தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13 ஆம் திகதி இயக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆனால், இதனையடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் அவர் சந்தித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பாலசூரிய (Chanaka Balasuriya) கடை ஒன்றை நடத்திவருகிறார்.

ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற, சிறிது நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

தன் கடைக்கு அருகிலுள்ள மசூதி ஒன்றின் முன் போராட்டக்காரர்கள் கூடியுள்ளதை அறிந்த பாலசூரிய, தன் கையடக்க தொலைபேசி மூலம், தன் கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளார்.

அப்போது, அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளது. கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.

ஆனால், அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்வதையும், கடையை பழுது பார்ப்பதையும் கண்டு பாலசூரிய திகைத்து நின்றிருக்கிறார்.

அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளதாகவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.

கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்கமுடிந்திருக்கிறது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது என அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு நம்பமுடியாத அளவில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.