கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி : பெற்றோர் வெளியிட்ட தகவல்!!

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து பரப்பப்படும் பொய்யான தகவல் குறித்து அவரது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாணவியின் மரணம் குறித்து வெளியான செய்திகளில் தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீடியோ கேம்களில் ஈடுபடுவது, பெற்றோரின் அழுத்தம், துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவது என பல பொய்யான காரணங்களை மகள் மீது சுமத்தியுள்ளனர்.

இதன்மூலம் மகளின் மரணம் குறித்து தவறான கருத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 2ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் நெருங்கிய தோழி எனவும் தெரிவித்துள்ளனர்.

இவரின் நெருங்கிய நண்பியும், நண்பரும் உயிரிழந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது கடுமையான மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரை மீட்டு சரியான பாதைக்கு கொண்டு வர நிபுணர்களின் உதவியைப் பெற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவி குணமடைந்து வரும் வேளையில் தனது பாடசாலையில் சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரப்பிய பொய்யான வதந்திகளினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தங்கள் மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், மற்ற மாணவர்களை தங்கள் மகளிடம் இருந்து ஒதுக்கிவைக்குமாறும் சில பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான பெற்றோர்களின் வதந்திகளாலும், அழுத்தங்களாலும் தனது மகள் மிகவும் வேதனையில் பொழுதை கழித்ததாகவும் இதன் காரணமாகவே அவரை வேறு பாடசாலைக்கு மாற்ற நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவளின் மீதான அழுத்தங்கள் அவளால் தாங்க முடியாத நிலையை எட்டி,மரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் நண்பியை தேடி சென்ற யுவதிக்கு இளைஞனால் நேர்ந்த கொடூரம்!!

முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி, அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு தனது நண்பியினை தேடி சென்ற போது நண்பியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த இளைஞன் வீட்டிற்குள் வரசொல்லி யுவதியினை அழைத்துவிட்டு யுவதியினை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இளைஞனிடமிருந்து தப்பி சென்ற யுவதி தனக்கு நடந்தவற்றை வெளியில் தெரியபடுத்தும் முன்னர் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுத்த வாய்முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் பெரும் சோகம் : நாடாளுமன்ற வேட்பாளர் திடீர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .

நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை (23) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பாக்கு விற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்!!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின் வயல்வெளி கரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான ஒருவகை பாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றது.

குறித்த வியாபார நிலையங்களிற்கு வருகை தரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான வீதிகளை அண்டி நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

பிரதானவீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள் சென்றுவருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது. இந்நிலமையில் அங்கு பாக்கினை கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகனநெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன் அடிக்கடி விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாக்கு விற்பனை நிலையங்களில் மாவா என்ற ஒருவகை போதைப் பாக்கு விற்பனை இடம்பெறுவதாக தெரிவித்து கடந்த காலங்களில் வவுனியா பொலிசாரால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள விடுதிகளில் காதலியை வைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி பாரியளவில் போதைப்பொருள் விநியோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நாரஹேன்பிட்டி ஆகிய பிரதான இரவு விடுதிகளில் நடனமாடும் தனது காதலியை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளார்.

கஸ்கிஸ்ஸ சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் பாரிஸ் என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 70,00000 ரூபாய் பெறுமதியான 35900 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 900 போதைப்பொருள் LSD முத்திரைகள் மற்றும் 18 எக்ட்ரீஸ் மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொக்கிளாய் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், கல்கிஸ்ஸ பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீட்டில் பலத்த பாதுகாப்பில் தங்கியிருநு்துள்ளார்.

கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடனமாடும் அவரது 23 வயது காதலி ஊடாக இரவு விடுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது காதலியுடன் வீட்டில் தங்கியிருந்த போது, ​​உப பொலிஸ் பரிசோதகர் சாமிக்க ஜயவீர உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாலைதீவு மற்றும் நைஜீரிய நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களை பெற்று, வீட்டில் இருந்து பொதி செய்து தனது காதலி மூலம் இரவு விடுதிகளுக்கு விநியோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பால் ஊற்றியவுடன் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி : அடுத்து நடந்த ஆச்சர்யம்!!

வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தில் 105 வயதில் மாரியாயி என்கிற மூதாட்டி வசித்து வருகிறார்.

இவருக்கு, 70 வயதில் சுப்பம்மாள், 68 வயதில் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 6 பேர பிள்ளைகள், 14 கொள்ளு பேர பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மூதாட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர், படுத்த படுக்கையாக இருந்ததால் இறந்து விடுவார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.

இதையடுத்து மகள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பால் ஊற்றினர். பின்னர், மாரியாயி எழுந்திருக்கவில்லை. இதனால் மாரியாயி இறந்ததாக நினைத்து உறவினர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினர்.

ஆனால், மாரியாயி கண்முழித்து எழுந்து மீண்டும் தன்னுடைய வழக்கமான பணியை செய்ய ஆரம்பித்தார். அப்போது, வெற்றிலை, பாக்கை சிறிய உரலில் போட்டு இடித்து வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்பர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, மாரியாயி இறந்துவிட்டதாக நினைத்து 3 பேர் மாலை கொண்டு வந்துள்ளனர்.

‘உங்களுக்கு அக்காவைத்தான் பிடிக்கும்’ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர்.

இதுக்கெல்லாமா தற்கொலை செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சாமராஜ் பேட்டை பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்தப் பகுதியில் வசித்து வரும் ஷ்ரவ்யாவுக்கு வயது 19. இவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது உடன் பிறந்த அக்காவுடன் சண்டை போட்டதில் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

திடீரென மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டார். பெட்ஷீட்டை வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அக்கா-தங்கை இடையே பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது ஷ்ரவ்யா தனது அக்காவுடன் அக்டோபர் 18ம் தேதி இரவு தனது அக்காவுடன் போர்வைக்காக சண்டை போட்டுள்ளார். பெற்றோர் இருவரையும் சமாதானமாக்கி தூங்க வைத்தனர்.

இந்நிலையில் ஷ்ரவ்யா பெட்ஷீட் பிரச்சனையை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றுப் பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கதறித் துடித்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஷ்ரவ்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம்பெண் விபரீத முடிவு எடுத்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாளில் பரிதாபமாக பலியான 3 வயதுச் சிறுவன்!!

பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறி 3 வயசு சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவரது மனைவி ஐஸ்வர்யா. கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வரும் இவருக்கு அகிலேஷ்(3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது.

இவர்களின் வீட்டுப் பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோட்டார் நீண்ட நாட்களாக பழுதாகி இருந்த நிலையில், அந்த மோட்டார் சரி செய்வதற்காக கழற்றி சென்றுள்ளனர்.

ஆனால் மோட்டரை சரி செய்வதற்காக கழற்றிச் சென்றவர்கள், அதற்கான வயர்களை முறையாக பாதுகாப்பாக வைக்காமல் ஆங்காங்கே அப்படியே தொங்கவிட்டப்படி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறியாத சிறுவர்கள் அந்த பகுதியில் தினமும் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவாக கீழே தொங்கிக் கொண்டிருந்த மின்ஒயரை தொட்ட நிலையில் அகிலேஷ் தூக்கி வீசப்பட்டான்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!!

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று (22.10.2024) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரு பேருந்துகளின் சாரதிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக அவிசாவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் தற்போது சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 216,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 199,500 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 216,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 199,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

அதேவேளை சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,733.61 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

பெண்ணின் வயிற்றில் 2 கத்தரிக்கோல் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து பெண்ணின் வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது.

அதை அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அது குறித்து பெண்ணிடம் விசாரித்தபோது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.

குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவ குழு, அந்த பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையைநடத்தி வயிற்றிலிருந்த 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் அந்த பெண் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பதுளை மாணவியின் விபரீத முடிவு : நண்பி கூறிய பரபரப்புத் தகவல்!!

பதுளை – மஹியங்கனை லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர் பதுளையில் வசிக்கும் ஜி.எச். திலினி உபேக்ஷா சண்டமாலி 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.

இரு நண்பிகள் வீட்டிவிட்டு வெளியேறிய நிலையில், ஒருமாணவி உயிரிழந்த நிலையில் மற்றய மாணவி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பதுளை கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் இரு மாணவிகள் தனியார் வகுப்பு சென்ற மகள்கள் வீடு திரும்பவில்லையென பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

இந்நிலையில் 20ம் திகதி இரவு 7.30 மணியளவில் பதுளை பகுதியிலிருந்து மொனராகலை பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 17 வயதுடைய பாடசாலை மாணவியை ரிதிமாலியத்த பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் கையளித்துள்ளார்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது தோழியுடன் நேற்று முன்தினம் (20) இருவரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து, காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பதுளை நகருக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அங்கிருந்து மஹியங்கனை பஸ்ஸில் ஏறி, கைபேசியில் இருந்த சிம்கார்டுகளை கழற்றி எறிந்துவிட்டு, மஹியங்கனை நகருக்கு வந்து, சாப்பாட்டு பார்சல் வாங்கி, பாதியை சாப்பிட்டு, மீதியை மீண்டும் பார்சல் செய்து பஸ்சில் சென்றுள்ளனர்.

பதுளை, லொக்கல்ல ஓயா ஏரி பந்தலுக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கி அதனை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது மீதமிருந்த சாப்பாட்டினை சாப்பிட்டனர்.

பின்னர், உயிரிழந்த மாணவி தனது புத்தகப் பையில் இருந்த புத்தகத்தில், ‘நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களைத் தேடாதீர்கள்’ என எழுதி வைத்துவிட்டு, இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்காக லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.

எனினும் ஒரு மாணவி தயங்க, மற்றைய மாணவி, இப்போது வீடு திரும்பினால் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் கேட்ட்டு நீர்த்தேக்கத்தில் குதித்ததாக உயிருடன் உள்ளமாணவி பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி தான உதவி கோரியதாகவும், இதனையடுத்து குறித்த நபர் சிறுமியை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (21) பிற்பகல் மஹியங்கனை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

அதேவேளை இந்த பாடசாலை மாணவி தனது தோழியுடன் தற்கொலை செய்து கொள்ள வந்ததற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு!!

தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச்சென்ற 17 வயதுடைய இரண்டு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, லொக்கலோ ஓயாவில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டிலிருந்து சென்ற மேற்படி இரண்டு மாணவிகளும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை தொடர்பில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கொலை மற்றும் தற்கொலை என தெரியவந்துள்ளது.

ஹலவத்த பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இளங்கரத்ன பண்டாவினால் இன்று பிரேதப்பரிசோதனையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த பிரேதப் பரிசோதனையில் இரண்டு பெண்களும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் தீயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்திருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்தவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இது இரட்டை கொலை மற்றும் தற்கொலை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தந்தையை பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

களுத்துறை நாகொட பிரதேசத்தில் 06 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், வீட்டில் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகன் இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது தந்தைக்கு 6 மாதங்களாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாக தந்தையை பார்ப்பதற்காக இத்தாலியில் இருந்து மகன் இலங்கை வந்துள்ளார். வீட்டுக்கு சென்ற மகன் கதவைத் திறந்தபோது, ​​உருகிய சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் மட்டுமே கட்டிலில் கிடந்ததனை மகன் அவதானித்துள்ளார்.

சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இவரின் தந்தையா என்பதை உறுதிப்படுத்த DNA என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே நிலவும் மழையுடனான வானிலை காரணமாகக் கொழும்பு மாவட்டத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.