கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி மாலை 4 மணியளவில் இரு பெண்களுடன் ஹோட்டலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
21 ஆம் திகதி காலை அறைக்குள் யாரோ நுழைந்து இந்த திருட்டை செய்துள்ளனர் என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸில் விசாரணை
தனது சுகாதார அட்டை மற்றும் இரண்டு கிரெடிட் கார்டுகளும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் லுனுகம்வெஹர பிரதேசத்தில் வசித்த 28 வயதுடைய சந்தமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் வரவேற்பறையில் ஜன்னல் துணியை பொருத்துவதற்காக ஆணியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது குழந்தை ஆணியை எடுத்து வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின் இணைப்பில் செருகியுள்ளது.
இதைப் பார்த்த மூத்த பிள்ளை கத்தி கூச்சலிட்டது. உடனடியாக தாயாரும் அலறியடித்தபடி சிறு குழந்தையின் அருகில் சென்று குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
பிளக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆணியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்ததால், தாயை காப்பாற்றுமாறு இரண்டு பிள்ளைகளும் கூச்சலிட்டனர்.
பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய பெண் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண்ணின் கணவர் கொழும்பில் பணிபுரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 – 23ஆம் திகதிகளுக்கு இடையில் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் உள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள், இலங்கைக்கு அறிவித்திருந்தன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சில காலத்திற்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர் என விசாரணைக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 50 லட்சம் ரூபா பணம் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ். சுன்னாகத்தில் 42 வயதுடைய தமிழர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைதை அடுத்தே அறுகம்பே தாக்குதல் தாயாரிப்புப் பற்றிய விவகாரம் அம்பலத்துக்கு வந்திருக்கலாம் என்று சில பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். சுன்னாகத்தைச் சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் சில காலம் இலங்கைச் சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகியுள்ளார்.
சிறையில் இருந்த சமயம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுக் கைதிகளுடன் இவருக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையானவர் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுடன் கூட்டிணைந்து மீண்டும் ஒரு நாசகார செயலுக்குத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குச் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முதல் இணைப்பு
இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள யூதர்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை அடுத்து, பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
தீவிர பாதுகாப்பு
இது குறித்து நேற்றையதினம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் 2023 (2024) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.10.2024(திங்கட்கிழமை ) நேற்று முன்தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பளையில் வைரவர் ஆலய சமூகம் மற்றும் கல்விக்கரங்கள் என்பவற்றின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக 8A பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் திறமைசித்திகள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பளையில் வைரவர் ஆலய முன்றலில் இருந்து அதிதிகள் சகிதம் மாலை அணிவித்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு பாடசாலை நுழை வாயிலிருந்து பாடசாலையின் பாண்ட் வாத்திய இசையுடன் மாணவர்கள் அழைத்து விழா மண்டபத்துக்கு வரப்பட்டனர்.
தொடர்ந்து பாடசாலை அதிபர் .திரு.க.பாஸ்கரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.து. லெனின் அறிவழகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக லண்டனில் வசிக்கும் பிரபல சட்ட ஆலோசகரும் எமது வ/குளவிசுட்டான் அ.த.க பாடசாலையின் பழைய மாணவருமான திரு.ந.இராசையா அவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களுக்கு பதக்கங்கள், நினைவுச் சின்னங்களும் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேற்படி மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் என்பன குளவிசுட்டானை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் உறவுகளின் மற்றும் பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில் கல்விக்கரங்கள் என்னும் அமைப்பினரின் நெறிப்படுத்தலுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய (23) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,893 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,400 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 227,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 26,040 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 200,000 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 216,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 199,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,751.59 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாணவன் உயிரிழப்பு தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, உயிரிழந்த மாணவன் பல்கலைக்கழகத்தில் மதுபானம் அருந்தியதாக தெரிவித்தார்.
நேற்றிரவு (22) மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுபான விருந்து நடைபெற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்பின் அனைவரும் விடுதிக்கு சென்றதோடு, மதுபோதையில் இருந்த மாணவனை சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுவிட்டு, ஏனைய நண்பர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதன்படி, குறித்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் ஜன்னல் ஊடாக கீழேேதவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற அறையை நீதவான் பரிசோதிக்க உள்ளதாகவும், அரசாங்க பரிசோதகர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் உரிய இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவனான பிரின்ஸ் ராஜூ பண்டார என்ற சென்டா எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
வங்கக்கடலில் டானா புயல் உருவானதால் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளிமண்டல சுழற்சி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணிக்கு “டானா” புயலாக மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல், ஒடிசாவின் பாரதீபுக்கு தென்கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கம் சாகர் தீவில் இருந்து தென்-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மற்றும் வங்காளதேசம் கெபுபாராவுக்கு தெற்கு-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இது நாளை அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரம் மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ்.
இவரது மனைவி சங்கீதா (34), மகன் ரோகித் (7), மகள் தர்ஷிகா (5). கொண்டலாம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த சங்கீதா, இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏட்டு கோவிந்தராஜூக்கு, பெண் போலீஸ் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்ததாகவும், அதனை கண்டித்தும் கணவர் கேட்காததால் இரண்டு குழந்தைகளையும் கொன்று சங்கீதா தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏட்டு கோவிந்தராஜிடம் கேட்டபோது, அவருடன் நட்பாகத்தான் பேசினேன் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு விஷ மாத்திரையை கொடுத்த சங்கீதா, பின்னர் இருவரையும் தூக்கில் தொங்க விட்டு கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
இதனிடையே குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பான வீடியோ ஒன்றையும் எடுத்து சங்கீதா கணவருக்கு அனுப்பியதாக புது தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் குழந்தைகளுக்கு விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து கொடுத்துள்ளார். பிறகு குழந்தைகள் இருவரும் தப்பிச் செல்லாத வகையில் அவர்களது கை, கால்களை கட்டிப் போட்டு வாயை செல்லோ டேப் போட்டு ஒட்டி பின்னர் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
இந்த தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த காட்சிகளை அவர் வீடியோவாக எடுத்து கணவருக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கீதாவின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருக்கு அனுப்பிய காட்சிகளை கோவிந்தராஜ் பார்க்காமல் வீட்டுக்கு அவசரமாக வந்துள்ளார். எனவே கோவிந்தராஜின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‘இரண்டு பேரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதில் என்னென்ன தகவல்கள் உள்ளது?, வீடியோக்கள் உள்ளனவா? அவை டெலிட் செய்யப்பட்டனவா? அப்படி செய்தால் அது யாரால் செய்யப்பட்டது என்பது பற்றி விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே இரண்டு செல்போன்களையும் சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அதில் இருக்கும் வீடியோவை சங்கீதாவே எடுத்தாரா? அல்லது வேறு யாரேனும் எடுத்தனரா எனவும் விசாரிக்கப்படும் என்றனர். ஒருவேளை இந்த சம்பவம் தற்கொலை இல்லாமல் மூவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கோயில்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் 56 வயது பாபு. இவருக்கு சுருதிபாபு(24) என்கிற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தனது மகள் சுருதிபாபுவை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்கு மண் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் – செண்பகவல்லி தம்பதியரின் மகன் கார்த்திக் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணம் முடிந்து பல கனவுகளுடன் தனது கணவர் வீட்டில் வாழ வந்த சுருதிபாபுவை அவரது மாமியார் மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
தனது மகன் மீது உள்ள அதீத பாசம், தன் மகன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற குறுகிய மனப்பான்மையில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பின்னரே சுருதிபாபு உணவு சாப்பிட வேண்டும், மகனுடன் சுருதிபாபு வெளி இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்லவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
மகனுடன் வீட்டில் சுருதிபாபுவை ஒன்றாக வாழவும் விடவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சுருதிபாபு, இது குறித்து தனது தாயாருக்கு வாட்ஸ்ஆப்பில் தெரிவித்துள்ளார்.
சுருதிபாபுவின் பெற்றோர் கோவையில் இருந்து மகளைப் பார்த்து சமாதானப்படுத்துவதற்காக சுருதிபாபுவின் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சுருதிபாபுவின் தந்தைக்கு உங்கள் மகள் தூக்கு போட்டு உயிரிழந்து விட்டார் என கார்த்திக்கின் சகோதரி தகவல் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சுருதிபாபுவின் தந்தை தனது மகளின் வீட்டிற்கு வந்தபொழுது உங்கள் மகள் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுருதிபாபுவின் கணவர் கூறியிருக்கிறார்.
தனது மகளின் மரணத்தல் மர்மம் இருப்பதாகவும் மாமியார் கொடுமைபடுத்தியுள்ளதாகவும் கூறி சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுருதிபாபுவின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இந்தப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து சில மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தலையாரி.
இவரது மனைவி முத்தம்மாள்(65). இந்த தம்பதிகளுக்கு மந்திரமூர்த்தி (40), சின்னத்துரை (30) என்ற 2 மகன்கள் உள்ளார். இதில் சின்னத்துரை கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வந்தார்.
சண்முகம் சில வருடங்களுக்கு இறந்துவிட்ட நிலையில் முத்தம்மாள் தனது மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் முத்தம்மாள் வீடு நேற்று திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் திருவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே முத்தம்மாள் அவரது மகன் சின்னத்துரை இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புதிய வீடு கட்டுவதற்காக முத்தம்மாள் வங்கியில் லோன் வாங்கி இருந்தாராம். ஆனால் அந்த லோனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் வங்கியில் இருந்து நெருக்கடி கொடுக்கவே முத்தம்மாள் மனம் உடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அப்போது வீட்டுக்கு வந்த சின்னத்துரை தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.
கடன் தொல்லையால் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிலவும் தேங்காய் விலையை கருத்திற்கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக கொழும்பு இன்று (23ஆம் திகதி) ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே, கடுவெல மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, ஒரு தேங்காய், 100 முதல், 120 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும், கிருலப்பனை பொது சந்தை மற்றும் நிதி அமைச்சின் வளாகத்திற்கு அருகில் நடமாடும் லொறிகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு பத்தாயிரம் (10,000) தேங்காய்களை சந்தைக்கு சேர்க்கப்படும் என்றும், பின்னர் திங்கள்,
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஒரு நாளைக்கு (5,000) தேங்காய்கள் படிப்படியாக சந்தைக்கு சேர்க்கப்படும் மற்றும் வாரத்திற்கு 15,000 தேங்காய்கள் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் ஒவ்வொரு நாளும் 1500 தேங்காய்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளதுடன், ஹலவட தோட்ட நிறுவனம் நாளை முதல் தினமும் 3000 தேங்காய்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்வதனை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதால் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதேவேளை, அறுகம்பை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் , மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்தான நிலையில் தற்போது நான்காவதாக தன்னைதானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டரை திருமணம் செய்த நிலையில் , 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்தார். அவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022-ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.அதில்,
இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பதிவிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இடிமின்னல் தாக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், நேற்றைய தினம் (22) உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான தென்னைமரம் ஒன்று பத்தி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.
சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று காணப்படுகின்றது.
இந்த கோபுரத்தில் தாக்கிய மின்னல் அருகில் உள்ள வீடொன்றிற்கு சொந்தமான தென்னை மரம் ஒன்றின் மீதும் தாக்கியுள்ளது.
அதேவேளை, வீட்டில் ஆட்கள் இல்லாத காரணத்தினால் வேறு எதுவிதமான சேதமும் ஏற்படவில்லை.
யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரம் அநாதரவாக 5 தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் தாவடிச் சந்திக்கு அருகே 5 தினங்களாக ஓர் கார் வீதியோரம் அநாதராவாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப் பொலிஸாரினால் எடுத்துச் செல்ல முடியவில்லை. எனினும், ஐந்து தினங்களுக்கு முன்னர் இந்தக் காருடன் ஒரு பெண் காணப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் காரின் உரிமையாளர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
முல்லைத்தீவில் (Mullaitivu) தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் அந்த தொலைபேசியினை திருத்தி திரும்ப பெற்றும் சென்றுள்ளார்.
இருப்பினும், யுவதியால் கொடுக்கப்பட் தொலைபேசியில் இருந்த படங்கள், குறிப்பாக யுவதியின் முக்கிய படங்கள் திருடப்பட்டு இன்னொரு இளைஞனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞன் யுவதியினை தொடர்பு கொண்டு அவரின் அந்தரங்க படங்களை அனுப்பி மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் தரப்பினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.