சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இலங்கை வீரருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் நிலுக கருணாரத்ன காணப்படுகிறார்.

‘விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது’ என பரிஸ் ஒலிம்பிக் நகரிலிருந்து நிலுக தெரிவித்தார்.

நிலுக 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் (2012, 2016, 2020) பங்குபற்றியவராவர்.

அத்துடன் பல்வேறு சர்வதேச பட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியவராவார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளால் IOC ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்களிப்பின் மூலம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிறிஸ்பேனில் 2032இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவரை 8 வருடங்களுக்கு செயற்படும்.

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இக் குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்திரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

 

இலங்கையில் நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கர்ப்பிணிப் பெண்!!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்த போதும், வீதியால் சென்ற எவரும் உதவி செய்யாமையால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் அழைத்துச் செல்லப்படாததால் அவரும் அவரது ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த பெண்ணுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“ஒரு குழந்தையின் தாயும் ஒரு மாணவியுமான பிரமோதா, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் இறந்தார். இறுதி அஞ்சலி செலுத்த பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்த போது எனது இதயம் நொருங்கிப் போனது.

அவர் இறக்கும் போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் மடியில் குழந்தையின் சிறிய உடலைப் பார்த்தேன். அது தாங்க முடியாத வேதனை.

மூத்த மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர் பாடசாலைக்கு அழைத்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது. விபத்து நடந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததுதான் இங்கு மிகவும் அதிர்ச்சிகரமான காரணமாகும்.

நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்த வீதியில் யாராவது முன் வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், அவரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தை பார்த்து பலரும் விபத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த விபத்தை பலர் வாகனங்கள் நிறுத்தி பார்த்தனர். தங்களுக்கு பிரச்சினை வராதவரை அடுத்த விடயங்களை சம்பவங்களாக பார்க்கும் மக்கள் மற்றும் வாகனத்தில் ஏற்றினால் இரத்த கரையும் என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா? இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என நினைத்து அழைத்து செல்லவில்லையா என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடிவில்லை.

மனிதனே, உன் மனிதாபிமானத்தை எங்கே மறைத்தாய்?” என அவர் பதிவிட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி!!

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி மூடைகளை இறக்கிவிட்டு அட்டன் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து அப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விறகு கொட்டகையில் தூக்கிட்டு (08) உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் வசித்து வந்த முருகானந்தன் அபிஷேக் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நோர்வூட் டன்கன் தோட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 09ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக கூறப்படுகின்றது.

பல நாட்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்லாததால் பெற்றோர் அவரை (08) பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பாடசாலைக்கு செல்லாத மகன் தொடர்பில் பெற்றோர்கள் தேடலை மேற்கொண்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 199,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,380 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றமை தங்க நகை வாஙக் காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனையிறவு விபத்தில் உயிரிழந்தவர் விபரம் வெளியானது!!

கிளிநொச்சி – ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு ரெட்பாரா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

நீர்கொழும்பு நகரில் சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் முறையான அனுமதி இன்றி இந்த ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சீஷெல்ஸ் மாநில சிறைகளில் பணிபுரிவதற்காக வழங்கப்பட்ட 6 கடவுச்சீட்டுக்கள் மற்றும் அது தொடர்பான 6 விண்ணப்பங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் இன்று (08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் பணிபுரிய இலங்கையர்களை அனுப்பும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதால், வேலைக்காக அனுப்பப்படுவதாக கூறி பணம் பெறும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக விரும்புவோருக்கு www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ, எந்தவொரு முகவர் அல்லது கடவுச்சீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வழங்குவதற்கு முன் தகவல்களைப் பெறுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

 

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண்ணை கொலை செய்த கணவன்!!

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நேற்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை தாக்கியபோது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும், தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் 19 வயது மகன் தினுஷ் குரேரா, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய குறித்த இளைஞன் நேற்று 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும் முயற்சியை தடுத்ததையும் மகன் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

 

தாய் வெளிநாட்டில் – மகனுக்கு தந்தை செய்த கொடூரம்!!

காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன, பரமுல்லகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், தாய் ஓமானில் பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி மாலை அளுத்ஹேன பிரதேசத்தில் விளையாடச் சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்த போது, ​​குடிபோதையில் இருந்த தந்தை, சிறுவனை திட்டியுள்ளார்.

அதையடுத்து, மகனும் தந்தையை திட்டியதால், ஆத்திரமடைந்த தந்தை, மகனின் முகத்தில் சூடு வைத்துள்ளார்.

மகனின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தொடங்கொட பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், ஜே.ஆர்.எஸ். அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம்(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அந்த வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த பேரனான மாணவனும்,வயோதிபரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம்(08) மாலை படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.  அத்துடன், கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்!!

சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

நடைபெற்றுவரும் பரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று (08.08) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் தடகள வீரர் அர்ஷத் நதீம் குறித்த தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

நதீமின் முதல் எறிதலானது எல்லைக்க அப்பால் சென்றதால், அது தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர் தனது இரண்டாவது எறிதல் 92.97 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வெல்ல வழி வகுத்தது.

இந்த போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சொப்ரா 2ஆவது இடத்தையும், Grenada நாட்டு வீரரான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு.. கணவன் இறந்த 3 மாதத்தில் விபரீதம்!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவரது மனைவி கற்பகம் (42). இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் வாடகைக்கு சென்று மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தாய், மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், 12-ம் வகுப்பு முடித்துள்ள சுபிக்ஷா மற்றும் அவரது தாயார் கற்பகம் ஆகிய இருவரும் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கடன் கேட்டு வந்த நபர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து வேறுபாட்டால் ஒரே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. பறிபோன இருவரின் உயிர்!!

கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 29). இவர் அந்த பகுதியில் துணிகடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதாஸ்ரீ (20), இந்த பெண் பியூசி படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதுபற்றி இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று அவர்களுக்கு இருவீட்டார் முன்னிலையில் ஆண்டர்சன்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மாலையில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இருவீட்டாருடன் சந்தோசமாக பேசி உள்ளனர். பின்னர் புதுமண தம்பதி உறங்குவதற்காக வீட்டின் ஒரு அறைக்குள் சென்றுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அறையில் இருந்து லிகிதாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அறைக்கதவை திறந்துள்ளனர். அப்போது நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் பதறியடித்த படி அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் லிகிதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவீன் பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி நவீன் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது புதுமண தம்பதியான நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதும், வீட்டின் அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதும் தொடர்ந்துள்ளது.

அப்போது தம்பதி இருவரும் அங்கிருந்த கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக குத்திக் கொண்டுள்ளது தெரிந்தது. இதுகுறித்து நவீன் பக்கத்து வீடுகளில் வசித்து வந்த விசாலாட்சி மற்றும் பவித்ரா ஆகியோர் கூறுகையில், நவீன், லிகிதாஸ்ரீ 2 பேரும் பல ஆண்டுகள் காதலித்து வந்தனர்.

அவர்கள் விருப்பப்படி திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் அவர்களிடையே உண்டான வாக்குவாதம் 2 பேரின் உயிரையும் பறித்துவிட்டது.

வாழவேண்டும் என நினைத்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்குவதற்குள் காதல் தம்பதி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினர்.

தம்பதியின் தாக்குதலுக்கு முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர். கருத்து வேறுபாடு காதல் தம்பதியின் கதையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது வேதனை அளிக்கிறது.

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு பயிற்சி!!

வவுனியா வடக்கு வலய சாரண ஆசிரியர்களுக்கு கலைக்கூறு -1 பயிற்சியானது இரு தினங்களாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்திய கல்லூரியில் இப் பயிற்சியானது நேற்றும் (08.08), நேற்று முன்தினமும் (07.08) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலமையில் இடம் பெற்ற இப்பயிற்சியில் பயிற்சித் தலைவராக ப.அஜித்குமார், உதவிப் பயிற்சி தலைவர்களாக ரா.வரதராஜா, யோ.கேதீசன் ஆகியோரும் பயிற்சிநெறியை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில், வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர், உதவி மாவட்ட ஆணையாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா கோமரசன்குளம் பாடசாலையில் சரஸ்வதி மற்றும் மாதா சிலைகள் அமைக்க எடுத்த முயற்சியால் குழப்பநிலை!!

வவுனியா, கோமரன்குளம் பகுதியில் பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்த நிலையில் அங்கு குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

வவுனியா, கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் அதிகமாக இந்து மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், குறித்த பாடசாலை காணப்படும் அயலில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் என்பவற்றுக்கான காலை பிரார்த்தனை வழிபாட்டிடங்கள் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக காணப்பட்டு வரும் நிலையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்து வழிபாட்டு படங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் பாடசாலையின் பழைய மாணவர்கள் இந்து மாணவர்களின் வழிபாட்டிற்காக சரஸ்வதி சிலை ஒன்றினை சிறிதாக வைப்பதற்கும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாதா சிலை ஒன்று வைப்பதற்கும் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த பாடசாலையில் மத சிலையை வைக்க கூடாது எனவும் இது கிறிஸ்தவம், இந்து மதங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அப் பகுதி மதபோதகர் உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மதபோதகரால் கடிதம் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்து சிலை அமைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் இரு மத சிலைகளும் வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்து பிள்ளைகள் அதிகமாக கற்கும் பாடசாலையில் வழிபாட்டு உரிமை இல்லையா எனவும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக மதபோதகர் சதாஸ்கரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விடயம் குறித்து நானும் கேள்விப்பட்டேன் எனத் தெரிவித்தார். கடிதம் கொடுத்தமை தொடர்பில் கேட்ட போது, அது பாடசாலைக்கு தானே கொடுத்தது உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : மல்லாவி இளைஞன் கைது!!

வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (08.08) தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகார் ஜெயக்கொடி வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டார் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.