17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பி்ள்ளை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். உறவை நிறுத்துமாறு பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (07) அலவத்தன்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
கொழும்பு – ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று(06.08.2024) இடம்பெற்றுள்ளது.
தரம் 1 முதல் தரம் 5 வரை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொதியில் இருந்த மீன் குழம்பிலேயே புழுக்கள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தேசிய பாடசாலையில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று (06.08) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவுப் பொதியை உண்ணாமல் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் உணவுப் பொதியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த மீன் குழம்பில் புழுக்கள் இருந்ததை அவதானித்த பெற்றோர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் வினவியபோது, சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பிள்ளையின் தாயான பட்டதாரியான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மனார் வைத்தியசாலையில் சிசு பிரசவித்து சிறிது நாட்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டிருந்த இளம் தாய் உயிரிழந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததை அடுத்து, சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
சம்பவத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த பெண்ணின் மரணத்திற்கு சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் கூறினார்.
மேலும் அந்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.
கொளத்தூர் பகுதியில் தாய் கண்முன்னே நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக, நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலேக்கர் (38). திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி.
இவர்களது மகன் கிருத்திக் சபரீஸ்கர் (10). சிறப்பு குழந்தையாக வளர்ந்து வந்த சிறுவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக கொளத்தூர், அசோகா அவென்யூ பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் பயிற்சி மையத்தில் சிறுவனுக்கு வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் வழக்கம்போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பயிற்சிக்காக விட்டுள்ளனர். சிறுவனின் தந்தை அலுவலக நிமித்தமாக காரில் அமர்ந்தபடி லேப்டாப்பில் வேலை செய்துள்ளார். தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் முறையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீச்சல் பயிற்சியாளர் சிறுவனுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், எனது மகன் நீரில் மூழ்குகிறான், என்னவென்று பாருங்கள் என பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், பயிற்சியாளர் பார்ப்பதற்குள் சிறுவன் கிருத்திக் சபரீஸ்கர் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளான்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் ராணி, செல்போன் மூலம் தனது கணவரை அழைத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சிறுவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை அழுதபடி சம்பந்தப்பட்ட நீச்சல் பயிற்சி மையத்திற்கு வந்து, அங்கிருந்த நீச்சல் பயிற்சி மைய மேலாளர் மற்றும் பயிற்சியாளரிடம் ‘நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி எனது மகனை சாகடித்து விட்டீர்களே’ எனக்கூறி அழுதனர்.
இந்த தகவல் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அவினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது. குழந்தைக்கு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின்படி, குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
அதன்பின்னரே விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார்.
வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ஆசிமின் மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சிரேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ”திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் அவரை கொன்றேன்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்த கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் அளவுக்கு மனிதன் தற்போது முன்னேறிவிட்டான். இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தும், இன்னும் சில பகுதிகளில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.
சில பழங்குடியினர் விசித்திரமான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். ஆப்பிரிக்காவில் சில பின்தங்கிய நாடுகளின் பழங்குடியினரிடம் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
இதேபோன்ற ஒரு விசித்திரமான வழக்கம் இப்போது இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த விசித்திரமான வழக்கம் என்ன என்று பார்ப்போம்.
உகாண்டாவில் உள்ள பன்யன்கோல் (Banyankole) பழங்குடியினரிடையே இந்த விசித்திரமான வழக்கம் உள்ளது.
அந்த வழக்கப்படி திருமணத்திற்கு முன் மணமகன் தனது பாலியல் திறனை நிரூபிக்க வேண்டும். ஆம் இது விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மைதான்.
மேலும், மணமகனின் பாலியல் திறனை யார் சோதிக்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஏனெனில் மணமகளின் தாயே மணமகனின் பாலியல் திறனை சோதிக்கிறார்.
பன்யன்கோல் பழங்குடியினரில், சிறுமிகளுக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஆனால் அந்த பெண்ணின் தாயார் தனது மகளுக்கு பொருத்தமான பையனை காதல் ரீதியாக கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதற்காக தன் பெண்ணைக் கொடுக்க விரும்பும் பையனின் பாலியல் திறனை அவளே சோதிக்கிறாள்.
மணப்பெண்ணுக்கு தாய் இல்லையென்றால், அந்தத் தாயின் மூத்த சகோதரியோ, தங்கையோ அந்தப் பொறுப்பை ஏற்பார்கள். அவர்கள் இல்லை என்றால், மணமகளின் மூத்த சகோதரி வேலை செய்வார்.
பாலியல் திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவருக்கு மணமகள் வழங்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும். இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படும்.
மணமகனின் பாலியல் திறனை சோதித்த பெண் மணமகளுக்கு அவனது பலம் மற்றும் பலவீனத்தை விளக்குகிறார். மேலும், முதலிரவில் அவளும் அந்த இளம்பெண்ணுடன் அறைக்குள் செல்கிறாள்.
புதுமணத் தம்பதிகளை இரவு முழுவதும் பின்தொடர்ந்து, அவர்களின் முதல் இரவை வெற்றியடையச் செய்ய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குகிறார்.
அந்த பழங்குடியின மக்கள் இன்றும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நௌஃபல் என்று இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாளாய் நிற்கிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய கிராமமான முண்டக்கையில் இருந்து ஓமன் சென்றுள்ளார்.
இவர், தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட உயிருடன் இல்லை.
இந்த நிலச்சரிவில் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள், சகோதரன், மைத்துனர் மற்றும் அவர்களது குழந்தைகள் என 11 பேரையும் இழந்து நிற்கிறார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு வந்து பார்க்கையில் வீடு இருந்த பகுதியில் வெறும் மணல் குவியல்தான் இருக்கிறது. வெளிநாட்டிற்கு செல்லும் போது அவர்களை பார்ப்பது தான் கடைசி என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விமானப் பயணத் தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான குறித்த பெண், தன்னை வைத்தியர் என கூறிக்கொள்வதாகவும், இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று, இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தனது 6 வயது மகளை அருகில் வைத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதங்களாக வீட்டை விட்டுப் பிரிந்திருந்த மனைவியை கொன்றுவிடுவதாக வீடியோவில் மிரட்டியுள்ளார்.
மிரட்டும் வீடியோவையம் தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ளார். தனது மனைவி எந்த நேரத்திலாவது இந்த வீடியோவை பார்ப்பார் என்ற எண்ணத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மல்வனேகம – எல்லாவ கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜயக்கொடி ஆராச்சிலகே சமன் கருணாரத்ன என்ற இளைஞரே ஆவார்.
கடந்த மே மாதம் 24ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மனைவி இல்லாத காரணத்தால், இந்த சந்தேக நபர் தனது மகளுடன் வீடியோ எடுத்ததுடன், மனைவியையும் குழந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. சிறுமியின் தாய் தன்னையும் மகளையும் கைவிட்டுச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தம்புத்தேகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் வங்களில் நிலையான வைப்புக்களை வைத்துள்ள சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதங்களை அதிகரிக்க நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நிலையான வைப்புக்களுக்கான 8.5 வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை காரணமாக அதிகளவான சிரேஷ்ட பிரஜைகள் தமது நிலையான வைப்புக்களிலிருந்து பணத்தை மீற பெற்றுக்கொள்ளவதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் 60 வயதிற்குட்பட சிரேஷ்ட பிரஜைகளால் நிலையான வைப்பிலிடப்படும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு பத்து வீத வட்டி வழங்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
நாட்டில் மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனை தருசி கருணாரட்ன சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கியுள்ளார். தருசி தான் போட்டியில் பங்கேற்பதற்காக பயன்படுத்திய ஆடையொன்றை இவ்வாறு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த ஆடை (competition kits) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. சுவிட்சர்லாந்தின் லுசானோவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
தருசியின் நன்கொடையை பாராட்டும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நற்சான்று பத்திரமொன்றை வழங்க உள்ளது. இனிவரும் காலங்களில் தருசி போட்டியில் பயன்படுத்திய ஆடை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஒரு நாளினுடைய அளவு 25 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் Wisconsin madison பல்கலைக்கழகம் பூமிக்கும் நிலவுக்குமான வரலாற்று தொடர்பையும் அது எவ்வாறு பல மில்லியன் வருடங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது எனவும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கமைய நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாகவும் இதனால் ஒரு நாளினுடைய அளவு 24 மணித்தியாலங்களில் இருந்து 25 மணித்தியாலங்களாக மாறும் எனவும் ஒரு நாளினுடைய இரவு அல்லது பகலின் அளவு மாறும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை ஒரு வருடத்துக்கு 3.8 சென்ரிமீட்டர் அளவு படிப்படியாக நிலவு பூமியிலிருந்து விலகி செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வானில் இருக்க கூடிய இரு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு தொடர்பால இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
பூமியின் புவியியல் கடந்த காலத்தை பற்றிய நுண்ணறிவுகளை பெற ஆராய்ச்சியாளர்கள் சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை அமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.
நிலவின் தாக்கத்தால் பூமியின் சுழற்சி இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாக கொண்டு இந்த ஆய்வை செய்ததாக கூறியுள்ளனர்.
இதனூடாக ஏறக்குறைய 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவுடன் பூமியின் உறவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நிலவு, பூமியிலிருந்து விலகி செல்லும் தற்போதைய விகிதம் இவ்வாறே தொடர்ந்தால், பூமியில் ஒரு நாளின் நீளம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் 25 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாம நிலவு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, இந்த செயல்முறை படிப்படியாக நடைபெறும் என்றும் ஆனால் நிலவு இரவு வானில் இருந்து விரைவில் மறைந்துவிடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.